கழுகார்: `பாலம் தந்த தலைவருக்குப் பாராட்டு விழா' கேட்ட மாஜி - கடுப்பில் சூரியக் ...
Hair Dye & Hair Colouring: பின்பற்ற வேண்டிய எச்சரிக்கை வழிமுறைகள்! - நிபுணர் கைடன்ஸ்
ஹேர் கலரிங், இதனை சிலர் அழகிற்காக பயன்படுத்துகிறார்கள். சிலர் ஆசைக்காக பயன்படுத்துகிறார்கள். இதில் நச்சுத்தன்மை கொண்ட ரசாயனங்கள் இருக்கின்றன என தெரிந்தும், பின்விளைவுகளைத் தெரியாமல் பலர் பயன்படுத்துகிறார்கள்.
முன்பெல்லாம் வெள்ளை முடியின் நிறம் மாறுவதற்காக ஹேர் டை பயன்படுத்தினார்கள். தற்போது உடையின் நிறத்திற்கு ஏற்றவாறு ஹேர் கலரிங் செய்கிறார்கள். ஹேர் கலரிங் மற்றும் ஹேர் டை குறித்த நமது கேள்விகளுக்கு விரிவான விளக்கம் அளிக்கிறார், சென்னையைச் சேர்ந்த அரோமாதெரபிஸ்ட் கீதா அசோக்.

நம்முடைய கூந்தலில் இயற்கையாகவே எண்ணெய் உற்பத்தி இருக்கும். ஹேர் கலரிங் செய்யும்போது, முடியின் இயற்கை நிறம் மாறி, தனது பளபளப்பு தன்மையை இழந்துவிடுகிறது.
இவற்றில் இருக்கிற ரசாயனங்கள் முடியின் வேர்க்கால்களில் ஊடுருவி, அதன் இயற்கை நிறத்தையும் இயற்கை தன்மையையும் மங்கச் செய்துவிடும். அதன் பிறகு இந்த ரசாயனங்கள் கூந்தலில் வண்ண நிறங்களில் தெரியத் துவங்கும்.
முன்பெல்லாம் வெள்ளை நிறத்தை மறைக்கவே ஹேர் டை பயன்படுத்துவார்கள். ஆனால், தற்போது இதனை ஒரு அழகுசாதனப் பொருளாகவே மாற்றிவிட்டார்கள்.
ஹேர் கலரிங்கில் வயலட், ப்ளூ, கிரீன், யெல்லோ என எண்ணிலடங்காத நிறங்கள் உள்ளன. தொடர்ந்து ஹேர் கலரிங் பயன்படுத்திக்கொண்டே இருக்கும்போது கூந்தலின் இயற்கை நிறத்தை அந்த ரசாயனக் கலவை எடுத்தபிறகே நாம் கூந்தலில் தடவிய கலரிங்கின் நிறம் தெரியத் துவங்கும். எனவே, முடியின் இயற்கை நிறத்தை மீண்டும் பெறுவது சாத்தியமற்றது.

முதலில் மூச்சுத்திணறல், தோலில் எரிச்சல் உணர்வு, பார்வை சார்ந்த பிரச்னைகள் ஏற்படக்கூடும். தொடர்ந்து பயன்படுத்தினால் புற்றுநோய் வருவதற்கான அபாயம் பல மடங்கு அதிகரிக்கிறது.
உயர் ரத்த அழுத்தம் உள்ளவர்கள், சர்க்கரை நோய் உள்ளவர்கள், சிறுநீரகம் சார்ந்த பிரச்னை உள்ளவர்கள், மூச்சு சார்ந்த பிரச்னை உள்ளவர்கள், சிறுவர்கள், ஏதேனும் அலர்ஜி உள்ளவர்கள் இதனை முற்றிலும் தவிர்ப்பது நல்லது.

அமோனியா ஃப்ரீ (Ammonia Free) ஹேர் டை பாதுகாப்பானது. அதே அளவு பிபிடி ஃப்ரீ (PPD Free) ஹேர் டையாக இருக்க வேண்டியதும் முக்கியமானது.
பாராபினலைன்டயாமின் (Paraphenylenediamine) என்பதன் சுருக்கமே பிபிடி (PPD). இவை ஸ்ட்ராங்க் கெமிக்கல்ஸ் என அழைக்கப்படும்.
இவை கூந்தலுக்கு அதிக பாதிப்பினை ஏற்படுத்தும். இவற்றுக்கு பதில், மெடிக்கல் கிரேடு ஹேர் டையை வாங்கிப் பயன்படுத்தலாம்.
இளநரை உள்ளவர்கள் முதலில் அதன் காரணத்தைக் கண்டறிய வேண்டும். பெரும்பாலும் அம்மா, அப்பாவிற்கு இளநரை இருந்தால் பரம்பரை வழியாகவோ அல்லது இரும்புச்சத்து, புரதச்சத்து போன்ற ஊட்டச்சத்துக் குறைபாடு காரணமாகவோ இளநரை ஏற்படக்கூடும்.
இன்னும் சிலருக்கு ஹேர் அயர்னிங் செய்வதன் காரணமாக, கூந்தல் அதன் தன்மையை இழந்து, நிறம் மாறத் தொடங்கிவிடும். எனவே இளநரைக்கான சரியான காரணத்தைக் கண்டறிந்து அதற்கான சிகிச்சை மேற்கொண்டாலே இதனைக் கட்டுப்படுத்திவிடலாம்.
இதற்காக ஹேர்டை பயன்படுத்தினால் உடல் சார்ந்த பிரச்னைகளை அதிகம் ஏற்படுத்தக்கூடும். மேலும் இவை நிரந்தரமான தீர்வல்ல.

இவற்றில் உள்ள ரசாயனங்கள் முடியின் வேர்க்கால்கள் மூலம் உடலுக்குள் ஊடுருவி கண்களைச் சுற்றியுள்ள பகுதிக்கும், கண்களில் உள்ள நரம்பிற்கும் பாதிப்பு ஏற்படுத்தும். இதனால், கண்பார்வை மங்கத் தொடங்கிவிடும்.
அப்படி இல்லையேல் இவற்றை பயன்படுத்திய பிறகு கூந்தலை சுத்தம் செய்யும்போது அந்த வேதிப்பொருட்கள் கண்களில் பட்டு பாதிப்பை ஏற்படுத்தக்கூடும்.
எப்போதாவது பயன்படுத்தினால் இதனால் பெரிய பாதிப்பு ஒன்றும் வராது. ஆனால், தொடர்ந்து பயன்படுத்தினால் கண்பார்வை மங்குதல், நரம்புத்தளர்ச்சி, மூச்சுத்திணறல், முகத்தில் சுருக்கம், சுவாசக்கோளாறு, புற்றுநோய் போன்றவை வரக்கூடும்.

கர்ப்ப காலத்தில் மட்டுமல்ல, குழந்தை பிறந்த பிறகும் ஹேர் டை பயன்படுத்துவதை முற்றிலுமாக தவிர்க்க வேண்டும். இவை தாய்க்கு மட்டுமல்ல குழந்தைக்கும் பாதிப்பை ஏற்படுத்தலாம். இதற்குப் பதிலாக இயற்கை வழியில் மருதாணியை பயன்படுத்திக் கொள்ளலாம்.
நமது உடலில் எந்தப் பிரச்னை ஏற்பட்டாலும், முதலில் அது கூந்தல் உதிர்வதன் வழியேதான் தெரிய ஆரம்பிக்கும். தலைவலி, வயிற்று வலியிலிருந்து ரத்த அழுத்தம், சர்க்கரை நோய் என அனைத்திற்குமே முதல் அறிகுறி முடி உதிர்தலே ஆகும்.
உடலில் சிறிய பாதிப்பு என்றாலே முடி உதிரத் துவங்கிவிடும், அதிலும் எண்ணில் அடங்காத வேதிப்பொருட்களை முடியில் பயன்படுத்தினால் கூந்தல் உதிராதா என்ன? நிச்சயம் உதிரும்.

ஹேர் பேக்கைப் பொறுத்தவரை இயற்கையானது, ரசாயனம் கலந்தது என இரு வகையாகப் பிரிக்கலாம். இயற்கையைப் பொறுத்தவரையில் மருதாணி, அவுரி போன்றவற்றை பயன்படுத்தலாம். இவை கூந்தலுக்கு எந்தவொரு பாதிப்பையும் ஏற்படுத்தாது.
ரசாயனத்தைப் பொறுத்தவரை தற்காலிகமானது, நிரந்தரமானது என இரண்டு வகையாகப் பிரிக்கலாம். அனைத்து நிரந்தரமான ஹேர் கலரிங் பேக்கிலும் அமோனியம் ஹைட்ராக்சைடு நிச்சயம் இடம்பெற்றிருக்கும்.
இவை கூந்தலுக்கு அதிக பாதிப்பினை ஏற்படுத்தக்கூடும். இயற்கையாக நாமே வீட்டில் தயாரிக்கும் ஹேர் பேக் மட்டுமே உடலுக்கு தீங்கு விளைவிக்காது.
இதனால் உங்களுக்கு பலன் கிடைப்பதைவிட பிரச்னை கிடைப்பதே அதிகமாக இருக்கும். ஹேர் டையைப் பொறுத்தவரை, அதில் உள்ள வேதிப்பொருட்களில் பல வேதிப்பொருள்கள் ஆக்டிவேட்டராகச் செயல்படும். இவையே கூந்தலுக்கு நிறங்களைக் கொடுப்பவை.
அதிகமாக ஹேர் டை பயன்படுத்தினால் அதிகமாக நிறம் வரும் என நினைத்து, அளவுக்கு அதிகமாகப் பயன்படுத்துகிறார்கள். இது முற்றிலும் தவறானது.
பயிற்சிபெற்ற ஒருவரிடம் ஹேர் டையைக் கூந்தலில் அப்ளை செய்யச் சொல்லலாம். ஏனெனில் அவர்களுக்கு எந்த ரசாயனத்தை எந்த அளவிற்குப் பயன்படுத்த வேண்டும் எனத் தெரியும்.
தவிர, ஹேர் டை பயன்படுத்துவதற்கு முன்பும், பின்பும் என்னென்ன பராமரிப்புகளைச் செய்ய வேண்டும் என்பதும் நிபுணர்களுக்கு நன்கு தெரியும்.
இதன் மூலம் முடியில் ஏற்படும் பாதிப்பைக் குறைக்கலாம். எனவே நாம் எந்த ஒரு ரெடிமேட் ஹேர் பேக்கையும் வீட்டிலேயே பயன்படுத்தக் கூடாது'' என்கிறார் அரோமா தெரப்பிஸ்ட் கீதா அசோக்.