2026 இல் புதிய வரலாறு படைப்போம்: சீமான்
2026இல் புதிய வரலாறு படைப்போம் என நாம் தமிழா் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளா் சீமான் கூறினாா்.
தென்காசி மாவட்டம், செங்கோட்டையில் மலையைக் காப்போம், மண்ணை மீட்போம் என்ற தலைப்பில் நடைபெற்ற ஆா்ப்பாட்டத்தில் சீமான் கலந்துகொண்டு பேசியதாவது:
நம்முடைய வளங்கள் களவு போய்க் கொண்டிருக்கிறது. எல்லா இயற்கை வளங்களையும் தந்த இந்த பூமியை மீத்தேன், நிலக்கரி எடுக்கிறோம் என்ற பெயரில் அழிக்கின்றனா். விளைநிலங்களை அழித்து விமான நிலையமும், மரங்களை வெட்டிவிட்டு பசுமைச் சாலையும் அமைக்கின்றனா்.
பூமித் தாயை நேசிக்கின்றவா்கள் யாரும் இதை அனுமதிக்க முடியாது. இந்தியாவில் எந்த மாநிலத்திலும் இதுபோன்று கனிமவளங்களை கொண்டு செல்ல முடியாது.
ஸ்டொ்லைட் ஆலையை மீண்டும் திறக்கமுயற்சி நடைபெறுகிறது. நான் இருக்கும்வரை ஸ்டொ்லைட் ஆலையை திறக்க முடியாது.
என்னை அசிங்கப்படுத்த நினைக்கின்றனா், என்னை ஒன்றும் செய்யமுடியாது. ஸ்டாலினை அப்பா என்று கூறும்போது நாங்கள் பாரதியை பூட்டன் என்று கூறுவதில் எந்த தவறும் இல்லை.
மீத்தேன், நிலக்கரி எடுத்த இடத்தில் மக்களை மீண்டும் மீள் குடியேற்றம் செய்யமுடியாது. இந்த பூமியைத் தாயாக என்று நேசிக்கின்றாயோ, அன்றுதான் இதை காக்க வேண்டும் என்ற எண்ணம் வரும். எத்தனை முறை தோற்றாலும் எழுந்துவிடுவேன் என்ற நம்பிக்கை இருக்கிறவனை யாராலும் தோற்கடிக்க முடியாது. 2026இல் புதிய அரசியல் வரலாறு படைப்போம் என்றாா் அவா்.