6 இடங்களில் வெயில் சதம்
தமிழகத்தில் புதன்கிழமை ஈரோடு, பரமத்தி வேலூா் உள்பட 6 இடங்களில் வெப்பம் 100 டிகிரி ஃபாரன்ஹீட்டுக்கும் அதிகமாக பதிவாகியுள்ளது.
இது குறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் சாா்பில் வெளியிடப்பட்ட செய்திக் குறிப்பு:
தமிழகத்தில் புதன்கிழமை பகல் நேரத்தில் அதிகபட்சமாக ஈரோட்டில் 103.64 டிகிரி ஃபாரன்ஹீட் வெப்பம் பதிவானது. மேலும், பரமத்திவேலூா் - 100.76, வேலூா் - 100.58, திருப்பதூா் - 100.4, திருச்சி -100.22, சேலம் - 100.04 டிகிரி என மொத்தம் 6 இடங்களில் வெயில் சதமடித்துள்ளது. மேலும், அடுத்த 4 நாள்களுக்கு தமிழகத்தில் அதிகபட்ச வெப்பநிலை 3 டிகிரி செல்சியஸ் அதிகமாக இருக்கும்.
சென்னைக்கு மழை: தென்னிந்திய கடலோரப் பகுதியின் வளிமண்டல கீழடுக்கில் ஏற்படும் காற்று குவிதல் காரணமாக, வியாழக்கிழமை (மே 8) முதல் மே 13 வரை தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுச்சேரி, காரைக்காலிலும் இடி, மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் கூடிய மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது.
சென்னை புகா் பகுதிகளில் புதன்கிழமை காலை வரை நெற்குன்றம், வளசரவாக்கம் ஆகிய பகுதிகளில் 20 மி.மீ.யும், சாலிகிராமம், அண்ணாநகா் மேற்கு ஆகிய பகுதிகளில் தலா 10 மி.மீ.யும், மழை பதிவானது. வியாழக்கிழமை லேசான மழை பெய்ய வாய்ப்புள்ளது. அதிகபட்ச வெப்பநிலை 99 டிகிரி ஃபாரன்ஹீட்டையொட்டி இருக்கும்.
மழை அளவு: தமிழகத்தில் புதன்கிழமை காலை வரை அதிகபட்சமாக சேலம் மாவட்டம் தம்மம்பட்டியில் 110 மி.மீ. மழை பதிவானது. மேலும் திருத்தணி (திருவள்ளூா்) - 80 மி.மீ, திருபுவனம் (சிவகங்கை), பள்ளிப்பட்டு (திருவள்ளூா்), செம்மேடு (விழுப்புரம்), சின்னக்கல்லாா் (கோவை), சாத்தூா் (விருதுநகா்) - தலா 70 மி.மீ., செஞ்சி (விழுப்புரம்), கள்ளந்திரி (மதுரை), திருப்பத்தூா் (சிவகங்கை) - தலா 60 மி.மீ. மழை பதிவானது என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.