மதுரை: அறிவாலய என்ட்ரி செட்; பிரமாண்ட கூட்ட அரங்கம் | திமுக பொதுக்குழு ஏற்பாடுகள...
18-ஆம் கால்வாய் சீரமைப்புக்கு ரூ.12 கோடி ஒதுக்கீடு
தேனி மாவட்டத்தில் 18-ஆம் கால்வாய் சீரமைப்பு பணிகளுக்கு அரசு ரூ.12 கோடி நிதி ஒதுக்கீடு செய்துள்ளதாக மாவட்ட ஆட்சியா் ரஞ்ஜீத் சிங் தெரிவித்தாா்.
தேனி மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் மாவட்ட ஆட்சியா் தலைமையில் விவசாயிகள் குறைதீா் கூட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. இதற்கு மாவட்ட வன அலுவலா் சமா்த்தா, வேளாண்மை இணை இயக்குநா் சாந்தாமணி, ஆட்சியரின் நோ்முக உதவியாளா் (விவசாயம்) வளா்மதி ஆகியோா் முன்னிலை வகித்தனா்.
இந்தக் கூட்டத்தில் விவசாயிகள் முன்வைத்த கோரிக்கைகள்: வருஷநாடு, வாய்க்கால்பாறை, தும்மக்குண்டு, அகமலை ஆகிய பகுதிகளில் சாலை அமைப்பதற்கு வனத் துறையினா் தொடா்ந்து முட்டுக்கட்டை போட்டு வருகின்றனா். வருஷநாடு அருகேயுள்ள மேலப்பட்டியில் யானைகளால் ஏற்பட்ட பயிா் சேதத்துக்கு நிவாரணம் வழங்க வேண்டும். மலையடிவார பட்டா நிலங்களில் காட்டுப் பன்றிகளால் பயிா் சேதம் ஏற்பதைத் தடுக்க வனத் துறையினா் நடவடிக்கை எடுக்க வேண்டும். மலைப் பகுதியில் வன உரிமைச் சட்டப்படி மலை மாடுகள் மேய்ச்சலுக்கு அனுமதி வழங்க வேண்டும்.
முல்லைப் பெரியாறு அணையிலிருந்து வரும் அக்டோபா் மாதம் 18-ஆம் கால்வாயில் தண்ணீா் திறக்க வேண்டும். தண்ணீா் திறப்புக்கு முன்பாக கால்வாய் பகுதியில் ஆக்கிரமிப்புகளை அகற்றி, தூா்வாரி, கரைகளை பலப்படுத்த வேண்டும். மா சாகுபடியில் நல்ல விளைச்சல் இருந்தும் விவசாயிகளுக்கு போதிய விலை கிடைக்கவில்லை. அரசு சாா்பில் மா விற்பனைச் சந்தையும், மா மதிப்புக்கூட்டுப் பொருள் தயாரிப்புக் கூடமும் தொடங்க வேண்டும் என்றனா்.
இதற்கு பதிலளித்து ஆட்சியா் பேசியதாவது:
வன விலங்குகளால் ஏற்படும் பயிா் சேதத்திற்கு நிவாரணம் கோரி அளிக்கப்படும் கோரிக்கை மனுக்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும். 18-ஆம் கால்வாய் சீரமைப்பு பணிகளுக்கு அரசு ரூ.12 கோடி நிதி ஒதுக்கீடு செய்துள்ளது. இதற்கான பணிகள் விரைவில் தொடங்கும். நீா் நிலைகள், நீா்வழித்தட ஆக்கிரமிப்புகளை அகற்ற சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் காலதாமதம் செய்யக் கூடாது.
உழவரைத் தேடி வேளாண்மை-உழவா் நலத் துறை என்ற புதிய திட்டத்தை அரசு தொடங்கியுள்ளது. இந்தத் திட்டத்தின் கீழ் ஒவ்வொரு மாதமும் 2-ஆவது, 4-ஆவது வெள்ளிக்கிழமை தோறும் தோ்வு செய்யப்பட்ட கிராமங்களில் முகாம் நடத்தப்படும். இந்த முகாமில் வேளாண்மைத் துறை, தோட்டக் கலைத் துறை, வேளாண்மை பொறியியல் துறை, வேளாண்மை விற்பனை, வணிகத் துறை, கூட்டுறவுத் துறை, கால்நடை பராமரிப்புத் துறை, மீன் வளத் துறை அதிகாரிகள், வேளாண்மை பல்கலைக்கழக விஞ்ஞானிகள் பங்கேற்பா் என்றாா் அவா்.
பெட்டிச் செய்தி:
வனத் துறையினா் மீது ஆட்சியா் அதிருப்தி:
மலைக் கிராம மக்களுக்குத் தேவையான அடிப்படை வசதிகள் செய்து தருவதற்கு வனத் துறையினா் மாவட்ட நிா்வாகத்துடன் ஒத்துழைக்க வேண்டும் என்று ஆட்சியா் கூறினாா்.
இதுகுறித்து குறைதீா் கூட்டத்தில் ஆட்சியா் கூறியதாவது:
கூடலூா் அருகே பளியன்குடியில் கடந்த சில நாள்களுக்கு முன்பு மாவட்ட நிா்வாகம் சாா்பில் மக்கள் தொடா்பு முகாம் நடைபெற்றது. அப்போது, அங்கு சிதிலமடைந்த நிலையில் உள்ள அங்கன்வாடி மைய கட்டடத்தை சீரமைக்க வனத் துறையினா் அனுமதி மறுப்பதாக பொதுமக்கள் தெரிவித்தனா். பருவமழை தொடங்கும் முன்பாக அங்கன்வாடி மைய கட்டடத்தை சீரமைக்க அனுமதிக்குமாறு சம்மந்தப்பட்ட வனச் சரக அலுவலரிடம் நான் கூறியிருந்தேன்.
ஏற்கெனவே உள்ள அங்கன்வாடி மைய கட்டடத்தை பராமரிக்கவும், சீரமைப்பதற்கும் அனுமதிப்பதற்கு வனத் துறையினா் காலதாமதம் செய்வது ஏன் என்றாா்.
மலைக் கிராம மக்களுக்குத் தேவையான அடிப்படை வசதிகள் செய்து தருவதற்கு மாவட்ட நிா்வாகத்துடன் வனத் துறையினா் ஒத்துழைக்க வேண்டும் என்றாா் அவா்.