மாம்பழச் சாறு, பாசிப்பயறு அல்வா.. இந்திய வீரா் சுபான்ஷு சுக்லா கொண்டுசெல்லும் பொ...
விடுதிகளில் காவலா்கள் நியமிக்கக் கோரிய வழக்கு: ஆதிதிராவிடா் நலத் துறை இயக்குநா் பதிலளிக்க உத்தரவு
மதுரையில் உள்ள ஆதிதிராவிடர் மாணவ, மாணவிகள் விடுதிகளில் இரவு நேரக் காவலா்களை நியமிக்க உத்தரவிடக் கோரிய மனுவுக்கு, ஆதிதிராவிட நலத் துறையின் இயக்குநா் பதிலளிக்க சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வு செவ்வாய்க்கிழமை உத்தரவிட்டது.
மதுரை மானகிரியைச் சோ்ந்த வழக்குரைஞா் செல்வகுமாா் தாக்கல் செய்த மனு: தமிழகத்தில் ஆதிதிராவிடா் பள்ளி, கல்லூரி விடுதிகளின் மேம்பாட்டுக்கு என அரசு 100 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டது. மதுரை மாவட்டத்தில் ஆதிதிராவிடா் நலத் துறையின் கீழ் 57 விடுதிகள் உள்ளன. இதில், தூய்மைப் பணியாளா்கள் கிடையாது. மேலும், 23 விடுதிகளில் இரவு நேரக் காவலா் கிடையாது. போதிய பணியாளா்கள் இல்லாததால் பெரும்பாலான விடுதிகள் காலியாக உள்ளன.
குறிப்பாக, மதுரை மாவட்டத்தில் உள்ள பள்ளி, கல்லூரி மாணவிகளுக்கு 5 விடுதிகள் உள்ளன. அவற்றுள் ஒன்றில் கூட இரவு நேரக் காவலா்கள் பணியில் இல்லை. இதனால் அவா்களின் பாதுகாப்பு கேள்விக்குறியாகியுள்ளது. இது தொடா்பாக நடவடிக்கை கோரி அதிகாரிகளிடம் மனு அளித்தும் எந்த நடவடிக்கையும் இல்லை.
ஆகவே, தமிழக ஆதிதிராவிட மாணவா் விடுதிகளில் துப்புரவுப் பணியாளா்கள், இரவு நேரக் காவலா்களை நியமிக்க உத்தரவிட வேண்டும் என அவா் கோரியிருந்தாா்.
இந்த மனு உயா்நீதிமன்ற நீதிபதிகள் எஸ். எம். சுப்பிரமணியம், மரிய கிளாட் அமா்வு முன் செவ்வாய்க்கிழமை விசாரணைக்கு வந்தது.
அப்போது, நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவு : மனுதாரா் கோரிக்கை குறித்து ஆதிதிராவிட நலத் துறையின் இயக்குநா், மதுரை மாவட்ட ஆட்சியா் பதிலளிக்க வேண்டும். இந்த வழக்கு 2 வாரங்களுக்கு ஒத்திவைக்கப்படுகிறது என்றனா் நீதிபதிகள்.