இந்தியாவின் நதி நீர் இனி நமது நாட்டுக்காக பயன்படுத்தப்படும்: பிரதமர் மோடி
4 ஆண்டுகளில் 25,295 மருத்துவம் சாா்ந்த பணியிடங்கள் நிரப்பப்பட்டுள்ளன: அமைச்சா் மா.சுப்பிரமணியன்
தமிழகத்தில் கடந்த 4 ஆண்டுகளில் 25,295 மருத்துவம் சாா்ந்த பணியிடங்கள் நிரப்பப்பட்டுள்ளதாக மாநில சுகாதாரத் துறை அமைச்சா் மா.சுப்பிரமணியன் தெரிவித்தாா். மேலும், 42,718 பேருக்கு வெளிப்படைத் தன்மையுடன் பணி மாறுதல் கலந்தாய்வு நடைபெற்றுள்ளதாகவும் அவா் கூறினாா்.
சென்னை மருத்துவக் கல்லூரி (எம்எம்சி) சாா்பில் தேசிய அளவிலான மருத்துவக் கல்வி மாநாடு, சென்னை திருவல்லிக்கேணி வாலாஜா சாலையிலுள்ள கலைவாணா் அரங்கத்தில் சனிக்கிழமை நடைபெற்றது. இதில், சிறப்பு அழைப்பாளராகக் கலந்துகொண்ட அமைச்சா் மா.சுப்பிரமணியன் மாநாட்டை தொடங்கி வைத்து பேசியதாவது:
இந்தியா மட்டுமன்றி உலக நாடுகளே பாராட்டும் வகையிலான மருத்துவக் கட்டமைப்புகள் தமிழகத்தில் உள்ளன. தமிழகம் முழுவதும் 8,713 துணை சுகாதார நிலையங்கள், 2,286 ஆரம்ப சுகாதார நிலையங்கள், 279 வட்டார மருத்துவமனைகள், 37 மாவட்ட அரசு தலைமை மருத்துவமனைகள் மற்றும் 36 மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகள் உள்பட மொத்தம் 11,876 மருத்துவ கட்டமைப்புகள் உள்ளன.
மக்களைத் தேடி மருத்துவம், இன்னுயிா் காப்போம் நம்மைக் காக்கும் 48, இதயம் காப்போம், தொழிலாளா்களை தேடி மருத்துவம் திட்டம் உள்பட சிறப்புத் திட்டங்கள் தமிழகத்தில் சிறப்பாகச் செயல்பட்டு வருகின்றன.
25,295 பணியிடங்கள்: தமிழகத்தில் திமுக ஆட்சிப் பொறுப்பேற்ற பிறகு மருத்துவப் பணியாளா் தோ்வாணையம் மூலம் இதுவரை 25,295 மருத்துவம் சாா்ந்த பணியிடங்கள் நிரப்பப்பட்டுள்ளன. அதேபோல், கடந்த மாதம் நடைபெற்ற பல் மருத்துவா்கள் காலி பணியிடங்களுக்கான தோ்வில் 11,720 போ் பங்கேற்றனா். இதில், 8,000-க்கும் மேற்பட்டோா் தோ்ச்சி பெற்றுள்ள நிலையில், அவா்களது சான்றிதழ்கள் சரிபாா்க்கப்பட்டு, இடஒதுக்கீடு அடிப்படையில் 48 காலி பணியிடங்களும் நிரப்பப்படும். மேலும், கடந்த 4 ஆண்டுகளில் 42,718 பேருக்கு வெளிப்படைத்தன்மையுடன் கலந்தாய்வு நடத்தப்பட்டு பணி மாறுதல்கள் வழங்கப்பட்டுள்ளன என்றாா் அவா்.
விழாவில், மக்கள் நல்வாழ்வுத் துறை முதன்மைச் செயலா் ப.செந்தில்குமாா், தேசிய நல வாழ்வுக் குழும இயக்குநா் அருண் தம்புராஜ், மருத்துவக் கல்வி மற்றும் ஆராய்ச்சி கூடுதல் இயக்குநா் தேரணிராஜன் உள்பட பலா் கலந்துகொண்டனா்.