BJP: "உபா சட்டம் முதல் விகடன் இணையதள முடக்கம் வரை... பாஜக ஆட்சியின் ஒடுக்குமுறை" - தமுஎகச கண்டனம்
தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர்கள் கலைஞர்கள் சங்க மாநிலச் செயற்குழுக் கூட்டம் நேற்று (பிப்ரவரி 17) இணையவழியில் நடைபெற்றது. அந்தக் கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவில் விகடன் இணையதளப் பக்கத்தை முடக்கிய மத்திய அரசுக்குக் கண்டனம் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.
அந்தக் கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகள் குறித்து வெளியான செய்தி அறிக்கையில், ``அமெரிக்காவில் சட்டவிரோதமாகக் குடியேறிய இந்தியர்களைக் கண்ணியமற்ற முறையில் கைகால்களில் விலங்கு பூட்டி ராணுவ விமானத்தில் திருப்பியனுப்பிய செயலானது அப்பட்டமான மனிதவுரிமை மீறலாகும்.
இதனிடையே அமெரிக்காவுக்குச் சென்ற இந்தியப் பிரதமர் இந்தப் பிரச்னைக்குச் சுமூகத்தீர்வு காண்பார் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அவர் அங்கிருக்கும்போதே மீண்டும் இந்தியர்கள் முன்பைப்போல கண்ணியக்குறைவான வகையில் திருப்பி அனுப்பப்பட்டனர். இதுகுறித்து இந்தியப் பிரதமர் எவ்வித எதிர்ப்பையும் காட்டியதாகத் தெரியவில்லை. இந்நிலையில்தான், இந்தியப் பிரதமரை வைத்துக்கொண்டே இந்தியர்களின் கைகால்களில் விலங்கு பூட்டியதானது அவருக்கே விலங்கு பூட்டியதற்கு ஒப்பாகும் என்கிற பொருளாழமிக்க கேலிச்சித்திரம் ஒன்றை விகடன் இணையதளம் சில தினங்களுக்கு முன் வெளியிட்டது.
இறையாண்மையும் தன்மதிப்புள்ள இந்த நாட்டை அவமதித்துள்ள அமெரிக்காவைக் கண்டித்திருக்க வேண்டிய ஆட்சியாளர்கள், அவமதிக்கப்பட்டதை உணர்த்திய விகடன் இணையதளத்தை முடக்கியுள்ளனர். இது அப்பட்டமான கருத்துரிமைப் பறிப்பாகும் என தமுஎகச கண்டிக்கிறது.

உபா சட்டத்தின் கீழ் பொய் வழக்குப் புனைந்து ஊடகவியலாளர்கள் கைது, தாக்குதல், வெளிநாட்டு ஊடகவியலாளர்களுக்கு விசா மறுப்பு – கட்டாய வெளியேற்றம், ஊடகங்களின் அலுவலங்களுக்குள் சோதனை, ஒளிபரப்புக்குத் தடை, ஊடகம் தொடங்க அனுமதி மறுப்பு, விளம்பரங்கள் வழங்காமை, இணையதள முடக்கம், இணையப்பதிவுகளை நீக்குவது என்று கடந்த பத்தாண்டுக் காலமாக பா.ஜ.க ஆட்சி கருத்துரிமைக்கு எதிராக நடத்திவரும் ஒடுக்குமுறையின் தொடர்ச்சியாக விகடன் இணையதளம் முடக்கப்பட்டுள்ளது. இதனைக் கண்டித்தும், விகடன் இணையதள முடக்கத்தை நீக்கக் கோரியும் கருத்து வெளிப்பாட்டுச் சுதந்திரத்தில் நம்பிக்கையுள்ள அனைவருடனும் சேர்ந்து தமுஎகச குரலெழுப்புகிறது" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இப்போது ஆடியோ வடிவிலும் வந்துவிட்டான் `பறம்பின் நாயகன்' பாரி; அறமும் வீரமும் நிறைந்த அவனின் கதையைக் கேட்டு மகிழுங்கள்!
https://tinyurl.com/Velpari-Vikatan-Play