கரடுமுரடான ரோடு, `நோ' கழிவறை, அடிக்கடி விபத்துகள்; கட்டணமோ ரூ.14 லட்சம் - இது சு...
BCCI ஒப்பந்தங்கள்: ஷ்ரேயஸ் ஐயர் ரூட் கிளியர்; A+ல் விராட்டுக்கு இடம் உண்டா?
இந்திய கிரிக்கெட் வாரியத்தின் உயர் அதிகாரிகள் இந்த வாரத்தில் BCCI ஒப்பந்தம் பெரும் வீரர்களின் பட்டியலை அறிவிக்கும்போது ஷ்ரேயாஸ் ஐயர் மீண்டும் மத்திய ஒப்பந்தம் பெறுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.
இது தொடர்பாக வரும் மார்ச் 29ம் தேதி பிசிசிஐ செயலாளர் தேவஜித் சைகியா, சாம்பியன்ஸ் டிராபி வெற்றியைத் தொடர்ந்து குடும்பத்துடன் பிரான்ஸுக்கு சுற்றுலா சென்றுள்ள தலைமை பயிற்சியாளர் கௌதம் கம்பீர் மற்றும் தேர்வுக்குழு தலைவர் அஜித் அகர்கர் ஆகியோரை வரும் மார்ச் 29 ம் தேதி கவுகாத்தியில் சந்தித்துப் பேசவுள்ளார்.

மார்ச் 30 ம் தேதி கவுகாத்தியில் சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் இடையிலான போட்டி நடைபெறுவது குறிப்பிடத்தக்கது.
ஷ்ரேயஸ் ஐயர் ரூட் கிளியர்!
பிசிசிஐ உள்நாட்டு போட்டிகளில் வீரர்கள் பங்கேற்க வேண்டும் என தெளிவாக அறிவுறுத்தியிருந்த போதும், இஷான் கிஷான் மற்றும் ஷ்ரேயாஸ் ஐயர் அவற்றில் பங்களிக்கத் தவறினார். இதனால் கடந்தமுறை பிசிசிஐ ஒப்பந்தங்களில் இருந்து விலக்கப்பட்டனர் எனக் கூறப்படுகிறது.
இந்தநிலையில் ஷ்ரேயாஸ் ஐயர் பிசிசிஐ மத்திய ஒப்பந்தம் பெற்றாலும் இஷான் கிஷான் பெறுவாரா என்பது சந்தேகமே என்கின்றனர் நிபுணர்கள்.

ஷ்ரேயாஸ் ஐயர் இந்திய அணி சாம்பியன்ஸ் டிராபி வென்றதில் அதிகபட்ச ரன் ஸ்கோரராக இருந்தார். 5 போட்டிகளில் 2 ஐம்பதுகளுடன் 243 ரன்கள் அடித்திருந்தார்.
ஐபிஎல்லில் பஞ்சாப் அணியின் கேப்டனாக செயல்படும் அவர், முதல் போட்டியில் 97 ரன்கள் விளாசி அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ளார்.
மறுபுறம் சன் ரைசர்ஸ் ஹைத்ராபாத் அணியின் ஓப்பனிங் வீரரான இஷான் கிஷான், முதல் போட்டியில் சதமடித்து கலக்கினார். இரண்டாவது போட்டியில் டக் அவுட் ஆகியிருக்கிறார்.

விராட், ரோஹித், ஜடேஜா நிலை என்ன?
பிசிசிஐ ஒப்பந்தகளைப் பொறுத்தவரை ஸ்டார் வீரர்கள் விராட் கோலி, ரோஹித் ஷர்மா மற்றும் ரவீந்திர ஜடேஜா முதல் தர பட்டியலான A+ ல் தக்கவைக்கப்படுவார்களா என்ற கேள்வியும் உள்ளது. இந்த மூன்று வீரர்களும் சர்வதேச டி 20 போட்டிகளில் இருந்து ஓய்வு பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.
இங்கிலாந்துக்கு எதிராக வரும் கோடைகாலத்தில் நடைபெறவுள்ள டெஸ்ட் தொடரில் ரோஹித் சர்மா இந்தியாவை வழிநடத்துவது உறுதியாகியிருப்பதனால், அவர் முதல் தர பட்டியலில் தக்கவைக்கப்படுவார் என்றே தகவல்கள் தெரிவிக்கின்றன.

இளம் வீரர்களுக்கு முதல் ஒப்பந்தங்கள்!
இதுதவிர, சாம்பியன்ஸ் டிராபி தொடரில் சிறப்பாக விளையாடிய மிஸ்ட்ரி ஸ்பின்னர் வருண் சக்கரவர்த்தி அவரது முதல் பிசிசிஐ ஒப்பந்தத்தைப் பெறுவார் எனக் கூறப்படுகிறது.
இவர் தவிர, பார்டர் கவாஸ்கர் கோப்பை தொடரில் சிறப்பாக விளையாடிய இளம் வீரர் நித்திஷ் குமார் ரெட்டி மற்றும் கடந்த பிப்ரவரி 2-ம் தேதி இங்கிலாந்துக்கு எதிராக 54 பந்துகளில் 135 ரன்கள் அடித்த அபிஷேக் சர்மா பிசிசிஐ ஒப்பந்தத்தில் இடம்பெறுவார்கள் எனவும் கூறுகின்றனர்.