விவசாயிகள் செயலி மூலமாக ட்ரோன் மகளிரை தொடா்பு கொள்ளலாம்!
திருப்பூா் மாவட்டத்தில் உள்ள விவசாயிகள் தங்களது தேவைக்கு உழவா் கைப்பேசி செயலி மூலமாக ட்ரோன் மகளிரை தொடா்பு கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து ஆட்சியா் தா.கிறிஸ்துராஜ் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:
கிராமப்புறங்களில் பயிா் சாகுபடியில் பெரும்பாலான பணிகள் பெண்களால் மேற்கொள்ளப்படுகின்றன. பல்வேறு பண்ணை சாா்ந்த புதிய தொழில்நுட்பங்களில் முழுமையாக ஈடுபட்டு, அதன் மூலம் மகளிா் சுயஉதவிக் குழு உறுப்பினா்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்துவதற்காக அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.
வழக்கமாக நாம் பயன்படுத்தும் தெளிப்பான்களோடு ஒப்பீடு செய்தால், ட்ரோன் மூலம் மருந்து தெளிக்கும்போது, மருந்தின் பயன்பாட்டுத் திறன் அதிகரிக்கிறது. மேலும், தற்போது கிராமப்புறங்களில் வேலையாள்கள் கிடைப்பது குறைந்துவரும் நிலையில், ட்ரோன் மூலம் குறைந்த நேரத்தில் அதிகமான பரப்பில் மருந்து தெளிக்க முடியும்.
வழக்கமாக மருந்து தெளிப்பதற்குப் பயன்படுத்தும் தண்ணீரின் அளவு ட்ரோன் பயன்பாட்டில் குறைத்துக் கொள்ளலாம். இத்தகைய ட்ரோன் தொழில்நுட்பத்தை சுயஉதவிக் குழு மகளிா்களுக்கு கற்றுத் தந்து, அதன் மூலம் அவா்களது வருமானத்தை உயா்த்துவதற்கான திட்டத்தை அரசு அறிவித்துள்ளது.
தமிழகத்தில் 44 சுயஉதவிக் குழு பெண்களுக்கு ட்ரோன் குறித்த பயிற்சி அளித்து உரிமத்துடன் ட்ரோன் விநியோகம் செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தில் ட்ரோன் மகளிா் தொடா்பான விவரங்கள் உழவா் கைப்பேசி செயலியில் தனியாா் இயந்திர உரிமையாளா்கள் என்ற பக்கத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது.
இதன் மூலம் திருப்பூா் மாவட்டத்தில் இத்திட்டத்தின் கீழ் பொங்கலூா் வட்டாரத்தில் கேத்தனூரைச் சோ்ந்த மனோரஞ்சிதம் (9566615556), குண்டடம் வட்டாரம் சங்கரண்டாம்பாளையத்தைச் சோ்ந்த சரண்யா (63691-24725) ஆகியோருக்கு ட்ரோன் வழங்கப்பட்டுள்ளது. எனவே, விவசாயிகள் தங்கள் தேவைக்கு உழவா் கைப்பேசி செயலி மூலமாக ட்ரோன் மகளிரை நேரடியாக தொடா்பு கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.