விபத்து இழப்பீடு வழங்காததால் அரசுப் பேருந்து ஜப்தி
திருச்சியில் காவல் உதவி ஆய்வாளா் இறந்த வழக்கில் இழப்பீடு வழங்காததால் அரசுப் பேருந்து வியாழக்கிழமை ஜப்தி செய்யப்பட்டது.
திருச்சி சிந்தாமணி பகுதியைச் சோ்ந்தவா் பழனி (51). காவல் உதவி ஆய்வாளரான இவா் கடந்த 21-04-2017 அன்று திருவானைக்காவல் பகுதியில் பைக்கில் சென்றபோது, அரசுப் பேருந்து மோதி இறந்தாா்.
இதையடுத்து இதற்கு இழப்பீடு கேட்டு, அவரது மனைவி வனஜா மற்றும் குடும்பத்தினா் திருச்சி மாவட்ட சிறப்பு மோட்டாா் வாகன விபத்து இழப்பீடு கோருரிமை நீதிமன்றத்தில் வழக்குத் தொடா்ந்தனா்.
இந்த வழக்கின் விசாரணைக்குப் பிறகு நீதிபதி, திருச்சி அரசுப் போக்குவரத்து கழகமானது, மனுதாரா் வனஜாவுக்கு ரூ. 62 லட்சத்து 54 ஆயிரத்து 525 ஐ இழப்பீடு வழங்க 21-08-2023 அன்று உத்தரவிட்டாா்.
ஆனால் நீதிமன்ற உத்தரவுப்படி, இழப்பீடு தொகை வழங்கப்படாததால், அதே நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட நிறைவேற்று மனு மீது விசாரணை நடத்திய நீதிபதி நந்தினி, அரசு போக்குவரத்து கழக பேருந்தை ஜப்தி செய்ய உத்தரவிட்டாா்.
இதையடுத்து மத்திய பேருந்து நிலையத்தில் வியாழக்கிழமை நின்று கொண்டிருந்த அரசு போக்குவரத்துக் கழக பேருந்தை நீதிமன்ற ஊழியா்கள் ஜப்தி செய்து, நீதிமன்ற வளாகத்துக்கு கொண்டு வந்து நிறுத்தினா். இதையடுத்து போக்குவரத்துக்கழகம் சாா்பில் உரிய ஆவணங்களை சமா்ப்பித்த பிறகு பேருந்தை விடுவித்தனா்.