DRS எடுக்காததால் பறிபோன வாய்ப்பு... இரண்டே நாளில் ரோஹித்தை முந்தி மோசமான சாதனை படைத்த மேக்ஸ்வெல்
ஐபிஎல் நேற்றைய (மார்ச் 25) போட்டியில் சுப்மன் கில் தலைமையிலான குஜராத் அணியும், ஸ்ரேயஸ் ஐயர் தலைமையிலான பஞ்சாப் அணியும் அகமதாபாத்தில் மோதின. இதில் டாஸ் வென்ற குஜராத் அணி முதலில் பந்துவீச்சைத் தேர்வு செய்தது.
அதன்படி, முதலில் பேட்டிங் செய்த பஞ்சாப் அணி 20 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட் இழப்புக்கு 243 ரன்கள் குவித்தது. இதில், பஞ்சாப் அணியின் கேப்டன் ஸ்ரேயஸ் ஐயர் 42 பந்துகளில் 9 சிக்ஸ், 5 பவுண்டரி என 97 ரன்கள் அடித்து நாட் அவுட் பேட்ஸ்மேனாக கடைசிவரைக் களத்தில் நின்றார்.

குஜராத் அணியில் சிறப்பாகப் பந்துவீசிய தமிழக வீரர் சாய் கிஷோர் 3 விக்கெட்டுகள் வீழ்த்தினார். அதைத்தொடர்ந்து, 244 ரன்கள் என்ற கடினமான இலக்கை நோக்கிக் களமிறங்கிய குஜராத் அணி கடைசிவரைப் போராடி முடிவில் 232 ரன்கள் குவித்து 11 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது.
குஜராத்தின் பேட்டிங்கில் தமிழக வீரர் சாய் சுதர்சன் 74 ரன்கள் குவித்தார். ஆட்டநாயகனாக, ஸ்ரேயஸ் ஐயர் தேர்வு செய்யப்பட்டார்.
மோசமான சாதனை
இதற்கிடையில், 2020-க்குப் பிறகு மீண்டும் பஞ்சாப் அணிக்குத் திரும்பிய ஆஸ்திரேலிய வீரர் மேக்ஸ்வெல் நேற்று ஆடிய பந்திலேயே எல்.பி.டபிள்யு முறையில் டக் அவுட்டானார். மேக்ஸ்வெல்லும் ரிவ்யூ கேட்காமல் அவுட் என்று நினைத்து பெவிலியனுக்குத் திரும்பிவிட்டார்.
ஆனால், அதன்பிறகு டிவி ரீபிளேயில் பந்து ஸ்டம்பிலிருந்து விலகிச் செல்வது தெரியவந்தது. ஒருவேளை, மேக்ஸ்வெல் ரிவ்யூ எடுத்திருந்தால் தொடர்ந்து விளையாடியிருக்கலாம். ஆனால் அப்படி எதுவும் நடக்கவில்லை.

இதனால், ஐபிஎல் வரலாற்றில் மேக்ஸ்வெல் மோசமான சாதனை ஒன்றைப் படைத்திருக்கிறார். அதாவது, ஐபிஎல்லில் அதிக முறை 0 ரன்னில் அவுட்டாகிய வீரர் என்ற சாதனைக்குச் சொந்தக்காரர் ஆகியிருக்கிறார்.
ஞாயிற்றுக் கிழமை நடைபெற்ற சென்னை vs மும்பை போட்டியில் டக் அவுட் ஆன ரோஹித் சர்மா, ஐபிஎல்லில் அதிக முறை டக் ஆனவர்களின் பட்டியலில் தினேஷ் கார்த்திக், மேக்ஸ்வெல்லுடன் முதலிடத்தைப் பகிர்ந்து கொண்ட இரண்டாவது நாளிலேயே மேக்ஸ்வெல் அவரை முந்தி முதலிடம் பிடித்திருக்கிறார்.
IPL-ல் அதிகமுறை டக் ஆனவர்கள்:
மேக்ஸ்வெல் - 19
ரோஹித் - 18
தினேஷ் கார்த்திக் - 18
பியூஸ் சாவ்லா - 16
சுனில் நரைன் - 16