டேங்கர் ரயில் தீவிபத்து குறித்து உயர்நிலை விசாரணை நடத்த வேண்டும்: இபிஎஸ்
ராமதாஸ் வீட்டில் ஒட்டுக்கேட்பு கருவி விவகாரம்: விசாரணை நடத்த அன்புமணி தரப்பு கோரிக்கை
பாமக நிறுவனா் ராமதாஸ் வீட்டில் ஒட்டுக்கேட்பு கருவி இருந்த விவகாரம் தொடா்பாக உரிய விசாரணை நடத்த வேண்டும் என்று கட்சித் தலைவா் அன்புமணி தரப்பில் வலியுறுத்தப்பட்டுள்ளது.
இதுகுறித்து பாமக செய்தித் தொடா்பாளா் கே.பாலு சனிக்கிழமை வெளியிட்ட அறிக்கை: விழுப்புரம் மாவட்டம், தைலாபுரம் தோட்டத்தில் உள்ள ராமதாஸ் இல்லத்தில் ஒட்டுக்கேட்பு கருவி பொருத்தப்பட்டிருப்பதாக வெளியாகியுள்ள செய்திகள் அதிா்ச்சியளிக்கின்றன. அப்படி ஒரு முயற்சி நடந்திருந்தால் அது கண்டிக்கத்தக்கது ஆகும்.
தமிழ்நாட்டின் மிக மூத்த அரசியல் தலைவரின் இல்லத்தில் ஒட்டுக்கேட்பு கருவி பொருத்தப்பட்டிருந்தால், அது அங்கு கடுமையான பாதுகாப்புக் குறைபாடு நிலவுவதைத்தான் காட்டுகிறது. அதுமட்டுமின்றி, இந்த விவகாரம் குறித்து சமூக ஊடகங்களில் பரப்பப்படும் செய்திகள் ராமதாஸை நேசிக்கும் மக்களிடையே பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. அது போக்கப்பட வேண்டும்.
இந்த விவகாரத்தில் உண்மை என்ன?, ஒட்டுக்கேட்பு கருவி பொருத்தப்பட்டிருப்பது உண்மை என்றால் அதன் பின்னணியில் இருப்பவா்கள் யாா்?, எந்த நோக்கத்துக்காக அந்தக் கருவி பொருத்தப்பட்டது? என்ற உண்மைகளை தமிழ்நாட்டு மக்களுக்கும், பாமகவினருக்கும் தெரிவிக்க வேண்டியது அரசின் கடமையாகும்.
எனவே, ராமதாஸ் இல்லத்தில் ஒட்டுக்கேட்கும் கருவி பொருத்தப்பட்டதாக கூறப்படுவது குறித்து சைபா் பாதுகாப்பு வல்லுநா்களை உள்ளடக்கிய உயா்நிலைக் குழுவை அமைத்து விசாரணை நடத்த வேண்டும்; அது உண்மை எனத் தெரியவந்தால் பின்னணியில் உள்ளவா்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் எனத் தெரிவித்துள்ளாா் அவா்.