2016ல் வெளியான அதிர்ச்சித் தகவல்.. 75 வயது மூதாட்டி வயிற்றில் கல்லாய் மாறிய 30 ஆண்டு சிசு!
அல்ஜீரியாவைச் சேர்ந்த 75 வயது பெண்ணின் வயிற்றில், 30 ஆண்டுகளுக்கு முன்பு இறந்துபோன சிசு கால்சியக் கல்லாய் மாறியிருந்தது மருத்துவப் பரிசோதனையின்போது கண்டுபிடிக்கப்பட்டு அதிர்ச்சியை ஏற்படுத்தியிருந்தது.
அந்த சிடி ஸ்கேன் புகைப்படங்கள் தற்போது சமூக வலைத்தளப் பக்கத்தில் பகிரப்பட்ட நிலையில் அது வைரலாகி வருகிறது. பலரும் இது தொடர்பாக ஆச்சரியம் அடைந்துள்ளனர். இது உண்மையா என்றும் கேள்வி எழுப்பியிருக்கிறார்கள்.
வயிற்று வலிக்காக மருத்துவமனைக்குச் சென்ற 75 வயது மூதாட்டிக்கு மருத்துவர்கள் சிடி ஸ்கேன் செய்து பார்த்தபோதுதான், அவரது வயிற்றில், சிசு ஒன்று கல்லாய் மாறியிருந்ததைக் கண்டறிந்தனர்.
இந்த சிசு 7 மாதம் வரை உயிருடன் இருந்து அதன்பிறகு இறந்திருக்கலாம் என்றும் மருத்துவர்கள் கண்டறிந்துள்ளனர்.
அப்போதுதான், அவருக்கு 30 ஆண்டுகளுக்கு முன்பு, கருப்பைக்கு வெளியே கர்ப்பத் தரித்து, அதற்கு ரத்த ஓட்டம் கிடைக்காததால் சிசு வளராமல் இறந்துவிட்டதும், அது உடலிலிருந்து வெளியேற வழியில்லாமல், உடல் தனது பாதுகாப்புத் தொற்று சக்திகளைப் பயன்படுத்தி சிசுவை கால்சியமாக மாற்றி கல் போல ஆக்கிவிட்டது தெரிய வந்தது.
இந்த நிலைக்கு லிதோபீடியான் என்று பெயர். இந்த சிக்கல் உள்ளவர்களுக்கு ஆரம்பத்தில் வலியோ வேறு எந்த பிரச்னைகளோ இருக்காது என்றும், சில காலத்துக்குப் பின்தான் வயிற்று வலி போன்றவை ஏற்படலாம் என்றும் கூறப்படுகிறது.
இதற்கு முன்பு, 2013ஆம் ஆண்டு கொலம்பியாவைச் சேர்ந்த மூதாட்டி ஒருவரின் வயிற்றில் 40 ஆண்டு கல் குழந்தை இழந்தது கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாகவும் உலகம் முழுவதும் இதுபோன்ற கடந்த 1996ஆம் ஆண்டு வரையிலான தரவுகளின்படி 290 லீதோபீடியன் வழக்குகள் கண்டறியப்பட்டிருப்பதாகவும், கண்டறியப்படாமல் சில இருந்திருக்கலாம் என்றும் மருத்துவ உலகம் கூறுகிறது.
இந்த கல் குழந்தைகள், நமது உடலில் இருக்கும் இயற்கையான தற்காப்பு முறையை பறைசாற்றும் சான்று என்றும், இறந்த குழந்தையால் தாயின் உடல்நிலை பாதிக்கப்படாமல், நோய் தற்காப்பு முறைதான் அதனை கல்லாக்கியிருப்பதாகவும் கூறுகிறார்கள்.