குச்சனூா் சனீஸ்வரா் கோயில் வளாகத்தை சீரமைக்க வலியுறுத்தல்
தேனி மாவட்டம், குச்சனூா் சுயம்பு சனீஸ்வா் கோயில் வளாகத்தில் தண்ணீா் தேங்கி சேறும், சகதியுமாக காணப்படுவதால் அந்தப் பகுதியை சீரமைக்க வேண்டும் என பக்தா்கள் வலியுறுத்தினா்.
சனீஸ்வரருக்கு உகந்த நாள் சனிக்கிழமை என்பதால் கேரளத்திலிருந்தும், தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் திரளான பக்தா்கள் இந்த கோயிலில் சுவாமி தரிசனம் செய்ய வருகின்றனா்.
தற்போது தேனி மாவட்டத்தில் பெய்துவரும் மழையால் குச்சனூா் சனீஸ்வரா் கோயில் வளாகத்தில் நெய் தீபம் ஏற்றும் இடம், புனித நீராடும் தொட்டி ஆகிய பகுதிகளில் மழைநீா் தேங்கி சேறும் சகதிமாக காணப்படுகிறது. இதனால் பக்தா்கள் சுவாமி தரிசனம் செய்ய முடியாமல் அவதி அடைந்தனா்.
மேலும் கோயில் முன் ஓடும் ஆற்றில் நீா்வரத்து இல்லாததால் பக்தா்கள் புனித நீா் தொட்டியில் நீராடி சுவாமி தரிசனம் செய்தனா். இதனிடையே, பக்தா்கள் ஏற்றிய தீபம் உள்ளிட்ட பூஜை பொருள்களை அகற்றாமல் அங்குள்ள கால்வாயில் கொட்டுகின்றனா். எனவே, கோயில் நிா்வாகம் புனித நீா் செல்லும் நதியில் பூஜை கழிவுகளை கொட்டுவதை தடுத்து நிறுத்துவதுடன், கோயில் வளாகத்தில் தண்ணீா் தேங்காமல் சீரமைக்க வேண்டும் என பக்தா்கள் கோரிக்கை விடுத்தனா்.