CPIM Congress: ``பலம் பொருந்திய கட்சியாக மாற்றுவோம்'' - புதிய பொதுச்செயலாளர் எம்.ஏ.பேபி சூளுரை
"உழைப்பாளி மக்களின் ஆதரவோடு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியை பலம்பொருந்திய கட்சியாக மாற்றுவோம்" என்று மாநாட்டு பொதுக்கூட்டத்தில் கட்சியின் புதிய பொதுச் செயலாளர் எம்.ஏ.பேபி தெரிவித்துள்ளார்.

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் 24-ஆவது அகில இந்திய மாநாடு மதுரையில் கடந்த ஏப்ரல் 2 ஆம் தேதி தொடங்கி ஏப்ரல் 6 ஆம் தேதி பேரணி, பொதுக்கூட்டத்துடன் நிறைவடைந்தது.
இக்கூட்டத்தில் புதிய பொதுச்செயலாளர் எம்.ஏ.பேபி பேசும்போது, "மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் 24-ஆவது அகில இந்திய மாநாட்டிற்காக நாம் அனைவரும் மதுரையில் கூடினோம். மாநாடு நடைபெறுவதற்கு சில மாதங்களுக்கு முன்பு நமது கட்சி இருபெரும் இழப்புகளை சந்தித்தது.
நமது பொதுச்செயலாளர் தோழர் சீத்தாராம் யெச்சூரியை இழந்தோம். சில மாதங்களுக்கு முன்பு மற்றொரு அரசியல் தலைமைக்குழு உறுப்பினர் புத்ததேவ் பட்டாச்சார்யாவை இழந்தோம். இவர்கள் இருவரது இழப்பும் கட்சிக்கு ஈடு செய்யமுடியாத பேரிழப்பாகும்.
மேலும், கடந்த மாநாட்டிற்கு பின்னர் அரசியல் தலைமைக்குழு உறுப்பினர் கொடியேரி பாலகிருஷ்ணனை இழந்தோம். அவரது இழப்பும் ஈடு செய்யமுடியாத இழப்பாகும்.
இயற்கையின் முடிவை மீறி நாம் ஏதும் செய்துவிட முடியாது. ஆனால் 24-ஆவது கட்சி மாநாட்டை நடத்தவேண்டும் என்று நிலை வந்தபோது நமது கட்சிக்கு கலங்கரை விளக்கமாக திகழ்ந்த தோழர் யெச்சூரி இல்லாத நிலையில் அரசியல் தலைமைக்குழுவும் மத்தியக் குழுவும் இணைந்து கட்சியின் அரசியல் மற்றும் ஸ்தாபனத்திற்கு எழுந்த சவாலை கூட்டாக எதிர் கொண்டு பணிகளை வெற்றிகரமாக நிறைவேற்றி முடித்துள்ளோம்.
அரசியல் தலைமைக் குழு மற்றும் மத்தியக் குழுவின் ஒருங்கிணைப்பாளர் பிரகாஷ் காரத் அசாதரண சூழலில் கட்சியில் கூடுதல் பொறுப்பை ஏற்று முக்கியமான பங்களிப்பை செய்தார்.
அரசியல், தத்துவார்த்த, ஸ்தாபன கடமையை சிறப்பாக அவர் செய்து முடித்துள்ளார். இந்த அகில இந்திய மாநாட்டையும் வெற்றிகரமாக நடத்த உரிய பங்களிப்பை அவர் வழங்கியது பாராட்டுக்குரியது.

தோழர் யெச்சூரி கவலைக்கிடமான முறையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டபோது அவருக்கு அளிக்கப்பட்ட சிகிச்சையால் அவர் தேறி வந்தவிடுவார் என நினைத்தோம். தோழர் பிருந்தா காரத் தொடர்ச்சியாக மருத்துவர்களை தொடர்பு கொண்டு சிகிச்சைகளை ஒருங்கிணைத்து அவரை எப்படியாவது தேற்றிவிட வேண்டும் என்று கடுமையான முயற்சிகளை மேற்கொண்டார். உடலை நன்றாக பார்த்துக்கொள்ள வேண்டும் என்று பல முறை நாங்கள் தோழர் யெச்சூரியிடம் தெரிவித்திருக்கிறோம்.
நீங்கள் ஆற்றவேண்டிய பல பணிகள் உள்ளன. கட்சியின் பல மாநில மாநாடுகளுக்கு செல்லவேண்டியிருக்கும் என்று சொல்லிக்கொண்டே இருந்தோம். இயற்கையை வெல்லமுடியாத நிலையில் அரசியல் தலைமைக்குழுவும் மத்தியக் குழுவும் ஒருபக்கம் கூட்டு செயல்பாடு மூலம் இயங்கியது.
தொழிலாளர்கள். விவசாயிகள், விவசாயத் தொழிலாளர்களுக்கு உழைக்கக்கூடிய இந்த கட்சி, ஒரு அசாதாரணமான கட்சி என்பதை நாம் நாட்டிற்கு உணர்த்தினோம். கடினமான காலக் கட்டங்களில் கட்சி எந்தவித பின்னடைவையும் சந்திக்காமல் செயல் படுவதற்கான ஆற்றல் கட்சிக்கு உள்ளது என்பதை நாம் கூட்டு செயல்பாடு மூலமாக உணர்த்தியுள்ளோம்.
ஆக்கப்பூர்வமான விவாதத்துடன் இந்த மாநாடு ஒற்றுமை மற்றும் கலந்தாலோசனை என்ற அடிப்படையில் நடைபெற்றுள்ளது. கட்சியைப் பலப்படுத்துவது குறித்து விரிவான விவாதமும், நாம் எங்கு பலவீனமாக இருக்கிறோம் என்பது குறித்தும் கடந்த 3 ஆண்டுகளில் நமது செயல்பாடுகள் குறித்தும் விமர்சனம், சுயவிமர்சனம் என்ற அடிப்படையில் ஆக்கப்பூர்வமாக விவாதங்களை நடத்தினோம்.
விவாதத்தின் போது பெரும்பாலான பிரதிநிதிகள் கூர்மையான விமர்சனங்களை முன்வைத்தனர். அரசியல் தலைமைக்குழு உறுப்பினர்கள் தங்களது செயல்பாடுகள் குறித்து சுய விமர்சனம் செய்து கொள்ளவேண்டும் என்று கூறினர். இதை அரசியல் தலைமைக்குழு ஏற்றுக்கொள்கிறது.
கடந்த மாநாட்டில் நிறைவேற்றப்பட்ட அரசியல் நடைமுறை உத்தியை எந்தளவுக்கு செயல்படுத்தியுள்ளோம் என்பதை நாம் பரிசீலித்திருக்கிறோம். அதில், நாம் எந்தளவுக்கு வெற்றிபெற்றிருக்கிறோம்; எந்தளவுக்கு பின்னடைவை சந்தித்திருக்கிறோம் என்பதை இந்த மாநாட்டில் விவாதித்தோம். அதன் அடிப்படையில் அரசியல் தீர்மானத்தை உருவாக்கி வருங்காலத்தில் புதிய அரசியல் நடைமுறை உத்தியைக் கடைப்பிடிக்கவேண்டும் என்பதை மத்தியக்குழு ஏற்கெனவே அறிவித்துள்ளது. அந்த அடிப்படையில் நாம் விவாதங்களை அமைத்துக் கொண்டோம். இந்த பணிகளை நாம் வெற்றிகரமாக செய்து முடிப்போம்.

நரேந்திர மோடி அரசு பின்பற்றிவரும், நவீன தாராளயமய பொருளாதாரக் கொள்கைகளை எதிர்த்தும், மக்களின் அன்றாட வாழ்வாதாரத்திற்கான கோரிக்கைகளுக்காகவும் போராடும் அதேவேளையில் இந்துத்துவா, கார்ப்பரேட், மதவாதக் கூட்டணியையும் மக்களிடம் அம்பலப்படுத்த வேண்டிய கடமை நமக்கு உள்ளது.
இதற்கான அரசியல் கடமை தெளிவாக உள்ளது. உழைப்பாளி மக்களின் உரிமைகளை உறுதிப்படுத்தவேண்டிய கடமை செங்கொடி இயக்கத்திற்கு உண்டு. நகர்புறம் மற்றும் கிராமப்புறங்களில் உள்ள பெரும்பகுதி ஏழை எளிய மக்களை எப்படி பிளவுவாத சக்திகள் தங்களுக்கு சாதகமாக பயன்படுத்திக் கொள்கின்றன என்பதையும் நமது இயக்கங்களுக்கு பின்னால் அவர்களை பெருமளவில் ஏன் அணிதிரட்ட முடியவில்லை என்பதையும் நாம் மாநாட்டில் ஆழமாக விவாதித்தோம்.
நமது எதிர்கால அரசியல் கடமைகளை நிறைவேற்றுவதில் பெண்களின் பங்கேற்பும் மிக மிக அவசியம். நமது கட்சியில் பெண்களை அதிகரிக்க திட்டமிட்டு சில முயற்சிகளை மேற்கொள்ள வேண்டியுள்ளது. அந்த வகையில் இந்த மாநாடு தேர்ந்தெடுத்துள்ள மத்தியக்குழுவில் பெண்களுக்கு அதிக பிரதிநிதித்துவம் தரப்பட்டுள்ளது. மத்தியக்குழுவில் ஏற்கெனவே பெண்களின் விகிதம் 17 சதவிகிதமாக இருந்தது. இந்த மத்தியக்குழுவில் 20 சதவிகிதம் அதிகரிக்கப்பட்டுள்ளது.
கட்சியின் அனைத்து மட்டங்களில் அடுத்த தலைமுறை வரவேண்டும் என்பதில் நாம் உறுதியாக இருக்கிறோம். இதில் கட்சி மிகவும் கவனமாக உள்ளது" என்றார்.
Vikatan WhatsApp Channel
இணைந்திருங்கள் விகடனோடு வாட்ஸ்அப்பிலும்... CLICK BELOW LINK
https://bit.ly/VikatanWAChannel
