உங்களுடன் ஸ்டாலின் திட்டத்தின் செயல்பாடுகள் குறித்து முதல்வர் ஆய்வு
AIIMS NORCET : `பிற மாநிலங்களில் தேர்வு மையங்கள் ஏன்?’ - வேதனை தெரிவிக்கும் தமிழக மாணவர்கள்
அகில இந்திய மருத்துவ நிறுவனம் எய்ம்ஸ் AIIMS, வருடாந்திர நார்செட்- 9 NORCET-9 ( Nursing Officer Recruitment Common Elegibility Test) என்ற தேர்வினை நடத்தி வருகிறது. இதற்கு இளநிலை படித்த பிஎஸ்சி நர்சிங் bsc nursing பட்டதாரிகள், முதுநிலை முடித்த எம் எஸ்சி நர்சிங் Msc. nursing பட்டதாரிகள் மற்றும் ஜி என் எம் GNM டிப்ளமோ முடித்தவர்கள் 30 வயதிற்கு உட்பட்டவர்கள் இந்த தேர்விற்கு விண்ணப்பிக்கலாம்.
இவ்வாறு இருக்க 2025-வது வருடம் 3,500 காலி இடங்களுக்கு 72,462 நபர்கள் விண்ணப்பித்துள்ளனர். அவற்றில் பெரும்பாலானோர் தமிழ்நாட்டினை சேர்ந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த தேர்வானது செப்டம்பர் 14-ம் தேதி ஞாயிற்றுக்கிழமை அன்று நடைபெற உள்ளது . இதற்கான தேர்வு மையங்கள் செப்டம்பர் 11-ம் தேதி தான் வெளியிடப்பட்டது.
இவற்றில் தமிழ்நாட்டினை சேர்ந்த பல மாணவர்களுக்கு கேரளா, கர்நாடகா, ஆந்திரா, தெலங்கானா, ஹைதராபாத் போன்ற பிற மாநிலங்களில் தேர்வு மையங்கள் வழங்கப்பட்டுள்ளன. இதனால் தேர்விற்கு விண்ணப்பித்த மாணவர்கள் நூற்றுக்கணக்கான கிலோமீட்டர் பயணம் செய்து தேர்வு எழுத வேண்டிய நிலை உருவாகியுள்ளது.
தேர்வு மையங்கள் அறிவித்த அடுத்த இரண்டே நாளில் NORCET-9 தேர்வு நடைபெற உள்ளதால் பொருளாதார சிக்கல்கள், பயண சிரமங்கள் , பாதுகாப்பு சார்ந்த பிரச்னைகள் போன்றவற்றினை சந்திப்பதாக தேர்வு எழுதும் மாணவர்கள் வேதனை தெரிவிக்கின்றனர்.
தமிழகத்தில் போதுமான தேர்வு மையங்கள் சென்னை, மதுரை , திருச்சி , கோயம்புத்தூர் , விழுப்புரம் போன்ற முக்கிய நகரங்களில் கூடுதலாக உள்ள போதிலும் பெருமளவில் ஏன் வெளி மாநிலங்களில் தேர்வு மையங்கள் ஒதுக்கப்படுகிறது என தேர்வு எழுதும் மாணவர்கள் அரசிடம் கேள்வி எழுப்புகின்றனர்.
மத்திய அரசு நடத்திவரும் பெரும்பாலான தேர்வுகள் அண்டை மாநிலங்களிலே பெருமளவில் தேர்வு மையங்கள் அமைக்கப்படுவது தொடர்கதையாகி வருகிறது. மருத்துவத்திற்கான நீட் நுழைவு தேர்வினைத் தொடர்ந்து செவிலியர் விண்ணப்பிக்கும் நார்செட் நுழைவு தேர்விலும் இவ்வாறு நடைபெற்று வருவது மாணவர்களை மனதளவிலும் பொருளாதார வகையிலும் பெருமளவில் பாதிப்பை ஏற்படுத்துகிறது .

இதனை தமிழக அரசு கருத்தில் கொண்டு தமிழ்நாட்டில் இருந்து விண்ணப்பித்த மாணவர்களுக்கு தமிழகத்தில் தேர்வு மையங்கள் ஒதுக்க வேண்டும் என மற்ற மாநிலத்தில் தேர்வு மையங்கள் ஒதுக்கப்பட்ட மாணவர்கள் தெரிவித்துள்ளனர் .