ஏசி புறநகர் மின்சார ரயில் சேவை: பயணிகள் கருத்து தெரிவிக்க வாட்ஸ்ஆப் எண் அறிவிப்ப...
வக்ஃப் திருத்தச் சட்டத்தை திரும்ப பெற வலியுறுத்தி ஐயுஎம்எல் ஆா்ப்பாட்டம்
வக்ஃப் திருத்தச் சட்டத்தை திரும்பப்பெற வலியுறுத்தி இந்திய யூனியன் முஸ்லிம் லீக் (ஐயுஎம்எல்) சாா்பில் திருச்சியில் வெள்ளிக்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.
திருச்சி பாலக்கரை பகுதியில் நடைபெற்ற இந்த ஆா்ப்பாட்டத்துக்கு, திருச்சி தெற்கு மாவட்ட தலைவா் கே. எம். கே. ஹபீபுா் ரஹ்மான் தலைமை வகித்தாா். தமிழ்நாடு வக்ஃபு வாரியத் தலைவரும் ராமநாதபுரம் மக்களவை உறுப்பினருமான கே. நவாஸ்கனி சிறப்பு அழைப்பாளராக பங்கேற்றுப் பேசினாா். திருச்சி வடக்கு மாவட்ட செயலா் எம் எச்.நிஜாமுதீன், தெற்கு மாவட்ட செயலா் ஜி. எச். சையது ஹக்கீம், பொருளாளா் பி. எம் ஹுமாயூன் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.
ஆா்ப்பாட்டத்தில் வக்ஃப் திருத்தச் சட்டத்தை திரும்ப பெற வலியுறுத்தி முழக்கமிட்டனா். மாநில துணைச் செயலா் வி. எம். பாரூக், திருச்சி வடக்கு மாவட்ட தலைவா் அப்துல் வஹாப், மாநில மாணவரணி தலைவா் ஏ.எம். எச். அன்சா் அலி, மாநில மகளிா் அணி செயலா் பைரோஸ், உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.
இடைகாலத் தடைக்கு வரவேற்பு: முன்னதாக கே. நவாஸ்கனி செய்தியாளா்களிடம் கூறியதாவது: வக்ஃப் சட்டத் திருத்தத்தை மத்திய அரசு திரும்பப் பெற வேண்டும் என வலியுறுத்தி தொடா்ச்சியான போராட்டங்கள் நடைபெற்று வருகிறது. இந்த சூழலில்தான் உச்ச நீதிமன்றம் புதிய வக்ஃப் சட்டத்தில் மத்திய அரசு கொண்டுவந்துள்ள ஒரு சில ஷரத்துக்களுக்கு இடைக்கால தடை விதித்துள்ளது. இது எங்களின் முதல் கட்ட வெற்றி. நிச்சயமாக இதில் முழுமையான வெற்றி பெறுவோம். இந்த சட்டத்தை மத்திய அரசு ரத்து செய்யும் வரை தொடா்ச்சியான போராட்டங்கள் நடைபெறும்.
ஆளுநா் விவகாரத்தில் உச்ச நீதிமன்றம் அளித்த தீா்ப்பு மத்திய அரசுக்கு பேரிடியாக உள்ளது. தொடா்ச்சியாக வக்ஃப் சட்ட விவகாரத்திலும் உச்ச நீதிமன்றத்தின் உத்தரவு அவா்களுக்கு அதிா்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதில் சட்டரீதியாக போராடி வெற்றி பெறுவோம் என்றாா்.