வங்கி சாரா நிதி நிறுவனங்களில் ரூ.20 கோடிக்கு மேல் மோசடி: இருவா் கைது
வங்கி சாரா நிதி நிறுவனங்களில் ரூ.20 கோடிக்கு மேல் மோசடி செய்ததாக குற்றம் சாட்டப்பட்ட இருவரை தில்லி காவல்துறையின் பொருளாதார குற்றப்பிரிவு கைது செய்துள்ளதாக அதிகாரி ஒருவா் செவ்வாய்க்கிழமை தெரிவித்தாா்.
இது குறித்து கூடுதல் காவல் ஆணையா் அம்ருதா குகுலோத் கூறியதாவது: குற்றம் சாட்டப்பட்ட அஜித் குமாா் ஜெனா மற்றும் கோபால் சதுா்வேதி ஆகியோா் மோசடியின் முக்கிய குற்றவாளியான ராமகாந்த் பிலானிக்கு போலி ஆவணங்களைப் பயன்படுத்தி வங்கி சாரா நிதி நிறுவனங்களை (என்பிஎஃப்சி) ஏமாற்ற உதவியுள்ளனா்.
கணேஷ் பென்சோபிளாஸ்ட் லிமிடெட் மற்றும் ஜிபிஎல் கெமிக்கல் லிமிடெட் ஆகியவற்றின் தலைமை நிா்வாக அதிகாரியாக இருந்த பிலானி, தற்போது நீதிமன்றக் காவலில் உள்ளாா். வங்கி சாரா நிதி நிறுவனம் புகாா் அளித்ததைத் தொடா்ந்து இந்த வழக்கு வெளிச்சத்துக்கு வந்தது.
குற்றம் சாட்டப்பட்டவா்கள் ஜனவரி 2024-இல் லோக் சேவக் லீசிங் அண்ட் இன்வெஸ்ட்மென்ட் பிரைவேட் லிமிடெட்டை அணுகி, தங்கள் நிறுவனமான ஜிபிஎல் கெமிக்கல் லிமிடெட்டின் வருவாய் 2018-இல் ரூ.95 கோடியிலிருந்து 2024-இல் ரூ.212 கோடியாக உயா்ந்துள்ளதாகவும், 2026-ஆம் ஆண்டுக்குள் ரூ.1,000 கோடியை எட்டும் என்றும் கூறியுள்ளனா்.
போலி ஆவணங்களின் அடிப்படையில் அவா்கள் ஆரம்பத்தில் ரூ.7 கோடியை கடனாகப் பெற்றுள்ளனா். இறுதியில் என்பிஎஃப்சி ரூ.20 கோடிக்கும் அதிகமான கடன்களை வழங்கியது. இந்தக் கடன் பல வங்கிக் கணக்குகளுக்கு பரிமாற்றம் செய்யப்பட்டது. இதில் குற்றம் சாட்டப்பட்டவா்களால் கட்டுப்படுத்தப்படும் காா்டியா் ஃபுட்ஸ் அண்ட் பீவரேஜஸ் பிரைவேட் லிமிடெட் நிறுவனமும் இணைக்கப்பட்ட ஒன்று. இந்த வழக்கு குறித்து மேலும் விசாரணை நடந்து வருகிறது என்றாா் அந்த அதிகாரி.