அம்மா Hospital-ல இருக்கும்போது அந்த Song-அ Record பண்ணினோம்! - Amrit Ramnath| 3B...
``ஸ்டண்ட் மாஸ்டர் நம்மோடு இல்லை என்பதை ஏற்க முடியவில்லை” - கலங்கிய பா.ரஞ்சித், சோகத்தில் படக்குழு..
இயக்குநர் பா.ரஞ்சித் ஆர்யா, அட்டக்கத்தி தினேஷ் ஆகியோர் நடிப்பில் `வேட்டுவம்' என்ற படத்தை இயக்கி வருகிறார். இதன் படப்பிடிப்பு நாகப்பட்டினம் மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் நடந்து வந்தது.
பிரபல ரெளடி ‘மணல்மேடு’ சங்கர் போலீஸாரால் என்கவுண்டர் செய்யப்பட்டார். இதை மையமாக வைத்து இப்படம் எடுக்கப்படுவதாக சொல்லப்படுகிறது.
பா.ரஞ்சித் உள்ளிட்ட படக்குழுவினர் வேளாங்கண்ணியில் உள்ள பிரபல தனியார் விடுதியில் தங்கியபடி படப்பிடிப்பை நடத்தி வந்தனர்.

விழுந்தமாவடி பகுதியில் கார் பறந்து செல்வது போன்ற சண்டைக்காட்சி படமாக்கப்பட்டது. இதில் காஞ்சிபுரம் மாவட்டம் பூங்கண்டம் பகுதியைச் சேர்ந்த சீனியரான பிரபல ஸ்டண்ட் மாஸ்டர் மோகன்ராஜ் சண்டை காட்சி எடுப்பதற்கான ரிகர்ஸல் அளித்துள்ளார். பின்னர் கார் பறப்பது போல் படமாக்கப்பட்டுள்ளது. இதில் ஏற்பட்ட விபத்தில் மோகன்ராஜ் தவறி விழுந்த நிலையில், அவருக்கு நெஞ்சு வலி ஏற்பட்டதாக சொல்கிறார்கள்.
அதிர்ச்சி அடைந்த படக்குழுவினர் மோகன்ராஜை, நாகை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு தூக்கி சென்றுள்ளனர். அவரை பரிசோதனை செய்த டாக்டர்கள் மோகன்ராஜ் இறந்து விட்டதாக சொல்ல படக்குழுவினர் கதறியுள்ளனர்.
இயக்குநர் பா.ரஞ்சித்தும் மருத்துவமனையில் உடைந்து போய் அழுதிருக்கிறார். இதனால் மொத்த படக்குழுவும் சோகத்தில் மூழ்கியது. இந்த விபத்து குறித்து கீழையூர் போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.

உடற்கூறாய்வு செய்யாமல் உடலை கொடுங்கள் என மருத்துவக்கலூரி மருத்துவமனை நிர்வாகத்திடம் படக்குழு கேட்டதாக சொல்கிறார்கள். `விதிப்படி உடற்கூறாய்வு செய்த பின்னர் தான் உடலை தருவோம்' என மருத்துவமனை நிர்வாகத்தினர் கூறியுள்ளனர்.
திரைத்துறையினரால் எஸ்.எம்.ராஜு என அழைக்கப்பட்ட ஸ்டண்ட் மாஸ்டர் மோகன்ராஜ் படப்பிடிப்பு தளத்தில் விபத்தில் உயிரிழந்த சம்பவம் சினிமா வட்டாரத்தில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ரிஸ்கான சண்டை காட்சி என்றால் இயக்குநர்களின் முதல் சாய்ஸ் ராஜு தான். எப்படிப்பட்ட ரிஸ்க் சண்டை காட்சிகளாக இருந்தாலும் எதை பற்றியும் கவலை படமால் அர்ப்பணிப்போடு அமைத்து நடிக்க கூடியவர் ராஜு. திறமையான மாஸ்டர் இப்ப நம்மோடு இல்லை என்பதை ஏற்க முடியவில்லை என படக் குழுவினரிடம் கலங்கியிருக்கிறார் பா.ரஞ்சித். அவரை தேற்ற முடியாமல் மொத்த யூனிட்டும் கலங்கியதாக படக்குழுவினர் சோகத்துடன் தெரிவித்தனர்.