செய்திகள் :

ராமதாஸ் குலதெய்வம்; அன்புமணி எதிர்காலம்: முகுந்தன்

post image

ராமதாஸ்தான் என்றென்றும் எனது குலதெய்வம் என்று பாட்டாளி இளைஞர் சங்கத் தலைவர் பதவியிலிருந்து விலகுவதாக அளித்தக் கடிதத்தில் முகுந்தன் தெரிவித்துள்ளார்.

பாமக தலைவர் என்று அன்புமணி பெயருக்குத்தான் முகுந்தன் இந்தக் கடிதத்தை அனுப்பியிருக்கிறார்.

பாமகவில் தந்தை - மகன், நிறுவனர் - தலைவர் இடையே கருத்து வேறுபாடு வெடிக்கக் காரணமாக இருந்ததாகக் கூறப்படும் முகுந்தன், இன்று கட்சிப் பதவியிலிருந்து விலகுவதாக கடிதம் அனுப்பியிருக்கிறார்.

முகுந்தன் அனுப்பியிருக்கும் கடிதத்தில், பாமக இளைஞரணியான பாட்டாளி இளைஞர் சங்கத்தின் தலைவராக கடந்த 2024ஆம் ஆண்டு நியமிக்கப்பட்டேன். சொந்த காரணங்களுக்காக அந்தப் பொறுப்பிலிருந்து விலகிக் கொள்கிறேன்.

மருத்துவர் ராமதாஸ் அவர்கள்தான் என்றென்றும் எனது குலதெய்வம், மருத்துவர் அன்புமணி ராமதாஸ் ஆகிய தாங்கள் தான் எங்கள் எதிர்காலம் என்ற உணர்வுடன் தொடர்ந்து கட்சிப் பணியாற்றுவேன் என்று உறுதியளிக்கிறேன் என்று கடிதத்தில் தெரிவித்துள்ளார்.

பாமக நிறுவனர் ராமதாஸின் மகள் காந்திமதியின் மகனான முகுந்தனுக்கு, கட்சிப் பதவி வழங்கப்பட்டதே, ராமதாஸ் - அன்புமணி இடையே மனக்கசப்பு அதிகரிக்கக் காரணமாக அமைந்துவிட்டது.

இது கட்சியின் அடுத்தடுத்துக் கூட்டங்களின்போது வெளிப்படையாகவே தெரிய வந்தது. கட்சித் தலைவர் நானே என்றும், அன்புமணி செயல் தலைவர் என்றும் ராமதாஸ் அறிவித்தார். இது பெரும் சலசலப்பை ஏற்படுத்தியிருந்தது. அண்மையில், நடைபெற்ற மாவட்டச் செயலர்கள் கூட்டத்திலும் அன்புமணி பங்கேற்காமல் தவிர்த்துவிட்டார். தலைவர் பதவியிலிருந்து அன்புமணியை இறக்கியதற்கான காரணத்தை அப்போது தெரிவிக்காத ராமதாஸ், கூட்டணி குறித்து தானே முடிவு செய்வேன் என்றும் தெரிவித்திருந்தார்.

இதைத் தொடர்ந்து தருமபுரி மாவட்டம், கடத்தூரில் பாட்டாளி மக்கள் கட்சியின் மூத்த நிா்வாகி கனல் ராமலிங்கம் நினைவேந்தல் கூட்டம் சனிக்கிழமை நடைபெற்றது. இதில் பங்கேற்று அன்புமணி ராமதாஸ் பேசுகையில், கடந்த ஒருமாதகாலமாக எனக்கு கடும் மன உளைச்சல் உள்ளது. நான் என்ன தவறு செய்தேன், ஏன் பதவியிறக்கம் செய்யப்பட்டேன் என்பது தெரியவில்லை. நானறிந்து ஒரு தவறும் செய்யவில்லை. பாட்டாளி மக்கள் கட்சியின் நிறுவனா் தலைவா் மருத்துவா் ராமதாஸ் நோக்கத்தை நிறைவேற்றும் வகையில்தான் நான் செயல்பட்டு வருகிறேன். இனியும் அவ்வாறுதான் செயல்படுவேன் என்றாா்.

இதற்கு விளக்கம் அளிக்கும் வகையில், இன்று தைலாபுரத்திலிருந்து செய்தியாளர்களை சந்தித்த ராமதாஸ், அன்புமணிதான் தவறு செய்தவர். தவறான ஆட்டத்தை ஆட துவங்கி முதலில் அடித்து ஆடியதும் அன்புமணிதான். நான் போகிற போக்கில் எதையும் சொல்லவில்லை ஆதாரப்பூர்வமாக தான் அனைத்தையும் சொல்கிறேன்.

புதுச்சேரி பொதுக்குழுவில் மேடை நாகரிகமும், சபை நாகரிகமும் இல்லாமல் எடுத்தேன் கவிழ்த்தேன் என நடந்து கொண்டது யார்?

வீட்டில் எனக்கு உதவியாகவும், கட்சியில் அன்புமணிக்கு உதவியாகவும் இளைஞர் அணி தலைவராக முகுந்தனை நியமித்து அறிவிப்பு வெளியிட்டேன். சுவரில் வீசிய பந்து போல, உடனே மேடையிலேயே எதிர்ப்பு தெரிவித்தது சரியான செயலா?

வளர்த்த கடாவே மார்பில் வீறுகொண்டு பாய்ந்ததில் நான் நிலைகுலைந்து போய்விட்டேன். அன்புமணி தொடர்ந்து கட்சி வளர்ச்சிக்கு இடையூறாக இருந்து பல தவறுகளை செய்து வந்தார்.

2024 தேர்தலில் அதிமுக கூட்டணி வேண்டும் என்று விரும்பினேன். அன்புமணியும், எடப்பாடி பழனிசாமியிடம் பேசி கூட்டணியை உறுதி செய்திருந்தார். ஆனால், அன்புமணி மற்றும் சௌமியா இருவரும் திடீரென தைலாபுரம் வந்து பாஜக கூட்டணிதான் வேண்டும் என்று காலைப் பிடித்து அழுதனர்.

இருவரும் நீண்ட நேரம் அழுததால் என்னால் வேறு ஒன்றும் செய்ய இயலவில்லை.

அதிமுக-பாமக கூட்டணி என்பது இயல்பான கூட்டணி. இது அமைந்திருந்தால் பாமக 3, அதிமுக 7 இடங்களில் வென்றிருக்க கூடும்.

பாஜகவுடன் கூட்டணி வேண்டாம் என்றால் நீங்கள்தான் எனக்கு கொள்ளி போட வேண்டும் என்று அன்புமணி கூறினார் என்று அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளை இன்று வெளியிட்டார்.

இந்த சலசலப்பு அடங்குவதற்குள், முகுந்தன் பதவி விலகல் கடிதம் வெளியாகியிருக்கிறது.

கச்சத்தீவை மீட்க வேண்டும்: திமுக பொதுக்குழுவில் 27 தீர்மானங்கள் நிறைவேற்றம்

மீனவர்கள் நலன் காக்க கச்சத்தீவை மீட்க வேண்டும் என்பது உள்ளிட்ட 27 தீர்மானங்கள் மதுரையில் நடைபெறும் திமுக பொதுக்குழுவில் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன.மதுரை உத்தங்குடியில் 48 ஆண்டுகளுக்குப் பிறகு ம... மேலும் பார்க்க

அதிமுக மாநிலங்களவை வேட்பாளர்கள் அறிவிப்பு!

மாநிலங்களவை உறுப்பினர் தேர்தலில் போட்டியிடவுள்ள அதிமுக வேட்பாளர்களை அக்கட்சியின் தலைமைக் கழகம் அறிவித்துள்ளது.அதிமுக தலைமைக் கழகம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், ”அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழ... மேலும் பார்க்க

தேமுதிகவுக்கு அடுத்தாண்டு மாநிலங்களவை சீட்: முன்னாள் அமைச்சர் கே. பி. முனுசாமி

தேமுதிகவுக்கு அடுத்தாண்டு மாநிலங்களவை சீட் வழங்கப்படும் என்று முன்னாள் அமைச்சர் கே. பி. முனுசாமி தெரிவித்துள்ளார்.அதிமுக முன்னாள் அமைச்சர் கே .பி. முனுசாமி இன்று(ஜூன் 1) செய்தியாளர்களை சந்தித்தார். அப... மேலும் பார்க்க

சமஸ்கிருதத்தில் இருந்து தமிழ் பிறந்ததை ஏற்றுக் கொள்வோமா? சி.பி. ராதா கிருஷ்ணன் பேச்சு

மத்திய அரசின் நிதியை மாநில அரசு போற்றுவதில்லை என்று மகாராஷ்டிர ஆளுநர் சி.பி. ராதாகிருஷ்ணன் குற்றம் சாட்டியுள்ளார்.கோவை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் மகாராஷ்டிர ஆளுநர் சி.பி. ராதா கிருஷ்ணன் பேசுக... மேலும் பார்க்க

திமுக பொதுக்குழு கூட்டம்: விஜயகாந்த், குமரி அனந்தனுக்கு இரங்கல் தீர்மானம்

திமுக பொதுக்கூட்டத்தில் மறைந்த தேமுதிக தலைவர் விஜயகாந்த், காங்கிரஸைச் சேர்ந்த குமரி அனந்தனுக்கும் இரங்கல் தீர்மானம் தெரிவிக்கப்பட்டது.மதுரை உத்தங்குடியில் திமுக மாநில பொதுக் குழுக் கூட்டம் தொடங்கியது.... மேலும் பார்க்க

7 நாள்களுக்குப் பிறகு குற்றால அருவிகளில் குளிக்க அனுமதி!

7 நாள்களுக்குப் பிறகு குற்றால அருவிகளில் குளிக்க சுற்றுலாப் பயணிகளுக்கு மாவட்ட நிர்வாகம் அனுமதி அளித்துள்ளது.தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்துள்ள நிலையில் கேரளத்தின் பல்வேறு மாவட்டங்கள், தமிழ்நாட்டில் ம... மேலும் பார்க்க