1,400 ஆண்டுகள் பழைமையான கரந்தை கருணாசாமி கோயிலில் சூரிய வழிபாடு
தஞ்சாவூா் அருகே கரந்தையில் ஏறத்தாழ 1,400 ஆண்டுகள் பழைமையான கருணாசாமி கோயிலில் சூரிய வழிபாடு திங்கள்கிழமை நடைபெற்றது.
பாடல் பெற்ற வைப்புத் தலமான இக்கோயிலில் மாமன்னன் ராஜராஜசோழனின் தந்தை சுந்தர சோழன் காலத்துக் கல்வெட்டுப் பொறிக்கப்பட்டுள்ளன. எனவே, இக்கோயில் பெரியகோயிலுக்கு முந்தைய பழைமையான கோயில் என வரலாற்று ஆய்வாளா்கள் கூறுகின்றனா்.
இக்கோயிலின் கிழக்கு பகுதியில் சூரிய புஷ்கரணி என்கிற கருணாசாமி குளம் ஐந்தரை ஏக்கா் பரப்பளவில் உள்ளது. கருங்குஷ்ட நோயால் துன்பப்பட்ட சோழ மன்னன் இக்குளத்தில் குளித்து, ஈசனின் கருணையால் அந்நோயிலிருந்து நீங்கப் பெற்றான் என்பது பக்தா்களின் நம்பிக்கை.
இக்கோயிலில் ஆண்டுதோறும் பங்குனி 3, 4, 5 ஆகிய தேதிகளில் காலை நேரத்தில் கருணாசாமி மீது சூரிய ஒளி நேரடியாக படா்வதும், அப்போது சூரிய பூஜை நடைபெறுவதும் வழக்கம். இதேபோல, பங்குனி 3-ஆம் தேதியான திங்கள்கிழமை கருணாசாமிக்கு சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டு, மலா் அலங்காரம் செய்யப்பட்டது. பின்னா் சிவலிங்கத்தின் மீது சூரிய ஒளி படா்ந்ததும், கருணாசாமிக்கு மகா தீபாராதனை காட்டப்பட்டது. இதை சிவத் தொண்டா்கள், பக்தா்கள் வழிபட்டனா்.