Delhi Earthquake: "மக்கள் நிதானமாக இருக்கவும்..." - டெல்லி நிலநடுக்கத்தைத் தொடர்ந்து பிரதமர் அறிவுரை
தேசியத் தலைநகர் டெல்லியில் இன்று அதிகாலையில் நிலநடுக்கம் ஏற்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. 4.0 ரிக்டர் அளவில் 5 கி.மீ., ஆழத்தில் இந்த நில அதிர்வு ஏற்பட்டிருக்கிறது. டெல்லி, நொய்டா, குர்கான் ஆகிய பகுதிகளில் இந்த நிலநடுக்கத்தை உணர்ந்த மக்கள், உயரமான கட்டடங்களிலிருந்து அவசரமாக வெளியேறினர்.
இந்த நிலநடுக்கம் தொடர்பான வீடியோகள் சமூக வலைத்தளங்களில் வேகமாகப் பரவி வருகின்றன. மேலும், இந்த நிலநடுக்கத்தைத் தொடர்ந்து டெல்லி காவல்துறை, அவசர உதவிக்கு 112 என்ற எண்ணைத்தொடர்பு கொள்ளுமாறு மக்களுக்கு அறிவுறுத்தினர்.
மறுபக்கம், நிலநடுக்கத்தின்போது ரயில் நிலையத்தில் ரயிலுக்காகக் காத்திருந்த நபர் ஒருவர் ஊடகத்திடம் பேசுகையில், ``நான் காத்திருப்பு அறையில் இருந்தேன். ஏதோ பாலம் இடிந்து விழுந்தது போல, ரயில்கள் மோதிக்கொண்டது போல அதிர்வை உணர்ந்தேன். உடனடியாக எல்லோரும் வெளியேறினர்" என்று சூழலை விளக்கினார்.
Tremors were felt in Delhi and nearby areas. Urging everyone to stay calm and follow safety precautions, staying alert for possible aftershocks. Authorities are keeping a close watch on the situation.
— Narendra Modi (@narendramodi) February 17, 2025
இந்த நிலையில், பிரதமர் மோடி எக்ஸ் தளத்தில், ``டெல்லி மற்றும் அருகிலுள்ள பகுதிகளில் நிலநடுக்கம் ஏற்பட்டிருக்கிறது. எல்லோரும் நிதானமாக இருக்கவும். அதிகாரிகள் நிலைமையை உன்னிப்பாகக் கவனித்து வருகின்றனர். பாதுகாப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை அனைவரும் பின்பற்றி எச்சரிக்கையாக இருக்குமாறு கேட்டுக்கொள்கிறேன்" என்று பதிவிட்டிருக்கிறார்.
இப்போது ஆடியோ வடிவிலும் வந்துவிட்டான் `பறம்பின் நாயகன்' பாரி; அறமும் வீரமும் நிறைந்த அவனின் கதையைக் கேட்டு மகிழுங்கள்!
https://tinyurl.com/Velpari-Vikatan-Play