வக்ஃப் விவகாரம்: காஷ்மீரில் தமிழ்நாட்டை மேற்கோள் காட்டி விவாதம்!
Hemang Badani : 'சிஎஸ்கே வீரர் டு டெல்லி கோச்!' - சேப்பாக்கத்தில் சம்பவம் செய்த தமிழக வீரர் பதானி
'பிளாஷ்பேக்!'
சேப்பாக்கத்தில் சென்னை அணியை 15 ஆண்டுகள் கழித்து டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி வீழ்த்தியிருக்கிறது. இதில், சுவாரஸ்யமான விஷயம் ஒன்றும் இருக்கிறது. அதாவது, இதற்கு முன் கடைசியாக டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி சென்னையை வீழ்த்தியபோது அந்த சென்னை அணியில் தமிழக வீரர் ஹேமங் பதானி இடம்பெற்றிருந்தார்.

இப்போது பல ஆண்டுகள் கழித்து டெல்லி மீண்டும் சென்னையை வீழ்த்தியிருக்கிறது. இப்போது டெல்லி அணியின் தலைமைப் பயிற்சியாளரே ஹேமங் பதானிதான். சுவாரஸ்யமான விஷயம் அல்லவா?

ஒரு பயிற்சியாளராக ஹேமங் பதானியின் சாதனைகள் அவ்வளவாக வெளியில் பேசப்படவில்லை. ஹேமங் பதானி தமிழகத்திலிருந்து இந்தியாவுக்காக ஆடிய ஒரு சில கிரிக்கெட்டர்களுள் ஒருவர். சொற்ப போட்டிகளில்தான் ஆடியிருக்கிறார். சர்வதேச கிரிக்கெட்டில் வாய்ப்பில்லாமல் இருந்த சமயத்தில்தான் ஐ.பி.எல் தொடங்கப்பட்டது. 2008 இல் முதல் சீசனில் சென்னை அணி சில தமிழக வீரர்களை ஒப்பந்தம் செய்து அணிக்குள் கொண்டு வந்தது. அதில் ஹேமங்கும் ஒருவர்.
இப்போதை போலத்தான் அப்போதும். விசில் போடு பாடலுக்கு விசில் அடிக்க மட்டுமே ஹேமங்கை பயன்படுத்திக் கொண்டார்கள். பெரிதாக வாய்ப்புக் கொடுக்கப்படவில்லை. பென்ச்சிலேயேதான் இருந்தார். சென்னையின் பென்ச்சிலேயே அவரின் ஐ.பி.எல் கரியரும் முடிவுக்கு வந்தது.

'வர்ணனையாளர் ஹேமங பதானி!'
2010 க்குப் பிறகு தமிழகத்தில் செய்தி சேனல்கள் அதிகமாக வரத் தொடங்கின. சீசனின் போது தினசரி ஒரு அரைமணி நேர ஸ்லாட்டில் ஐ.பி.எல் சிறப்பு நிகழ்ச்சிகளை செய்தி சேனல்கள் ஒளிபரப்புவார்கள். அந்த நிகழ்ச்சிகளில் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு போட்டிகளை ரிவியூவ் செய்து கொண்டிருப்பார். அதன்பிறகு, ஸ்டார் ஸ்போர்ட்ஸ் நிறுவனம் தமிழில் கிரிக்கெட் சேனலை புதிதாகத் தொடங்கியது. அப்போதுதான் அந்த சேனலுக்காக வர்ணனை குழுவில் ஹேமங் இணைந்தார்.

'பயிற்சியாளர் வாய்ப்பு!'
அங்கிருக்கும் போதுதான் தமிழ்நாடு ப்ரீமியர் லீகில் சேப்பாக் சூப்பர் கில்லிஸ் அணியின் பயிற்சியாளர் வாய்ப்பு ஹேமங் பதானிக்கு வாய்ப்பு கிடைக்கிறது. திறமைகளை கண்டறிந்து இளம் வீரர்களை சிறப்பாக பயிற்றுவித்து அந்த அணியை அடுத்தடுத்து சாம்பியனாக வைத்தார்.
ஹேமங்கின் பயிற்றுவிக்கும் திறனை பார்த்து இலங்கையில் ஐ.பி.எல் மாதிரியில் நடக்கும் லங்கா ப்ரீமியர் லீகில் ஜாஃப்னா அணி ஹேமங்கை பயிற்சியாளராக ஒப்பந்தம் செய்தது. அங்கே சென்று அங்கேயும் இலங்கையின் இளம் வீரர்களைத் திறம்பட கையாண்டு அந்த அணியையும் சாம்பியனாக்கினார்.

உடனே தென்னாப்பிரிக்காவில் நடக்கும் SAT20 இல் இருந்து அழைப்பு வந்தது. அங்கே சன்ரைசர்ஸ் ஈஸ்டர்ன் கேப்ஸ் அணியின் பேட்டிங் பயிற்சியாளராக சென்றார். அந்த அணியும் அங்கே சாம்பியன் ஆனது. உடனே ஐக்கிய அரபு அமீரகத்தின் ILT20 இல் இருந்து துபாய் கேப்பிட்டல்ஸ் அணியிடமிருந்து அழைப்பு. கடைசியாக நடந்த சீசனில் அந்த அணிதான் சாம்பியன்.
துபாய் கேப்பிட்டல்ஸ் அணியும் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி நிர்வாகத்துடையதுதான். ஹேமங் அங்கே சாம்பியன் பட்டத்தை வென்று கொடுத்ததால் அந்த நம்பிக்கையில், ரிக்கி பாண்டிங்கை பயிற்சியாளர் பதவியிலிருந்து நீக்கிவிட்டு ஹேமங்கை புதிய பயிற்சியாளர் ஆக்கினார். மெகா ஏலத்துக்கு பிறகு நடக்கும் முதல் சீசன். இது புதிய அணி. போதாக்குறைக்கு அக்சர் படேல் எனும் புதிய கேப்டன் வேறு. ஆனாலும் இங்கேயும் ஹேமங்கின் கொடிதான் உயரே பறக்கிறது.
நடப்பு சீசனில் டெல்லி அணி மட்டும்தான் ஆடிய 3 போட்டிகளிலும் வென்றிருக்கிறது. இப்போதைக்கு கிரிக்கெட் உலகில் அதிக டிமாண்ட் இருக்கக்கூடிய பயிற்சியாளர் ஹேமங்தான். ஆனால், அவர் அதைப் பெரிதாக எடுத்துக் கொள்வதே இல்லை.

SAT20 இல் சன் ரைசர்ஸ் அணி வென்றபோது ஹேமங்கின் அனுபவத்தையும் தொடர் வெற்றிகளையும் பற்றிய பேட்டிக்காகத் தொடர்புகொண்டேன். 'என்னைப் பற்றியே பேசிக்கொள்வதில் எனக்கு பெரிய விருப்பமில்லை.' என்று அவரிடமிருந்து பதில் வந்தது.
சென்னைக்கு எதிரான போட்டி முடிந்த பிறகு ஹேமங் பத்திரிகையாளர்களை சந்திக்க வந்திருந்தார். அப்போதும் ஒரு பத்திரிகையாளர் ஹேமங்கின் தொடர் வெற்றிகளை பற்றி கேள்விக் கேட்டார். அப்போதும் 'என்னைப் பற்றி பேசுவதற்கான இடம் இது இல்லை என நினைக்கிறேன். அணியைப் பற்றி பேசுவோமே...' என்று கூறிவிட்டு தான் படிப்படியாக உயர்ந்தவன் என்பதை மட்டும் சொல்லிவிட்டு சென்றார். சைலண்ட்டாக சம்பவம் செய்ய நினைக்கிறார்!