Bavuma : 'எங்களை விமர்சித்தவர்களுக்கு இந்த வெற்றி சமர்ப்பணம்!' - தென்னாப்பிரிக்க கேப்டன் பவுமா!
ஆஸ்திரேலிய அணியை 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்தி தென்னாப்பிரிக்க அணி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்பை வென்றிருக்கிறது. தென்னாப்பிரிக்க நீண்ட காலமாக காத்திருந்து ஒரு பெரிய வெற்றியை பெற்றிருக்கிறது. இந்த வெற்றிக்குப் பிறகு அந்த அணியின் கேப்டன் பவுமா நெகிழ்ச்சியாக பேசியிருந்தார்.

பவுமா பேசியதாவது, 'கடந்த சில நாட்கள் ரொம்பவே சிறப்பானவை. நாங்கள் தென்னாப்பிரிக்காவில் இருப்பதைப் போலவே உணர்ந்தோம். அந்தளவுக்கு எங்களுக்கு ஆதரவு இருந்தது. இந்த வெற்றித் தருணத்தை முழுமையாக உணர்ந்து அனுபவிக்க இன்னும் சில நாட்கள் ஆகும்.
பல ஆண்டுகளாக நாங்கள் ஒவ்வொரு தொடரிலும் நெருங்கி வந்து தோற்றிருந்தோம். ஒரு அணியாகவே எங்களுக்கு இந்த வெற்றி தேவைப்பட்டது. இது அடுத்தடுத்து வரப்போகும் பல வெற்றிகளின் தொடக்கமாக இருக்கும் என நம்புகிறேன். ரபாடா ஒரு அற்புதமான வீரர். அவர் சில சர்ச்சைகளில் சிக்கியிருந்தார். ஆனாலும் அவர் என்ன செய்ய வேண்டுமோ அதை செய்துவிட்டார்.

இன்னும் சில ஆண்டுகளில் அவர் ஐ.சி.சியின் Hall Of Fame பட்டியலில் இணைவார். மார்க்ரமும் அபாரமாக ஆடினார். நட்சத்திர வீரர்கள் என்பதை விட அவர்களின் குணாதிசயம்தான் ரொம்பவே முக்கியம். மார்க்ரமிடம் அந்த போராடும் குணாதிசயம் இருக்கிறது. நாங்கள் பலவீனமான அணிகளை வீழ்த்தி இந்த இடத்துக்கு வந்ததாக சிலர் சந்தேகிக்கிறார்கள். அவர்களுக்காகவும்தான் இந்த வெற்றியை சமர்ப்பிக்கிறோம். தென்னாப்பிரிக்காவில் இந்த வெற்றியை கோலாகலமாக கொண்டாடிக் கொண்டிருப்பார்கள் என நினைக்கிறேன்.' என்றார்.