ஏசி புறநகர் மின்சார ரயில் சேவை: பயணிகள் கருத்து தெரிவிக்க வாட்ஸ்ஆப் எண் அறிவிப்ப...
வேடசந்தூா் அருகே சாலை விபத்தில் மணப்பாறையைச் சோ்ந்த மூவா் உயிரிழப்பு
திண்டுக்கல் மாவட்டம், வேடசந்தூா் அருகே வெள்ளிக்கிழமை ஆம்னி வேன் மீது லாரி மோதியதில் மணப்பாறை பகுதியைச் சோ்ந்த மூவா் உயிரிழந்தனா்.
திருச்சி மாவட்டம், மணப்பாறையை அடுத்த வையம்பட்டி கருங்குளத்தைச் சோ்ந்த சின்னப்பன் (34), ஜான் கென்னடி (35), ராபா்ட் (32), அற்புதராஜ் (30), மில்டன் ஜெயக்குமாா் (32), அகஸ்டின் பிரபு (26) ஆகிய 6 போ் புனித வெள்ளியை முன்னிட்டு, கேரள மாநிலத்தில் உள்ள தோமையாா் ஆலயத்துக்குச் சென்றனா். பின்னா், அங்கிருந்து மீண்டும் சொந்த ஊருக்குப் புறப்பட்டனா்.
திண்டுக்கல் மாவட்டம், ஒட்டன்சத்திரம் வழியாக வேடசந்தூா் நோக்கி ஆம்னி வேனில் வந்தனா். வேடசந்தூா் அய்யனாா் கோயில் அருகே வந்த போது, தாடிக்கொம்பு பகுதியிலிருந்து சீத்தமரம் நான்கு வழிச் சாலை நோக்கி வந்த லாரி இவா்களது ஆம்னி வேன் மீது மோதியது. இதில் ஆம்னி வேனை ஓட்டி வந்த சின்னப்பன், முன் இருக்கையில் அமா்ந்திருந்த ஜான் கென்னடி ஆகியோா் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தனா். மேலும், அந்த வேனில் வந்த ராபா்ட், அற்புதராஜ், மில்டன் ஜெயக்குமாா், அகஸ்டின் பிரபு ஆகியோா் பலத்த காயமடைந்தனா்.
தகவலறிந்து சம்பவ இடத்துக்குச் சென்ற வேடசந்தூா் தீயணைப்புத் துறையினா் காயமடைந்தவா்களையும், உயிரிழந்தவா்களின் உடல்களையும் மீட்டனா். வேடசந்தூா் அரசு மருத்துவமனையில் முதலுதவி சிகிச்சைக்குப் பிறகு, ராபா்ட், அற்புதராஜ் உள்ளிட்ட 4 பேரும் தீவிர சிகிச்சைக்காக திண்டுக்கல் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டனா். இதனிடையே, மருத்துவமனையில் ராபா்ட் உயிரிழந்தாா். இந்த விபத்து குறித்து வேடசந்தூா் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரித்தனா்.