எழும்பூா் - புதுச்சேரி மெமு ரயில் ஆக.4 வரை கடற்கரையிலிருந்து இயக்கப்படும்
`ஐஸ் ஹாக்கியில் வரலாறு படைத்த இந்திய வீராங்கனைகள்' - உறைபனியில் உருவான அணியின் கதை!
ஹாக்கி உலகில் தனக்கென தனி முத்திரைப் பதித்திருக்கும் இந்தியாவை, மகளிர் ஐஸ் ஹாக்கியில் முதல்முறையாகப் பதக்க மேடையில் மிளிரச் செய்திருக்கிறார்கள் வீராங்கனைகள்.
ஐக்கிய அரபு எமிரேட்ஸில், கடந்த மே 31 முதல் ஜூன் 6 வரை சர்வதேச ஐஸ் ஹாக்கி கூட்டமைப்பின் (IIHF) மகளிர் ஆசியக் கோப்பைத் தொடர் நடைபெற்றது.
இதில், இந்திய மகளிர் அணி உட்பட பிலிப்பைன்ஸ், ஈரான், மலேசியா, ஐக்கிய அரபு எமிரேட்ஸ், கிர்கிஸ்தான் என மொத்தம் ஆறு அணிகள் பங்கேற்றன.

ஐந்து அணிகளுடன் ஐந்து போட்டிகளில் விளையாடிய இந்திய வீராங்கனைகள் இரண்டில் தோல்வியடைந்து, மூன்று வெற்றிகளுடன் வெண்கலப் பதக்கம் வென்று இந்தியாவின் பதக்கக் கனவை நிறைவேற்றினர்.
ஆனால், இந்த சாதனை அவ்வளவு எளிதில் நிகழ்ந்துவிடவில்லை. 2016-ல் தொடங்கிய பதக்கத்துக்கான இந்தப் பயணம் மோசமான தோல்விகளின் படிப்பினைகளால் கிட்டத்தட்ட ஒரு தசாப்தத்துக்குப் பிறகு முதல் இலக்கை அடைந்திருக்கிறது.
இதைக் காட்டிலும் மிக சுவாரஸ்யமானது இதற்கான மகளிர் அணி உருவானது.
ஹாக்கியைப் பொறுத்தளவில் இந்தியாவின் வரலாறு சுதந்திரத்துக்கு முன்பே தொடங்கிவிட்டது. 1970 வாக்கில் இந்திய மகளிர் அணியும் ஹாக்கியில் களம் கண்டது. ஆனால், ஐஸ் ஹாக்கியில் இந்தியாவின் என்ட்ரி 2009-ல்தான் தொடங்கியது.
அதுவும் முதலில் ஆடவர் அணிதான் களமிறங்கியது. அதன்பின்னர், 7 ஆண்டுகள் கழித்து 2016-ல்தான் ஐஸ் ஹாக்கியில் இந்திய மகளிர் அணியினர் என்ட்ரி கொடுத்தனர்.
அந்த என்ட்ரி அவ்வளவு எளிதாக அமைந்துவிடவில்லை. இந்திய மகளிர் அணியின் பயணமானது, குளிர்காலத்தில் உறைபனிக்குப் பெயரான லடாக் மற்றும் ஸ்பிட்டி பள்ளத்தாக்கில் தொடங்கியது.

ஆடவர்களின் ஆதிக்கமிக்க இப்போட்டியில் சமூகத் தடைகளைத் தகர்த்து தடம் பதிக்க உறுதிகொண்டது இளம் வீராங்கனைகள் படை.
தேவையான உபகரணங்கள், போதுமான நிதி எதுவும் இல்லாதபோதும் அதைவிடப் பெரிய கனவுகள் இருந்ததால், பனியால் உறைந்த குளங்களை தங்களுக்கான போர்க்களங்களாக மாற்றிக் கொண்டனர்.
தொடக்க நாள்களில், பயிற்சி ஆட்டங்கள், உபகரணங்கள் போன்றவற்றில் ஆண்களுக்கு முன்னுரிமை அளிக்கப்பட்ட பிறகுதான், வீராங்கனைகளுக்கு களத்தில் பயிற்சி நேரம் ஒதுக்கப்பட்டது.
அதிலும், விளையாட்டு உபகரணங்கள் வீரர்களிடமிருந்து கடனாகப் பெற்றுதான் வீராங்கனைகள் பயிற்சிபெற்றனர். அந்த உபகரணங்கள் கூட, வீராங்கனைகளுக்குப் பொருந்தக்கூடிய சரியான அளவில் இல்லை.
பயிற்சியே போராட்டமாக இருந்த நேரத்தில், "உங்களுக்கு எதற்கு இந்த விளையாட்டு. வீட்டிற்குச் சென்று தாய்மார்களாக இருங்கள். இல்லையெனில் நடனமாடக் கற்றுக்கொள்ளுங்கள்" போன்ற பேச்சுக்களையும் வீராங்கனைகள் எதிர்கொண்டனர்.
ஆனால், அத்தகைய பேச்சுகளையெல்லாம் தங்களின் உத்வேகத்துக்கு உரமாக்கி, தங்களுக்கான களத்தைத் தாங்களே உருவாக்கிக்கொண்டனர்.

மேலும், லடாக் மகளிர் ஐஸ் ஹாக்கி அறக்கட்டளையையும் (LWIHF) உருவாக்கினர்.
வெளிநாடுகளில் இந்தியாவைப் பிரதிநிதித்துவப்படுத்தும் சர்வதேச அணி முதல் அறக்கட்டளை மூலம் தொலைதூர கிராமங்களில் குழந்தைகளுக்கு பயிற்சியளிப்பது வரை என ஆணாதிக்கம் மற்றும் ஸ்டீரியோடைப்புகளை முறியடிக்க இந்த வீராங்கனைகள் உண்மையிலேயே அனைத்து முயற்சிகளையும் மேற்கொண்டனர்.
மகளிர் அணியின் முதல் கேப்டனான ரிஞ்சன் டோல்மா, பிரசவம் முடிந்து ஐந்து மாதங்களிலேயே ஐஸ் ஹாக்கி களத்துக்கு வந்தது மற்ற வீராங்கனைகளுக்கு பெரும் உத்வேகத்தை அளித்தது.
பல்வேறு கனவுகளுடன் உருவான இந்திய மகளிர் அணி, முதல்முறையாக 2016-ல் IIHF மகளிருக்கான ஆசியா டிவிஷன் 1 சேலஞ்ச் கப் தொடரில் பங்கேற்றது.
சிங்கப்பூர் அணியுடன் மோதிய முதல் ஆட்டத்தில் 8 - 1 எனத் தோல்வியைச் சந்தித்தது இந்திய மகளிர் படை.
மேலும் இந்தத் தொடரில், சைனீஸ் தைபே, மலேசியா, தாய்லாந்து ஆகிய அணிகளுக்கெதிரான அடுத்த மூன்று போட்டிகளிலும் தோற்றது.
அதிலும், சைனீஸ் தைபே அணிக்கெதிரான போட்டியில் 13 - 0 எனப் படுமோசமான தோல்வியைச் சந்தித்தது இந்திய அணி.
அந்த சமயத்தில் சர்வதேச அரங்கில் ஒரு அணியின் மோசமான தோல்வியாக இது பதிவாகியிருந்தது.

சர்வதேச அளவில் தான் பங்கேற்ற முதல் தொடரில் ஒரு புள்ளிகூட பெறாமல், புள்ளிப்பட்டியலில் கடைசி இடத்துடன் தொடரை நிறைவுசெய்தது.
இருப்பினும், மனம் தளராத நம் வீராங்கனைகள் 2017-ல் நடைபெற்ற IIHF ஆசியா சேலஞ்ச் கப் தொடரில், பிலிப்பைன்ஸ் அணியை 3 - 4 என வீழ்த்தி முதல் வெற்றியைப் பதிவுசெய்தனர்.
ஆனால், அதே தொடரில் தாய்லாந்திடம் 20 - 1 என மோசமான தோல்வியையும் பதிவுசெய்தனர்.
தொடரின் முடிவில், மொத்தமாக இரண்டு வெற்றி மற்றும் நான்கு தோல்விகளுடன் இந்திய அணி நான்காம் இடம் பிடித்தது.
அடுத்து, 2018 மற்றும் 2019 IIHF மகளிர் ஆசியா டிவிஷன் 1 சேலஞ்ச் கப் தொடர்களில் மொத்தமாக 6 போட்டிகளில் ஒரேயொரு போட்டியில் மட்டுமே இந்தியா வெற்றிபெற்றது.
இருப்பினும், 2023-ல் நடைபெற்ற IIHF மகளிர் ஆசியா மற்றும் ஓசியானியா சாம்பியன்ஷிப் தொடரில் இந்திய வீராங்கனைகள் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினர்.
அரையிறுதிச் சுற்றுவரை முன்னேறிய இந்திய அணி, அதில் தாய்லாந்திடம் தோல்வியடைந்து, வெண்கலப் பதக்கத்துக்கான போட்டியில் சிங்கப்பூரிடம் 3 - 1 என தோல்வியடைந்து நூலிழையில் பதக்க வாய்ப்பைத் தவறவிட்டது.

அதைத்தொடர்ந்து, 2024-ல் நடைபெற்ற IIHF மகளிர் ஆசியா மற்றும் ஓசியானியா கப் தொடரில் ஒரு போட்டியில் மட்டும் வெற்றிபெற்று நான்காம் இடம் பிடித்தது.
இவ்வாறு கிட்டத்தட்ட ஒரு தசாப்தமாக பதக்கக் கனவை துரத்திக் கொண்டிருந்த நம் வீராங்கனைகள், கடந்த மே 30-ம் தேதி ஐக்கிய அரபு எமிரேட்ஸில் தொடங்கிய IIHF மகளிர் ஆசியக் கோப்பைத் தொடரில் பதக்கம் வென்றாக வேண்டும் ஒரே இலக்குடன் களமிறங்கினர்.

கனவைத் தொட்ட வீராங்கனைகள்!
ஐந்து போட்டிகளில் 3 போட்டிகளை வென்ற நம் வீராங்கனைகள், தொடரின் முடிவில் மூன்றாம் இடம் பிடித்து வெண்கலப் பதக்கம் வென்று இந்தியாவின் பதக்க எண்ணிக்கையைத் தொடங்கிவைத்தனர்.
மகளிர் ஐஸ் ஹாக்கியில் உலகில் இந்தியாவின் பெயரை உச்சரிக்க நம் வீராங்கனைகளுக்கு இதுவொரு தொடக்கம் மட்டும்தான்.
இன்னும் ஏராளமான பதக்கங்களை வென்று இந்தியாவுக்குப் பெருமை சேர்த்து வருங்கால வீராங்கனைகளுக்கு ஒரு முன்னுதாரணமாக விளங்க நம் வீராங்கனைகளுக்கு வாழ்த்துகள்!