இன்றுமுதல் வருமான வரி மாற்றங்கள் அமல்: தெரிந்துகொள்ள வேண்டியவை!
Sai Kishore: 'ஹர்திக் என் நண்பர்தான் ஆனாலும்...' - களத்தில் முறைத்துக் கொண்டது பற்றி சாய் கிஷோர்
'முறைத்துக் கொண்ட ஹர்திக் - சாய் கிஷோர்!'
அஹமதாபாத் மைதானத்தில் குஜராத்துக்கு எதிரான போட்டியில் 51 ரன்கள் வித்தியாசத்தில் மும்பை அணி தோற்றிருக்கிறது. இலக்கை விரட்டிய மும்பை அணி மிக மோசமாக பேட்டிங் ஆடி வீழ்ந்திருக்கிறது. இந்தப் போட்டியின் 15 வது ஓவரை சாய் கிஷோர் வீசிய போது, அவரும் ஹர்திக் பாண்ட்யாவும் ஒருவரையொருவர் முறைத்துக்கொண்டனர்.

அந்த சமயத்தில் ஹர்திக் சாய் கிஷோரை நோக்கி எதையோ பேசவும் செய்தார். இந்தத் தருணம் களத்தில் பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது. இந்நிலையில் போட்டிக்குப் பிறகு இந்த சம்பவத்தைப் பற்றி சாய் கிஷோர் பேசியிருக்கிறார்.
'சாய் கிஷோர் விளக்கம்!'
அவர் பேசுகையில், ``ஹர்திக் பாண்ட்யா என்னுடைய நல்ல நண்பர். ஆனால், களத்தில் நாங்கள் இருவரும் இப்படித்தான் இருப்போம். எதிரணியைச் சேர்ந்த யாராக இருந்தாலும் இப்படித்தான் போட்டி போட்டுக்கொள்வேன். ஆனால், நாங்கள் இதை தனிப்பட்ட முறையில் எடுத்துக் கொள்ளவில்லை. பிட்ச் என்னுடைய பந்துவீச்சுக்கு அவ்வளவு சாதகமாக இருந்ததாக நினைக்கவில்லை. அதனாலயே கொஞ்சம் தற்காப்பாக வீசினேன்.

சூர்யகுமார் யாதவ் சிறப்பாக ஆடினார். உங்களின் பௌலிங்குக்கு எதிராக ஒரு பேட்டர் நல்ல ஷாட்டை ஆடும்போது பாராட்டியேதான் ஆக வேண்டும். நான் உள்ளுணர்வின் அடிப்படையில் சில முடிவுகளை எடுத்தேன். சூர்யகுமாருடன் ஆடிய அனுபவம் இருப்பதால் கில் சில யோசனைகளை கூறினார். இந்த சீசனுக்காக ஆர்வமாகக் காத்திருந்தேன். கடுமையாக உழைத்திருக்கிறேன். நிறைய கற்றுக்கொண்டு வருகிறேன்." என்றார்
போட்டி முடிந்ததற்கு பிறகு இருவரும் ஆரத்தழுவி கைக்குலுக்கிச் சென்றனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.