Investment Scam: ஆளுக்கு ரூ.50 லட்சம்; ரூ.1500 கோடி இழந்த பெருநகர பணக்காரர்கள்!
மேட்டூர் அணையில் நீர் திறப்பு; காவிரி கரையோரம் வசிக்கும் மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை
காவிரி நீர் பிடிப்புப் பகுதிகளில் கனமழை பெய்து வருவதால், மேட்டூர் அணையின் நீர்மட்டம் தனது முழு கொள்ளளவான 120 அடியை எட்டியுள்ளது. மேட்டூர் அணை நிரம்பியுள்ளதால் அணைக்கு வரும் நீர் முழுவதுமாக உபரிநீராக வெளியேற்றப்பட்டு வருகிறது. கடந்த 20-ம் தேதி பிற்பகலில் மேட்டூர் அணை அதன் முழு கொள்ளளவான 120 அடியை எட்டியது. அதனைத் தொடர்ந்து அணைக்கு வரும் நீர் வரத்து முழுமையாக வெளியேற்றப்பட்டு வருகிறது. நேற்று மாலை காவிரியில் விநாடிக்கு 45 ஆயிரம் கன அடி தண்ணீர் திறக்கப்பட்டு வந்தது.

இந்த நிலையில் அணைக்கு நீர் வரத்து மேலும் அதிகரிப்பால் மேட்டூர் அணையிலிருந்து வெளியேற்றப்படும் நீர், இரவு 11.00 மணி முதல் 45,000 கன அடியிலிருந்து 55,000 கன அடியாக அதிகரிக்கப்பட்டது. அணை மின் நிலையம் மற்றும் சுரங்க மின் நிலையம் வழியாக 22,500 கன அடியும், எல்லிஸ் உபரி (16 கண் மதகு) வழியாக 32,500 கன அடியும் திறக்கப்பட்டுள்ளது.
திறந்து விடப்படும் தண்ணீரின் அளவு படிப்படியாக விநாடிக்கு 60,000 கன அடி வரை அதிகரிக்கப்படலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே காவிரி கரையோரம் மற்றும் தாழ்வான பகுதிகளில் வசிக்கும் மக்கள் அனைவரும் பாதுகாப்பான இடங்களுக்குச் செல்லுமாறும், அவர்களின் உயிர் மற்றும் உடைமைகளின் பாதுகாப்பு மற்றும் பாதுகாப்புக்கான அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் மேற்கொள்ளுமாறும் நீர்வளத் துறை சார்பில் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
















