ஓடும் ரயிலில் பாலியல் வன்கொடுமை முயற்சி; தப்புவதற்காக கீழே குதித்த இளம்பெண் படுக...
15 அடி நாகப்பாம்பு; கை வைத்தியம் கூடாது; காப்பீடு அவசியம் - சூழலியல் ஆய்வாளர்கள் சொல்லும் கருத்து
கோவை வடவள்ளியைச் சேர்ந்த பாம்புப்பிடி வீரர் சந்தோஷ்குமார், நாகப்பாம்பு கடித்து மரணமடைந்திருக்கிறார். கடந்த 15 வருடங்களுக்கும் மேல் குடியிருப்புப் பகுதிகளில் நுழையும் பாம்புகளை, குறிப்பாகக் கொடிய விஷம்கொண்ட ராஜநாகம், கட்டுவிரியன், நாகப்பாம்பு, கொம்பேறி மூக்கன் உள்ளிட்ட ஆயிரக்கணக்கான பாம்புகளை உயிருடன் பிடித்து வனப்பகுதியில் விடுகிற பணியைச் சந்தோஷ் செய்துவந்திருக்கிறார். இந்த நிலையில் மார்ச் 17-ம் தேதி தொண்டாமுத்தூர் அருகே குடியிருப்புப் பகுதியில் நாகப்பாம்பு வந்திருப்பதாக சந்தோஷ்குமாருக்கு தகவல் வர, சம்பவ இடத்துக்குச் சென்று அந்த பாம்பைப் பிடிக்கும் முயற்சியில் ஈடுபட்டிருக்கிறார். அப்போது எதிர்பாராதவிதமாக அந்த நாகப்பாம்பு சந்தோஷைக் கடித்துள்ளது. விஷம் ஏறி சம்பவ இடத்திலேயே மயக்கம் அடைந்த சந்தோஷுக்கு கோவை அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சையளிக்கப்பட்டிருக்கிறது. ஆனாலும் சிகிச்சை பலனின்றி நேற்று அவர் உயிரிழந்துவிட்டார். சந்தோஷ் குமாருக்கு திருமணமாகி 2 குழந்தைகள் இருக்கிறார்கள். அதில் ஒரு குழந்தை மாற்றுத்திறனாளி. சந்தோஷ் குமாரின் வருமானத்தில் மட்டுமே இயங்கி வந்த குடும்பம் தற்போது கண்ணீருடன் தவித்துக்கொண்டிருக்கிறது.
பாம்பு பிடிக்கையில் மரணம் நிகழாமல் இருக்க என்ன செய்ய வேண்டும், பாம்பு பிடி வீரர்களுக்கான நெறிமுறை என்ன ஆகியவற்றைப்பற்றி சுற்றுச்சூழல் ஆர்வலர் மற்றும் சுற்றுச்சூழல் எழுத்தாளர் கோவை சதாசிவமும், சென்னை கிண்டி பாம்புப்பண்ணை ஆராய்ச்சி இயக்குனர் கலையரசனும் இங்கே பகிர்ந்துகொள்கிறார்கள்.

பாம்பு பிடி வீரர்கள், முதல் பாம்பு பிடிக்கையில் எந்த அளவுக்குக் கவனமாக இருக்கிறார்களோ அதே கவனத்தை, எச்சரிக்கை உணர்வை ஆயிரமாவது பாம்பை பிடிக்கும்போதும் கடைபிடிக்க வேண்டும்.
பாம்பு பிடி வீரர்களுக்கு, பாம்புகளும் அவற்றைப் பிடிப்பதும் பழக்கமான விஷயமாக மாறியிருக்கலாம். ஆனால், பாம்புகளுக்குப் பிடிபடுகிற உணர்வும், அதைப் பிடிக்கிற பாம்புப்பிடி வீரரும் புதியது. அதனால், பிடிபடுகிற பாம்பு தன்னைக் காப்பாற்றிக்கொள்ள கடித்துவிட்டுத் தப்பிக்கவே பார்க்கும். பாம்பு பிடிப்பதற்கான கருவிகள் வந்துவிட்டன என்றாலும், மிகுந்த கவனம் தேவை.
காட்டுயிர்களைப் பாதுகாக்கிற பாம்புபிடி வீரர்களுக்கு இதுபோல எதிர்பாராதவிதமாக மரணம் நிகழ்ந்தால், அரசு நிவாரணம் வழங்கவேண்டும். தவிர, பொதுமக்களும் உயிரிழந்த பாம்பு பிடி வீரர்களின் குடும்பங்களைப் பராமரிக்க உதவ வேண்டும். நம் நாட்டில் பாம்பு கடி மரணங்கள் அதிகம். அரசும் மக்களும் இதைச் செய்தால் மட்டுமே பாம்புகளைப் பாதுகாத்து, அதன் மூலமாக மக்களையும் பாதுகாக்கும் சந்தோஷ் போன்ற பாம்பு பிடி வீரர்கள் வருங்காலத்தில் இதை செய்வார்கள்.
இருளர்கள்தான் பாம்புபிடிப்பதில் தேர்ந்தவர்களாக இருக்கிறார்கள். அவர்கள் சொல்கிற சிறியா நங்கை, பெரியா நங்கையின் வேரை வாயில் கடித்துக்கொண்டு பாம்பு பிடித்தால், அது கடித்தாலும் விஷமேறாது என்பதற்கான எந்த அறிவியல் ஆதாரமும் இதுவரை இல்லை. அதிலும், கண்ணாடி விரியன்போன்ற கொடுமையான விஷப்பாம்புகள் மனிதர்களைக் கடித்துவிட்டால், அதன் விஷம் நேரிடையாக நம்முடைய ரத்தத்தில் கலந்துவிடுகிறது. உடனே நம்முடைய ரத்தம் உறைந்து, மரணமும் ஏற்பட்டுவிடுகிறது. ஒருவேளை அந்தச் செடிகளில் பாம்பு விஷத்துக்கு எதிரான பண்பு இருக்கிறதென்றால், அதை ஆராய்ச்சி செய்தால் மட்டுமே உறுதி செய்ய முடியும். சில கிராமங்களில் இந்தக் காலத்திலும் பாம்பு கடிக்கு மந்திரம் போடுவது, பாடம் அடிப்பதுபோன்ற கை வைத்தியங்கள் செய்துகொண்டிருக்கிறார்கள். பாம்பு கடித்துவிட்டால், உடனே அருகே இருக்கிற அரசு மருத்துவமனைக்கு செல்ல வேண்டும் என்கிற விழிப்புணர்வை அவர்களுக்கும் ஏற்படுத்த வேண்டும்.

நாகப்பாம்பு மிகுந்த சீற்றம் கொண்டவை. 15 அடி விஷம்கொண்ட பாம்புகளை பிடிக்கிறபோது அதை சமூக வலைத்தளங்களில் பதிவேற்றுவதற்காக சிலர் வீடியோ எடுக்கிறார்கள். அதற்காக, பாம்புக்கு மிக அருகே செல்வது, அதை கழுத்தில் போட்டுக்கொள்வதுபோன்ற சாகசங்களில் ஈடுபடாமல் இருப்பது நல்லது'' என்கிறார்.
பாம்பு பிடி வீரர்களுக்கு எது விஷமுள்ளது, எது விஷமற்றது என்று அடையாளம் காண்கிற அளவுக்கு பாம்புகள் குறித்த அறிவு அவசியம்.
விஷமுள்ள பாம்புகளை எப்படி கையாள்வது, அதற்கான உபகரணங்களை எப்படி பயன்படுத்துவது என்பன குறித்த அறிவும் அவசியம்.
பாம்பு பிடிக்கையில் உதவிக்கு ஒன்று அல்லது இரண்டு பேர் உடனிருக்க வேண்டும். ஆனால், நம் ஊரில் ஒருவர் பாம்பு பிடிக்கையில் அவரைச்சுற்றி பெரிய கூட்டமே கூடிவிடுகிறது. சிலர் கூட்டம் அதிகமானால் பதற்றமாகி விடுவார்கள்.
பாம்பு பிடிக்கும் நபர் உடல்ரீதியாகவும் மனரீதியாகவும் ஃபிட்டாக இருக்க வேண்டும். ஸ்ட்ரெஸ்ஸாக இருக்கையில் பாம்பு பிடிக்க செல்வது அவர்களுக்கு பாதுகாப்பில்லாமல் போகலாம்.
போதையில் இருக்கையில் பாம்பு பிடிக்கச் செல்லவேகூடாது.
வனத்துறை அதிகாரிகள், தீயணைப்புத்துறையினர் வழியாகத்தான் பாம்பு பிடி வீரர்களுக்கு தகவல் செல்லும். அப்படி செல்பவர்கள் மட்டுமே அங்கீகரிக்கப்பட்டவர்கள். அவர்களுக்கு விபத்துக்காப்பீடு, ஆயுள் காப்பீடு எடுக்கப்பட வேண்டுமென நெறிமுறையில் சொல்லியிருக்கிறோம்.
ஒருவேளை பாம்பு கடித்துவிட்டால், செய்ய வேண்டிய முதலுதவிகள்பற்றிய அறிவும் பாம்புபிடி வீரர்களுக்கு அவசியம் இருக்க வேண்டும். கூடவே, பாம்பு பிடிக்கும் இடத்தின் அருகேயுள்ள மருத்துவமனைப்பற்றி தகவலும் அவர்களுக்குத் தெரிந்திருக்க வேண்டும். இவை அனைத்தையும் பாம்பு பிடி வீரர்கள் கடைபிடிக்க வேண்டும். இதில் ஏதாவது ஒன்று தவறினாலும், அவர்களின் பாதுகாப்பு கேள்விக்குறியாகிவிடும்.
சந்தோஷ் அனுபவமுள்ள பாம்புபிடி வீரர்தான். அவருக்கு நிகழ்ந்ததை விபத்தாகத்தான் கருதவேண்டும். என்றாலும், அவரை இழந்து தவிக்கும் குடும்பத்தை நினைத்தால் வருத்தமாக இருக்கிறது. வனத்துறையினர் அல்லது தீயணைப்புத்துறையினர்தான் பாம்புகளை பிடித்து வனத்தில் விடுகிறார்கள். வன பாதுகாப்பு அதிகாரியுடன் தன்னார்வலர்களோ அல்லது தனி நபர்களோ சென்று பாம்பை மீட்டு வனத்தில் விடுவதும் நடக்கிறது. மற்றபடி, பாம்பு பிடிப்பதற்கு என அரசு இதுவரைக்கும் யாரையும் அங்கீகரிக்கவில்லை. அதனால், இதற்கான நெறிமுறைகளை தயாரித்துக்கொண்டிருக்கிறோம். அரசு அதை சீக்கிரமே வெளியிடும். அதன்பிறகு, வனத்துறை அதிகாரிகள், தீயணைப்புத்துறையினர் வழியாகத்தான் பாம்பு பிடி வீரர்களுக்கு தகவல் செல்லும். அப்படி செல்பவர்கள் மட்டுமே அங்கீகரிக்கப்பட்டவர்கள். அவர்களுக்கு விபத்து காப்பீடு, ஆயுள் காப்பீடு எடுக்கப்பட வேண்டுமென நெறிமுறையில் சொல்லியிருக்கிறோம்'' என்கிறார்.
பாம்புபிடி வீரர் மரணம் என்கிற செய்தி சந்தோஷ் குமாருடன் நிற்க வேண்டுமென்பதே நமது விருப்பம்.