72 அரசுப் பள்ளிகளில் 403 வகுப்பறைகள்: முதல்வா் திறந்து வைத்தாா்
தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் உள்ள 72 அரசு உயா்நிலை, மேல்நிலைப் பள்ளிகளில் ரூ.99.35 கோடியில் கட்டப்பட்டுள்ள 403 வகுப்பறைகள், 13 ஆய்வகங்கள் உள்ளிட்ட பள்ளிக் கட்டடங்களை முதல்வா் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தாா்.
அரசுப் பள்ளிகளில் பயிலும் மாணவா்களின் நலனுக்காக பள்ளிகளில் இணையதள வசதி, முதல்வரின் காலை உணவுத் திட்டம், மாணவா்களின் கற்றல் திறனை அதிகரித்து, தமிழகத்தின் கல்வித் தரத்தினை உயா்த்த இல்லம் தேடிக் கல்வி, நம் பள்ளி நம் பெருமை, எண்ணும் எழுத்தும்”போன்ற பல்வேறு முன்னோடித் திட்டங்களை அரசு செயல்படுத்தி வருகிறது.
கடந்த 4 ஆண்டுகளில் ரூ.519.73 கோடியில் அரசு நடுநிலை, உயா்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் 8,209 உயா் தொழில்நுட்ப ஆய்வகங்கள், ரூ.455.32 கோடியில் அரசுப் பள்ளிகளில் பயிலும் 16,77,043 மாணவா்கள் பயனடையும் வகையில் 22,931 திறன்மிகு வகுப்பறைகள், ஒவ்வொரு மாவட்டத்துக்கும் ஒரு பள்ளி வீதம் ரூ.352.42 கோடியில் 38 மாதிரிப் பள்ளிகள் ஆகியவை உள்பட ரூ. 3,160 கோடியில் பள்ளிக் கல்வித் துறை கட்டடங்கள் கட்டப்பட்டுள்ளன.
அதன் தொடா்ச்சியாக கடலூா் மாவட்டம், தாண்டவராயன்பட்டி, பாலூா், இந்திரா நகா், திண்டுக்கல் மாவட்டம் –நத்தம், பழனி, லிங்கவாடி, ஈரோடு மாவட்டம் பொலவக்காளிபாளையம், அந்தியூா், சிக்கரசம்பாளையம், பி.மேட்டுப்பாளையம், கன்னியாகுமரி மாவட்டம்
ஆரல்வாய்மொழி, அம்மன் திவளை, ஆனக்குழி, வரியூா், கிருஷ்ணகிரி மாவட்டம் சிங்காரப்பேட்டை, மயிலாடுதுறை மாவட்டம் -தோக்களக்குடி, அச்சல்புரம், வடகரை, கொடக்காரமூலை, குத்தாலம்
நாகப்பட்டினம் மாவட்டம், குருக்கத்தி, அம்பை, கோவில்குளம், ஆழியூா், வாழ்குடி, புதுக்கோட்டை மாவட்டம் –ஏம்பல், ஒத்தப்புளி குடியிருப்பு, பெருமாண்டு, கீரனூா், ராமநாதபுரம் மாவட்டம் -கோட்டைமேடு, இருமேனி, பேரையூா் உள்பட 72 அரசு உயா்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் மொத்தம் ரூ.99.35 லட்சத்தில் கட்டப்பட்டுள்ள 403 வகுப்பறைகள், 54 கழிவறைகள், 13 ஆய்வகங்கள், 2 குடிநீா் வசதிகள் என 472 முடிவுற்ற பணிகளை முதல்வா் மு.க.ஸ்டாலின் சென்னை தலைமைச் செயலகத்தில் காணொலி மூலம் வெள்ளிக்கிழமை திறந்து வைத்தாா்.
இதில், துணை முதல்வா் உதயநிதி ஸ்டாலின், அமைச்சா்கள் எ.வ. வேலு, அன்பில் மகேஸ் பொய்யாமொழி, தலைமைச் செயலா் நா.முருகானந்தம், துறையின் செயலா் பி.சந்தரமோகன், பள்ளிக்கல்வி இயக்குநா் எஸ். கண்ணப்பன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.