2,417 கிராம செவிலியர் காலிப் பணியிடங்கள் விரைவில் நிரப்பப்படும்: முதல்வர் ஸ்டாலி...
50% வரி, Chabahar, H-1B விசா; வரிசைக்கட்டி உள்ள பிரச்னைகள்... அமெரிக்கா செல்லும் பியூஷ், ஜெய்சங்கர்!
இன்று அமெரிக்காவில் ஆறாவது கட்ட இந்தியா - அமெரிக்கா பேச்சுவார்த்தை நடக்க உள்ளன. (இந்திய நேரப்படி இன்று இரவு)
இந்தப் பேச்சுவார்த்தைக்காக இந்திய வர்த்தக மற்றும் தொழில்துறை அமைச்சர் பியூஷ் கோயல் அமெரிக்கா செல்கிறார்.
இன்னொரு பக்கம், அமெரிக்க வெளியுறவுத்துறை செயலர் மார்க் ரூபியோவை அமெரிக்காவில் சந்திக்கிறார் இந்திய வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கர்.
ஆக, இன்று ஒரு மிக முக்கியமான நாள் என்றே கருதலாம்.

இந்தியா, அமெரிக்கா உறவில் விரிசல்
கடந்த ஆகஸ்ட் மாதத்தின் தொடக்கத்தில், இந்தியா மீது அமெரிக்கா 50 சதவிகித வரியை விதித்தது. இதில் 25 சதவிகித வரி இந்தியா ரஷ்யாவில் இருந்து எண்ணெய் இறக்குமதி செய்வதால் விதிக்கப்பட்ட கூடுதல் வரி ஆகும்.
அப்போதிருந்தே இந்தியா, அமெரிக்கா உறவில் உண்டான விரிசல் பெரிதாக தொடங்கியது.
இந்தியா, அமெரிக்கா இடையே பெரிய வர்த்தக இடைவெளி உள்ளது... அமெரிக்கா மீது அதிக வரி விதிக்கும் டாப் நாடுகளில் ஒன்று இந்தியா... ரஷ்யாவில் இருந்து இந்தியா எண்ணெய் இறக்குமதி செய்வதால், அந்தப் பணத்தை ரஷ்யா உக்ரைனுக்கு எதிரான போரில் பயன்படுத்துகிறது... என்று ஏகப்பட்ட காரணத்தை அமெரிக்க அதிபர் ட்ரம்ப் அடுக்குகிறார்.
மூன்று மறைமுக கோபங்கள்
இதையும் தாண்டி, அவருக்கு இந்தியா மீது மூன்று முக்கிய கோபங்கள் உண்டு.
கடந்த மே மாதம், இந்தியா - பாகிஸ்தான் இடையே நடந்த மோதலை நிறுத்தத்திற்கு கொண்டு வந்தது 'நான் தான்' என்று ட்ரம்ப் பலமுறை பறைசாற்றி வருகிறார். இதை இந்திய பிரதமர் மோடி மறுத்து வருகிறார். கடந்த ஜூன் மாதம், ட்ரம்ப் உடனான தொலைபேசி அழைப்பின் போது, இது குறித்து மிக தெளிவாக அவரிடமே மறுத்திருக்கிறார் மோடி.

அடுத்ததாக, கடந்த ஜூலை மாதம், பிரிக்ஸ் உச்சி மாநாட்டில் கலந்துகொள்வதற்காக பிரேசில் சென்றிருந்தார் மோடி. அப்போது அமெரிக்காவிற்கு வந்துவிட்டு செல்லுமாறு மோடிக்கு அழைப்பு விடுத்திருந்தார் ட்ரம்ப். ஆனால், அப்போது மோடி வேலை நிமித்தமாக அமெரிக்கா செல்லவில்லை.
மூன்றாவதாக, மோடியும், ட்ரம்பும் நல்ல நண்பர்கள். ஆனால், பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப், இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு, கம்போடியாவின் பிரதமர் ஹன் மானெட் ஆகியோர் நோபல் பரிசுக்கு ட்ரம்பைப் பரிந்துரை செய்துள்ளனர். ஆனால், மோடி மட்டும் இன்னும் ட்ரம்பை பரிந்துரை செய்யவில்லை.
இந்த மூன்று வருத்தங்கள், கோபங்களும் இந்தியா மீதான வரிக்கு மறைமுக காரணங்கள் என அரசியல் வல்லுநர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.
மோடியின் சீன விசிட்
செப்டம்பர் மாதம் வரை, இந்தியாவைச் சாடி வந்த ட்ரம்பிடம் இந்த மாதத்தின் தொடக்கத்தில் சற்று மாற்றத்தைக் காணமுடிந்தது. இதற்கு முக்கிய காரணம், பிரதமர் மோடியின் சீனா விசிட்.
இந்தியா - சீனா எல்லைப் பிரச்னைகளுக்கு பிறகு... 7 ஆண்டுகளுக்குப் பிறகு, கடந்த ஆகஸ்ட் மாதத்தின் இறுதியில் சீனா சென்றிருந்தார் மோடி. அங்கே நடந்த ஷாங்காய் உச்சி மாநாட்டில் கலந்துகொண்டார். அந்த மாநாட்டில் மோடி, சீன அதிபர் ஜி ஜின்பிங், ரஷ்ய அதிபர் புதின் ஆகிய மூவரின் நட்பும் மிகவும் இணக்கமாக இருந்தது.

மூன்று நாடுகள்
இந்த மூன்று நாடுகளையும் சற்று தள்ளி நின்று பார்த்தால், இந்த மூன்று நாடுகளுமே அமெரிக்காவிற்கு எதிராக தற்போதைக்கு ஒவ்வொரு விதமாக உள்ளது.
இந்தியா - ட்ரம்ப் எதிர்பார்ப்பதை இந்தியா செய்யவில்லை. வரி விதித்து பயமுறுத்தியும், இன்னும் இந்தியா வழிக்கு வரவில்லை.
சீனா - அமெரிக்கா, சீனா இடையே தற்போது பேச்சுவார்த்தை நடந்துகொண்டு தான் இருக்கிறது. ஆனாலும், சீனா தனிநடை போட்டு வருகிறது. அதிக வரி விதிக்கப்பட்ட இந்தியா, பிரேசிலுக்காக குரல் கொடுத்து வருகிறது.
ரஷ்யா - புதின் நல்ல நண்பர் என்பதால், தான் பதவிக்கு வந்ததும் எளிதாக ரஷ்யா - உக்ரைன் போரை முடிவுக்கு கொண்டு வந்துவிடலாம் என்று ட்ரம்ப் நினைத்திருந்தார். ஆனால், இன்று வரை அது கனவாக மட்டுமே தொடர்கிறது.
இந்த மூன்று நாடுகளும் சீனாவில் ஒன்றுகூடி கைக்குலுக்கியது ட்ரம்பிற்கு நிச்சயம் ஜெர்க்கை உண்டாக்கியிருக்கும்.
மீண்டும் 'நண்பேன்டா'
இந்தியா, சீனா நட்பு அமெரிக்காவிற்கு அவ்வளவு நல்லதல்ல. காரணம், அமெரிக்காவிற்கு போட்டி நாடாக சீனா வேகமாக வளர்ந்து வருகிறது. அதன் வளர்ச்சியைக் கட்டுப்படுத்த ஆசியாவில் அமெரிக்காவிற்கு இருக்கும் ஒரே நம்பிக்கை இந்தியா.
பல ஆண்டுகளாக, அமெரிக்கா இந்தியா உடன் பார்த்து பார்த்து வளர்த்து வந்த உறவைத் தான் சீட்டுக்கட்டைப் போல சரித்துவிட்டார் ட்ரம்ப்.
அதை சரிசெய்யவும், சீனா உடனான இந்தியாவின் நெருக்கத்தைக் குறைக்கவும், மீண்டும் ட்ரம்ப் நட்பு அஸ்திரத்தை இந்த மாதத்தின் தொடக்கத்திலேயே தொடங்கிவிட்டார்.
"நான் எப்போதும் பிரதமர் மோடி உடன் நட்பாக இருப்பேன். அவர் ஒரு சிறந்த பிரதமர். நான் எப்போதுமே அவருக்கு நண்பர்தான். ஆனால், இப்போது என்ன நடக்கிறதோ, அதுதான் எனக்குப் பிடிக்கவில்லை.

எப்போதுமே இந்தியா மற்றும் அமெரிக்கா இடையே மிகச் சிறப்பான உறவு இருக்கும். அது குறித்துக் கவலைப்படத் தேவையில்லை. அவ்வப்போது இந்த மாதிரியான நிகழ்வுகள் நடக்கும். அவ்வளவு தான்" என்று செய்தியாளர் சந்திப்பில் ட்ரம்ப் மோடி மீதும், இந்தியா மீதும் பாச மழை பொழிந்திருந்தார்.
இங்கிலாந்து பயணத்தின் போதும், ட்ரம்ப், பிரதமர் மோடி என்னுடைய நண்பர் என்று பேசியிருந்தார்.
பின், மோடியின் பிறந்த நாள் அன்றும், போன் செய்து வாழ்த்து தெரிவித்தார்.
இப்படி தனது ரூட்டைக் கொஞ்சம் கொஞ்சமாக மாற்றி வரும் ட்ரம்ப், இந்தியா, அமெரிக்கா வர்த்தகம் குறித்தும் பாசிட்டிவாகத் தான் பேசி வருகிறார்.
முன்னேற்றம் காணும் பேச்சுவார்த்தைகள்
கடந்த வாரம், வர்த்தக பேச்சுவார்த்தைக்காக இந்தியா வந்த அமெரிக்க அதிகாரி குழுக்களும் பேச்சுவார்த்தை முன்னேற்றத்துடனே அமெரிக்கா திரும்பி சென்றுள்ளனர்.
முன்னர், பியூஷ் கோயல், இந்திய - அமெரிக்க வர்த்தக ஒப்பந்தத்தின் முதல் கட்டம் வரும் நவம்பர் இறுதி செய்யப்படும் என்று நம்பிக்கை தெரிவித்திருந்தார்.
ஆக, இன்று பியூஷ் கோயல், ஜெய்சங்கர் அமெரிக்க பயணம் இருக்கப்போகிறது.

மூன்று விஷயங்கள்
இப்போதிருக்கும் சூழலில், மூன்று விஷயங்களைக் கவனிக்க வேண்டும்.
ஒன்று, அமெரிக்காவின் 50 சதவிகித வரியால், இந்தியாவின் பல மாவட்டங்கள் பாதிக்கப்பட்டுள்ளன.
திருப்பூரில் மட்டும் ட்ரம்பின் வரியால், கிட்டத்தட்ட ரூ.3,000 கோடி மதிப்புள்ள ஆயத்த ஆடை ஏற்றுமதி வர்த்தகம் பாதிக்கும் என்று தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலினே குறிப்பிட்டுள்ளார். இது 'ஒரு சட்டி பானைக்கு ஒரு சாதம் பதம்' போன்றது தான்.
இந்தியா முழுவதும் இப்படி பல ஆயிரம் கோடி வர்த்தகங்கள் பாதிக்க உள்ளன.
இன்று நடக்க உள்ள பேச்சுவார்த்தைகள், இந்த 50 சதவிகித வரிக் குறைப்பை நோக்கி செல்ல வேண்டும்... அல்லது அதற்கான முன்னெடுப்புகளையாவது எடுத்து செல்ல வேண்டும்.
இரண்டு, நேற்று முதல் அமெரிக்கா வழங்கும் H-1B விசாவின் விலை 1 லட்சம் டாலர்களாக உயர்த்தப்பட்டுள்ளது. இது இந்தியாவைப் பெரும்பாலும் பாதிக்கும். காரணம், இந்த விசா பெறும் 67 சதவிகிதத்தினர் இந்தியர்கள் தான். இது இந்தியாவிற்கு பெரும் இடி.
மூன்று, ஈரானில் இந்தியா கட்டிவரும் சாபஹார் துறைமுகத்திற்கு சில தடைகளையும், கட்டுப்பாடுகளையும் கடந்த வாரம் அமெரிக்கா விதித்தது. இது இந்தியா அந்தத் துறைமுகத்தில் போட்டுள்ள முதலீடுகளைப் பாதிக்கும்.
இந்தச் சூழல்களில் நடைபெறும் பேச்சுவார்த்தை பாசிட்டிவாக முடிய வேண்டும்... இந்திய பொருளாதாரத்திற்கு வலுசேர்க்க வேண்டும்... என்ன நடக்கிறது என்பதைப் பொறுத்திருந்து பார்க்கலாம்.