தமிழகத்தில் வலிமையான நிலையில் தேசிய ஜனநாயக கூட்டணி! - மத்திய இணை அமைச்சா் எல்.மு...
ADMK : அதிமுக கொடி, ஜெயலலிதா பெயர், படம்... டிடிவி தினகரனுக்கு எதிரான மனுவை வாபஸ் வாங்கிய எடப்பாடி!
அதிமுக-வின் கறுப்பு, வெள்ளை கொடி, பெயர், ஜெயலலிதாவின் பெயர், புகைப்படம் ஆகியவை பயன்படுத்த டிடிவி தினகரனுக்கு தடை விதிக்க கோரி சென்னை நீதிமன்றத்தில் அதிமுக தாக்கல் செய்த மனுவை எடப்பாடி பழனிசாமி திரும்ப பெற்றுக் கொண்டார்.
அதிமுக துணைப் பொதுச் செயலாளராக இருந்த டி.டி.வி தினகரன் கடந்த 2017 ஆம் ஆண்டு அந்த கட்சியிலிருந்து நீக்கப்பட்டார். பின்னர் அவர் 2018 ஆம் ஆண்டு மார்ச் மாதம் அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் என்ற பெயரில் புதிய கட்சியை தொடங்கினார். அப்பொழுது அதிமுகவின் கொடியைப் போன்று கருப்பு வெள்ளை சிவப்பு நிறங்களை கொடியும், அதன் நடுவே ஜெயலலிதா புகைப்படமும் பயன்படுத்தியிருந்தார்.

இதையடுத்து சென்னை கூடுதல் மாவட்ட நீதிமன்றத்தில் டி.டி.வி. தினகரனுக்கு எதிராக அப்போதைய அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி ஆகியோர் 2019-ம் ஆண்டு வழக்கு தொடர்ந்தனர்.
கூட்டணி... வாபஸ்?
அதில், ஜெயலலிதா பெயர், அவரது புகைப்படம், அதிமுகவின் கட்சி கொடியில் உள்ளது போல் கறுப்பு, வெள்ளை, சிவப்பு வண்ணங்களை பயன்படுத்த தடை விதிக்க வேண்டும். ரூ.25 லட்சம் நஷ்ட ஈடு வழங்கவேண்டும் என்று கூறியிருந்தனர்.
கடந்த 5 ஆண்டுகளாக நிலுவையில் இருந்து வந்த இந்த வழக்கு நேற்று சென்னை 3-வது கூடுதல் மாவட்ட நீதிமன்ற நீதிபதி ஆர்.கே.பி தமிழரசி முன்பு விசாரணைக்கு வந்தது. அப்பொழுது எடப்பாடி பழனிசாமி தரப்பில் வக்கீல் கவுதம்குமார், டிடிவி தினகரன் தரப்பில் வக்கீல் ராஜா செந்தூர்பாண்டியன் ஆகியோர் ஆஜாராகினர்.

அப்போது அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி சார்பில் ஒரு மனு தாக்கல் செய்யப்பட்டது. அதில், அதிமுக பொதுச்செயலாளர் என்ற முறையில், இந்த வழக்கை திரும்ப (வாபஸ்)பெறுவதாகவும், இதற்கு நீதிமன்றம் அனுமதிக்க வேண்டும்’’ என்று கூறியிருந்தார்.
இதை ஏற்றுக் கொண்ட நீதிபதி, அமமுக பொதுச் செயலாளர் டி.டி.வி.தினகரனுக்கு எதிராக அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி தாக்கல் செய்த மனுவை திரும்ப (வாபஸ்) அனுமதித்து வழக்கை முடித்துவைத்து உத்தரவிட்டார்.
அதிமுக தற்பொழுது பாஜகவுடன் மீண்டும் கூட்டணி வைத்துள்ள நிலையில் டி.டி.வி தினகரனுக்கு எதிரான வழக்கை திரும்ப பெற்றுள்ளது அரசியல் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.