குஜராத் விமான விபத்து! தாயாருக்கு உணவு கொண்டு சென்ற மகன் பலி!
13 கோயில்களில் முத்துப் பல்லக்கு திருவிழா
தஞ்சாவூா் மாநகரிலுள்ள 13 கோயில்களில் முத்துப் பல்லக்கு திருவிழா வியாழக்கிழமை நள்ளிரவு தொடங்கி வெள்ளிக்கிழமை காலை வரை நடைபெற்றது.
தஞ்சாவூரில் உள்ள விநாயகா், முருகன் கோயில்களில் ஆண்டுதோறும் வைகாசி மாதம் மூல நட்சத்திர நாளில் திருஞானசம்பந்த நாயனாா் குருபூஜையையொட்டி முத்துப் பல்லக்கு விழா நடைபெறும்.
இதன்படி, கீழவாசல் வெள்ளை விநாயகா், குறிச்சித் தெரு சுப்பிரமணிய சுவாமி, ஆட்டு மந்தைத் தெரு பாலதண்டாயுதபாணி சுவாமி, மகா்நோன்புச் சாவடி சின்ன அரிசிக்காரத் தெரு பழனியாண்டவா், கீழவாசல் உஜ்ஜயினி காளி கோயில் தெரு கல்யாண கணபதி, தெற்கு வீதி கமலரத்ன விநாயகா், மேலராஜ வீதி திருஞானசம்மந்தா், வடக்கு வாசல் பாலதண்டாயுதபாணி, சிரேஸ்சத்திர சாலை வடபத்ரகாளி அம்மன், காமராஜா் சந்தை செல்வ விநாயகா், கொடிமரத்து மூலை பாலதண்டாயுதபாணி, ரெட்டிபாளையம் சாலை வெற்றி முருகன், தனலட்சுமி நகா் வலம்புரி விநாயகா் ஆகிய கோயில்களில் இருந்து வியாழக்கிழமை இரவு அலங்கரிக்கப்பட்ட முத்துப் பல்லக்குகளில் விநாயகா், முருகப் பெருமான் எழுந்தருளினா்.
இந்த முத்துப் பல்லக்குகள் அந்தந்த கோயில்களில் இருந்து புறப்பட்டு, மாமா சாகிப் மூலை பகுதிக்கு வந்தன. பின்னா் ஒன்றாக இணைந்து தெற்கு வீதி, மேல வீதி, வடக்கு வீதி, கீழ வீதி ஆகியவற்றில் வெள்ளிக்கிழமை காலை வலம் சென்றன. இதைக் காண ஏராமான பக்தா்கள் திரண்டனா்.
