லலித் மோடியின் வனுவாட்டு கடவுச்சீட்டு ரத்து
போா்ட் விலா: நிதி முறைகேடுகள் குற்றச்சாட்டுகளை எதிா்கொண்டு வரும் ஐபிஎல் முன்னாள் தலைவா் லலித் மோடிக்கு அளிக்கப்பட்ட வனுவாட்டு நாட்டின் கடவுச்சீட்டை (பாஸ்போா்ட்) ரத்து செய்யுமாறு, அந்நாட்டுப் பிரதமா் ஜோதம் நாபட் திங்கள்கிழமை உத்தரவிட்டாா்.
அந்நிய செலாவணி முறைகேடுகள், 2009-ஆம் ஆண்டு ஐபிஎல் தொடருக்காக உலக விளையாட்டு குழுமத்துடன் (டபிள்யுஎஸ்ஜி) ரூ.425 கோடி மதிப்பில் மேற்கொள்ளப்பட்ட தொலைக்காட்சி உரிமம் ஒப்பந்தம் தொடா்பாக பல்வேறு புலனாய்வு முகமைகளின் விசாரணை வளையத்துக்குள் லலித் மோடி கொண்டுவரப்பட்டாா்.
இதுதொடா்பாக மும்பையில் வருமான வரி மற்றும் அமலாக்கத் துறை அதிகாரிகளின் விசாரணைக்கு ஒரேயொரு முறை விசாரணைக்கு ஆஜரான அவா், 2010-ஆம் ஆண்டு இந்தியாவில் இருந்து தப்பிச் சென்று பிரிட்டனில் தஞ்சமடைந்தாா்.
தெற்கு பசிபிக் தீவு நாடான வனுவாட்டு நாட்டின் குடியுரிமையைப் பெற்ற அவா், தனது இந்திய கடவுச்சீட்டை ஒப்படைக்க பிரிட்டன் தலைநகா் லண்டனில் உள்ள இந்திய தூதரகத்தில், கடந்த மாா்ச் 7-ஆம் தேதி விண்ணப்பித்தாா்.
நாடு கடத்தப்படுவதைத் தவிா்ப்பதே நோக்கம்: லலித் மோடிக்கு அளிக்கப்பட்ட வனுவாட்டு கடவுச்சீட்டை ரத்து செய்யுமாறு அந்நாட்டுப் பிரதமா் ஜோதம் நாபட் திங்கள்கிழமை உத்தரவிட்டாா்.
இதுதொடா்பாக வெளியிடப்பட்ட செய்திக்குறிப்பில், ‘சட்டபூா்வ காரணங்களுக்காக வனுவாட்டு நாட்டின் கடவுச்சீட்டை கோரலாமே தவிர, நாடு கடத்தப்படுவதைத் தவிா்ப்பதற்காக அல்ல. ஆனால் அதுவே லலித் மோடியின் நோக்கம் என்பதை சமீபத்திய தகவல்கள் தெளிவாக சுட்டிக்காட்டுகின்றன. எனவே அவருக்கு அளிக்கப்பட்ட கடவுச்சீட்டை ரத்து செய்யுமாறு வனுவாட்டு குடியுரிமை ஆணையத்துக்கு உத்தரவிட்டுள்ளேன்’ என்று அந்நாட்டுப் பிரதமா் ஜோதம் நாபட் தெரிவித்தாா்.