மின் உற்பத்தி நிறுவனத்தில் எக்ஸிகியூட்டிவ் பணி: யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம்?
ரூ. 500 நோட்டுகளையும் திரும்பப் பெற வேண்டும்: சந்திரபாபு நாயுடு கோரிக்கை
நாட்டில் கறுப்புப் பணத்தை ஒழிக்க ரூ. 500 நோட்டுகளையும் மத்திய அரசு திரும்பப் பெற வேண்டும் என ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு கூறியுள்ளார்.
ஆந்திர மாநிலம் கடப்பாவில் தெலுங்கு தேசம் கட்சியின் 3 நாள்கள் மாநாடு இன்று தொடங்கியது. கூட்டத்தில் பங்கேற்றுப் பேசிய கட்சியின் தலைவரும் ஆந்திர முதல்வருமான சந்திரபாபு நாயுடு, கட்சியின் வளர்ச்சிப் பணிகள் குறித்துப் பேசினார்.
இதன்பின்னர் பேசும்போது, ரூ. 500, ரூ. 1,000, ரூ. 2,000 நோட்டுகளை திரும்பப் பெற வேண்டும் என்று பிரதமரிடம் கோரிக்கை வைத்ததாகவும் டிஜிட்டல் பணபரிவர்த்தனையை அதிகப்படுத்த வேண்டும் என்று வலியுறுத்தியதாகவும் கூறியுள்ளார்.
"பழைய ரூ.500, ரூ. 1,000 நோட்டுகளை திரும்பப் பெற்று புதிய ரூ. 2,000 நோட்டுகளை கொண்டுவந்துள்ளீர்கள். தேவைப்பட்டால் அதிக மதிப்பிலான அனைத்து ரூபாய் நோட்டுகளையும் திரும்பப் பெற வேண்டும். பதிலாக டிஜிட்டல் நாணயத்தை அறிமுகப்படுத்துங்கள், இதனால் கறுப்புப் பணத்தை ஒழிக்கலாம்" என்று பிரதமரிடம் கூறியதாகத் தெரிவித்தார்.
இந்த மாநாட்டில் மீண்டும் இதையே வலியுறுத்துவதாகவும் பல நாடுகளில் டிஜிட்டல் நாணயங்கள் புழக்கத்தில் உள்ளதாகவும் தெரிவித்தார். மேலும் கட்சி நிதிகளை ஆன்லைன் மூலமாக டிஜிட்டல் வடிவில் அனுப்பவும் அறிவுறுத்தினார்.
தேர்தலில் வாக்குக்காக மக்களுக்கு பணம் வழங்க வேண்டிய தேவையில்லை, மக்களுக்கு சேவை செய்யும்போது அவர்களுடைய வாக்குகள் தானாகவே கிடைக்கும் என்றும் கூறினார்.
பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசு கடந்த 2016 நவம்பர் 8 ஆம் தேதி ரூ. 500, ரூ. 1000 நோட்டுகள் செல்லாது என்று அறிவித்து புதிய ரூ. 2,000, ரூ. 500 நோட்டுகளை அறிமுகப்படுத்தியது. இதன்பின்னர் கடந்த 2023 மே மாதம் ரூ. 2,000 நோட்டுகளின் புழக்கத்தையும் ஆர்பிஐ நிறுத்தியது, தற்போது ரூ. 500 மற்றும் அதற்கு கீழ் மதிப்பிலான நோட்டுகள் மட்டும் புழக்கத்தில் உள்ளது குறிப்பிடத்தக்கது.