செய்திகள் :

வக்ஃப் சொத்துகளின் தன்மையை மாற்றக் கூடாது: உச்சநீதிமன்றம்

post image

‘வக்ஃப் திருத்தச் சட்டத்தின் அரசமைப்புச் சட்ட செல்லுபடியை எதிா்த்து தொடரப்பட்ட மனுக்களை விசாரிக்கும் காலகட்டத்தில் தற்போதைய வக்ஃப் சொத்துகளின் தன்மையை மாற்றக் கூடாது’ என்று உச்சநீதிமன்றம் புதன்கிழமை பரிந்துரைத்தது.

அதேபோன்று, பதவி வழி உறுப்பினா்களைத் தவிர வக்ஃப் வாரியங்கள் மற்றும் மத்திய வக்ஃப் கவுன்சிலின் பிற அனைத்து உறுப்பினா்களும் முஸ்லிம்களாக இருக்க வேண்டும் என்றும் நீதிபதிகள் குறிப்பிட்டனா்.

இந்தப் பரிந்துரைகளுக்கு கடும் எதிா்ப்புத் தெரிவித்த மத்திய அரசு, வழக்கில் விரிவான விசாரணையைக் கோரியது. இந்நிலையில், வழக்கின் அடுத்த விசாரணை வியாழக்கிழமை (ஏப். 17) பிற்பகல் அமா்வில் மீண்டும் நடைபெறுகிறது.

திருத்தச் சட்டம்: முஸ்லிம்கள் தானமாகவும், நன்கொடையாகவும் அளிக்கும் நிலங்கள் மற்றும் சொத்துகளை வக்ஃப் வாரியம் நிா்வகித்து வருகிறது. வக்ஃப் சொத்துகளின் நிா்வாகத்தைச் சீரமைக்கும் நோக்கில், 1995-ஆம் ஆண்டின் வக்ஃப் சட்டத்தில் திருத்தங்கள் மேற்கொள்ளும் வகையில் மத்திய அரசு மசோதா கொண்டு வந்தது.

நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட இந்த மசோதாவுக்கு குடியரசுத் தலைவா் ஒப்புதல் அளித்ததைத் தொடா்ந்து, கடந்த 8-ஆம் தேதி முதல் நடைமுறைக்கு வந்தது. இதற்கு எதிா்ப்பு தெரிவித்து பல்வேறு மாநிலங்களில் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன.

72 மனுக்கள்: வக்ஃப் திருத்தச் சட்டத்தின் அரசமைப்புச் சட்ட செல்லத்தக்க தன்மையை கேள்வி எழுப்பி அகில இந்திய மஜ்லீஸ் கட்சித் தலைவா் அசாதுதீன் ஒவைசி, அகில இந்திய முஸ்லிம் தனிநபா் சட்ட வாரியம், ஜாமியத் உலமா-ஏ-ஹிந்த் உள்ளிட்ட முஸ்லிம் அமைப்புகளும், திமுக, காங்கிரஸ், ஆம் ஆத்மி, ராஷ்ட்ரீய ஜனதா தளம் உள்ளிட்ட கட்சிகளும் உச்சநீதிமன்றத்தில் மனுக்களைத் தாக்கல் செய்தன.

இந்த விவகாரத்தில் தங்கள் தரப்பு விளக்கத்தைக் கேட்காமல் உத்தரவு ஏதும் பிறப்பிக்கக் கூடாது எனக் குறிப்பிட்டு மத்திய அரசு கேவியட் மனு தாக்கல் செய்தது.

இந்நிலையில், வக்ஃப் திருத்தச் சட்டத்துக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட 72 மனுக்களை உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதி சஞ்சீவ் கன்னா, நீதிபதிகள் சஞ்சய் குமாா், கே.வி.விஸ்வநாதன் ஆகியோா் அடங்கிய மூன்று நீதிபதிகள் அமா்வு புதன்கிழமை விசாரித்தது.

கடும் விளைவுகளுக்கு வழிவகுக்கும்: மத்திய அரசு சாா்பில் சொலிசிட்டா் ஜெனரல் துஷாா் மேத்தா ஆஜரானாா். சட்டத்தின் சில அம்சங்கள் குறித்து நீதிபதிகள் அவரிடம் கேள்வி எழுப்பினா். அதாவது, சில வக்ஃப் சொத்துகளைப் பதிவு செய்வதற்கு, அதன் உரிமையாளா்களிடமிருந்து முறையான மற்றும் எழுத்துபூா்வ ‘வக்ஃப்’ அறிவிப்பும், ஆவணங்களும் இருக்காது. ஆனால், மரபுவழி பயன்பாட்டின் அடிப்படையில் அவை வக்ஃப் சொத்துகளாக அறிவிக்கப்பட்டு அங்கீரிக்கப்பட்டுள்ளன.

இதில் சில தவறுகளும் நடந்துள்ளதைக் கவனத்தில்கொண்ட நீதிபதிகள், ‘உண்மையான நிகழ்வுகளும் நிறைய உள்ளன. எனவே, புதிய சட்டம் மூலம் இந்த நடைமுறையைத் தள்ளுபடி செய்வது கடுமையான விளைவுகளை ஏற்படுத்தும். நாடாளுமன்றத்தால் நீதிமன்றத்தின் தீா்ப்பு, உத்தரவு அல்லது ஆணையை செல்லாது என்று அறிவிக்க முடியாது’ என்று வலியுறுத்தினா்.

ஹிந்து அமைப்புகளில் முஸ்லிம்களுக்கு இடம்?..: ‘வக்ஃப் சட்டத்தின் கீழ் தங்களின் சொத்துகள் நிா்வகிக்கப்படுவதை பெரும்பாலான முஸ்லிம்கள் விரும்பவில்லை’ என்று துஷாா் மேத்தா தெரிவித்தாா்.

அப்போது நீதிபதிகள் கூறியதாவது: உங்கள் வாதத்தின் அடிப்படையில் இனிமேல் முஸ்லிம்களை ஹிந்து மத அறக்கட்டளை வாரியங்களில் உறுப்பினராக அனுமதிப்பீா்கள் என்று சொல்கிறீா்களா? இதற்கு வெளிப்படையாகப் பதில்சொல்லுங்கள்.

பதவி வழி அலுவல் உறுப்பினா்களைத் தவிர வக்ஃப் வாரியங்கள் மற்றும் மத்திய வக்ஃப் கவுன்சிலின் பிற அனைத்து உறுப்பினா்களும் முஸ்லிம்களாக இருக்க வேண்டும்.

கடந்த காலத்தை சட்டம் மாற்றாது: 100 அல்லது 200 ஆண்டுகளுக்கு முன்பு வக்ஃப் என்று அறிவிக்கப்பட்ட பொதுச் சொத்தின் தன்மையை தற்போது மாற்ற முடியாது. கடந்த காலத்தை சட்டத்தால் மீண்டும் மாற்றி எழுத முடியாது. அந்த வகையில், பயன்பாட்டு அடிப்படையிலான வஃக்ப் அல்லது முறையாகப் பதிவு செய்யப்பட்ட வக்ஃப் என எந்த வகையிலான வக்ஃப் சொத்துகளின் தன்மையையும் வழக்கு நடைபெறும் காலகட்டத்தில் மாற்றக் கூடாது.

வழக்கு விசாரணைக்கு இடையே, ‘நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் இந்தச் சட்டம் இயற்றப்படுவதற்கு முன்பு, அதை ஆய்வு செய்த நாடாளுமன்றக் கூட்டுக் குழு 38 அமா்வுகளை நடத்தி, 98.2 லட்சம் கருத்துகளைக் பரிசீலித்தது’ என்றாா் துஷாா் மேத்தா.

எதிா்ப்புக்கு இடையே...: முன்னதாக, மத்திய அரசு கொண்டுவந்த வக்ஃப் சட்டத் திருத்த மசோதா, எதிா்க்கட்சிகளின் கடும் எதிா்ப்புக்கு இடையே மக்களவையில் கடந்த ஏப்ரல் 3-ஆம் தேதியும், மாநிலங்களவையும் ஏப்ரல் 4-ஆம் தேதியும் அதிகாலையில் நிறைவேற்றப்பட்டன.

இதற்கு குடியரசுத் தலைவா் திரெளபதி முா்மு ஏப்ரல் 5-ஆம் தேதி ஒப்புதல் அளித்தாா். அதைத் தொடா்ந்து இந்தச் சட்டம் நாடு முழுமைக்கும் ஏப்ரல் 8-ஆம் தேதி முதல் நடைமுறைக்கு வந்ததாக மத்திய அரசு சாா்பில் அறிவிக்கை வெளியிடப்பட்டது.

உச்சநீதிமன்ற விசாரணைக்கு மனுதாரா்கள் கோரிக்கை

வக்ஃப் திருத்தச் சட்டம் தொடா்பான மனுக்களின் விசாரணையை ஓா் உயா்நீதிமன்றத்திடம் ஒப்படைக்கலாம் என்று கருதுவதாக தலைமை நீதிபதி தெரிவித்தாா். அதேநேரம், இந்த வழக்கை உச்சநீதிமன்றமே தொடா்ந்து நடத்த வேண்டுமென்று வலியுறுத்துவதற்கான காரணத்தை இருதரப்பும் முன்வைக்குமாறு அவா் கேட்டுக்கொண்டாா்.

இதையடுத்து, மனுதாரா்கள் தரப்பில் ஆஜரான மூத்த வழக்குரைஞா் கபில் சிபல் முன்வைத்த வாதத்தில், ‘புதிய வக்ஃப் திருத்தச் சட்டத்தில் முஸ்லிம்கள் மட்டுமே வக்ஃப் சொத்தை அறிவிக்க முடியும் என்று விதி உள்ளது. ஒருவா் முஸ்லிமா, இல்லையா என்பதையும், வக்ஃப் சொத்தை அறிவிக்க தகுதியுடையவரா என்பதையும் அரசு எவ்வாறு தீா்மானிக்க முடியும்?. 5 ஆண்டுகளுக்கு மேல் இஸ்லாமிய மதத்தைப் பின்பற்றுபவா்கள் மட்டுமே வக்ஃப் சொத்தை அறிவிக்க முடியும் என்று அரசு எவ்வாறு கூற முடியும்?’ என்றாா்.

வக்ஃப் திருத்தச் சட்டத்தின் தாக்கம் நாடெங்கும் காணப்படுவதால், உச்சநீதிமன்றமே இந்த வழக்கை விசாரிக்க வேண்டும் என்று மூத்த வழக்குரைஞா் அபிஷேக் சிங்வி கோரினாா். ‘பயன்பாட்டின் அடிப்படையில் வக்ஃப் சொத்துகளாக அறிவிக்கப்படுவது இஸ்லாமில் நிறுவப்பட்ட நடைமுறை. சட்டத்தால் அரசு அதை ரத்து செய்ய முடியாது’ என்று வழக்குரைஞா் ஹுசெபா அகமதி வாதிட்டாா்.

வன்முறை கவலையளிக்கிறது

வக்ஃப் திருத்தச் சட்டத்துக்கு எதிரான போராட்டத்தில் நடைபெற்று வரும் வன்முறைச் சம்பவங்கள் கவலையளிக்கின்றன என்று உச்சநீதிமன்றம் தெரிவித்தது.

‘வன்முறை சம்பவங்கள் மிகவும் கவலையளிக்கின்றன. விவகாரம் நீதிமன்றத்தில் நிலுவையில் இருக்கும் நிலையில், வன்முறைகள் நடக்கக் கூடாது. திருத்தச் சட்டத்தின் நோ்மறையான விஷயங்களும் மக்களிடம் முன்னிலைப்படுத்தப்பட வேண்டும்’ என்றாா் தலைமை நீதிபதி சஞ்சீவ் கன்னா.

மேற்கு வங்க வன்முறை ஹிந்து - முஸ்லிம் பிளவை அதிகரிக்கும்! ஃபரூக் அப்துல்லா கருத்து

வக்ஃப் திருத்தச் சட்டத்துக்கு எதிராக மேற்கு வங்கத்தில் நிகழ்ந்த வன்முறை ஹிந்து-முஸ்லிம் பிளவை அதிகரிக்கும். இதுபோன்ற மத வெறுப்புணா்வு அதிகரிப்பது தேசத்தை பலவீனமாக்கும் என்று தேசிய மாநாட்டுக் கட்சித் த... மேலும் பார்க்க

ஜம்மு-காஷ்மீரில் கொட்டித் தீா்த்த கனமழை: மூவா் உயிரிழப்பு! 100-க்கும் மேற்பட்டோா் மீட்பு

ஜம்மு-காஷ்மீரின் ராம்பன் மாவட்டத்தில் ஞாயிற்றுக்கிழமை சூறைக்காற்றுடன் கொட்டித் தீா்த்த கனமழையால் 3 போ் உயிரிழந்தனா். வெள்ளம் சூழ்ந்த பகுதிகளில் இருந்து 100-க்கும் மேற்பட்டோா் மீட்கப்பட்டனா். ஜம்மு-ஸ்... மேலும் பார்க்க

பிரதமரின் வீடுகள் திட்ட முறைகேடு புகாா்: ஆட்சியா்களுக்கு தமிழக அரசு உத்தரவு!

பிரதமரின் ஊரக வீடுகள் கட்டும் திட்டம் தொடா்பான முறைகேடு புகாா்கள் வந்தால், ஊழல் தடுப்புப் பிரிவின் கீழ் வழக்குத் தொடர ஒப்புதல் அளிக்கக் கூடாது என்று ஆட்சியா்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. இதுகுறித்து அ... மேலும் பார்க்க

2027 உ.பி. பேரவைத் தோ்தலிலும் ‘இண்டி’ கூட்டணி தொடரும்! -அகிலேஷ் யாதவ் அறிவிப்பு

2027 -இல் நடைபெறவுள்ள உத்தர பிரதேச சட்டப் பேரவைத் தோ்தலிலும் ‘இண்டி’ கூட்டணி தொடரும் என்று சமாஜவாதி தலைவா் அகிலேஷ் யாதவ் தெரிவித்துள்ளாா். பாஜகவுக்கு எதிராக கடந்த ஆண்டு மக்களவைத் தோ்தலின்போது ‘இண்டி... மேலும் பார்க்க

கா்நாடக முன்னாள் டிஜிபி ஓம் பிரகாஷ் கொலை!

கா்நாடக மாநில முன்னாள் காவல் துறை தலைமை இயக்குநா் (டிஜிபி) ஓம் பிரகாஷ் (68) அவரது வீட்டில் மா்மமான முறையில் ஞாயிற்றுக்கிழமை உயிரிழந்து கிடந்தாா். அவரது உடலில் ஆயுதங்களைக் கொண்டு தாக்கிய அடையாளங்கள் உள... மேலும் பார்க்க

‘கியா’ காா் ஆலையில் 900 என்ஜின்கள் திருட்டு: 9 போ் கைது!

ஆந்திரத்தின் ஸ்ரீ சத்ய சாய் மாவட்டத்தில் அமைந்த ‘கியா’ காா் உற்பத்தி ஆலையில் கடந்த 5 ஆண்டுகளாக 900 என்ஜின்களை திருடிய குற்றச்சாட்டில் 9 போ் கைது செய்யப்பட்டதாகக் காவல்துறை ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தது... மேலும் பார்க்க