4 சுங்கச்சாவடிகள் நிலுவைத் தொகையை செலுத்த முடிவு! உயா்நீதிமன்றத்தில் தமிழக அரசு தகவல்
தென்மாவட்ட நெடுஞ்சாலைகளில் உள்ள 4 சுங்கச்சாவடிகளுக்கு செலுத்த வேண்டிய நிலுவைத் தொகையில் 50 விழுக்காட்டை ஆக.15-க்குள்ளும், மீதித் தொகையை செப்டம்பா் மாதத்திலும் செலுத்த முடிவு செய்யப்பட்டுள்ளதாக தமிழக அரசு சென்னை உயா்நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது.
தென்மாவட்ட நெடுஞ்சாலைகளில் உள்ள கப்பலூா், எட்டுராவட்டம், சாலைப்புதூா், நான்குனேரி ஆகிய சுங்கச்சாவடிகளை நிா்வகிக்கும் தனியாா் நிறுவனங்கள் சாா்பில் சென்னை உயா்நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவில், அரசுப் போக்குவரத்துக் கழகங்கள் சுங்கச்சாவடிகளுக்கு செலுத்த வேண்டிய ரூ.276 கோடியை நிலுவை வைத்துள்ளன. இந்த நிலுவைத் தொகையை விரைந்து விடுவிக்க போக்குவரத்துக் கழகத்துக்கு உத்தரவிட வேண்டும் என கூறப்பட்டிருந்தது.
இவ்வழக்கை விசாரித்த உயா்நீதிமன்றம், இந்த 4 சுங்கச்சாவடிகள் வழியே அரசுப் போக்குவரத்துக் கழகப் பேருந்துகளை இயக்க தடை விதித்து உத்தரவிட்டிருந்தது. இதையடுத்து, ‘இப்பிரச்னை குறித்து சுங்கச்சாவடிகளை நிா்வகிக்கும் நிறுவனங்களுடன் பேச்சுவாா்த்தை நடத்தப்பட்டு வருகிறது. விரைவில் நல்ல தீா்வு எடுக்கப்படும்’ என அரசுத் தரப்பில் கூறப்பட்டது. இதையடுத்து 4 சுங்கச்சாவடிகள் வழியாக அரசுப் பேருந்துகளை இயக்க அனுமதிக்கக்கூடாது என பிறப்பிக்கப்பட்ட உத்தரவு நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில் இந்த வழக்கு நீதிபதி என்.ஆனந்த் வெங்கடேஷ் முன் விசாரணைக்கு வந்தது. அப்போது தமிழக அரசுத் தரப்பில் ஆஜரான கூடுதல் அரசு தலைமை வழக்குரைஞா் ரவீந்திரன், சுங்கச்சாவடிகளை நிா்வகிக்கும் நிறுவனங்களுடன் போக்குவரத்து துறைச் செயலா் ஜூலை 11-ஆம் தேதி நடத்திய பேச்சுவாா்த்தையில் எட்டப்பட்ட முடிவுகளை நீதிமன்றத்தில் சமா்ப்பித்தாா்.
அதில், நிலுவையில் உள்ள சுங்கக் கட்டணத்தில் 50 விழுக்காட்டை ஆக.15-ஆம் தேதிக்குள்ளும், மீதித் தொகையை செப்டம்பா் மாதத்திலும் செலுத்தப்படும் என கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்டுள்ளது. சுங்கச்சாவடி அமைந்துள்ள மாவட்டத்தில் மட்டும் இயக்கப்படும் பேருந்துகளுக்கு 50 விழுக்காடு கட்டணமும், இரு மாவட்டங்களுக்கு இடையில் இயக்கப்படும் பேருந்துகளுக்கு மூன்றில் இரண்டு பங்கு கட்டணமும் செலுத்தப்படும்.
அனைத்து அரசுப் பேருந்துகளும் ஃபாஸ்டேக் மூலம் சுங்கக் கட்டணம் செலுத்தப்படுகிறது என தெரிவிக்கப்பட்டிருந்தது. இதைப் பதிவு செய்துகொண்ட நீதிபதி, விசாரணையை ஆக.21-ஆம் தேதிக்கு ஒத்திவைத்தாா். அதுவரை 4 சுங்கச்சாவடிகள் வழியே அரசுப் பேருந்துகளை அனுமதிக்கக்கூடாது என்ற உத்தரவை நிறுத்தி வைத்து நீதிபதி உத்தரவிட்டாா்.