அமெரிக்க வரிச் சலுகை, செலவினக் குறைப்பு மசோதா: விவாதம் நடத்த நாடாளுமன்ற மேலவை ஒப...
Indian Gaur: நரக வேதனையில் துடித்த காட்டுமாடு, மறுவாழ்வு கொடுத்த வனத்துறை! நெகிழ்ச்சிப் பின்னணி
நீலகிரி மலையில் வாழிடங்களையும் வழித்தடங்களையும் இழந்து தவிக்கும் வனவிலங்குகள் தங்களின் அடிப்படைத் தேவைகளான உணவு, தண்ணீர், இனப்பெருக்கம் போன்றவற்றிற்கு ஓரிடத்தில் இருந்து மற்றொரு இடத்திற்கு இடம்பெயர முடியாமல் தவித்து வருகின்றன. காடுகளை இழந்து தவிக்கும் வனவிலங்குகள் தேயிலைத் தோட்டங்களிலும் குடியிருப்பு பகுதிகளிலும் தஞ்சமடைந்து வருகின்றன. வனவிலங்குகளால் மனிதர்களும் மனித தவறுகளால் வனவிலங்குகளும் கடுமையான இன்னலுக்கு உள்ளாகும் நிலை ஏற்பட்டு வருகிறது.

நீலகிரி வனக்கோட்டத்தைப் பொறுத்தவரை காட்டுமாடுகள் கடுமையான பாதிப்புகளுக்கு உள்ளாகி வருகின்றன. மின் வேலிகள், திறந்தவெளி கிணறுகள், கழிவுநீர் தொட்டிகள், சுருக்கு வலை கம்பிகள், மதுபாட்டில்கள், தூக்கி எறியப்படும் குழாய்கள் போன்றவை அவற்றின் உயிருக்கு தொடர்ந்து அச்சுறுத்தலை ஏற்படுத்தி வருகின்றன. இன்னல்களில் தவிக்கும் காட்டுமாடுகளை வனத்துறையினர் மீட்டு சிகிச்சை அளித்து வருகின்றனர்.
இந்த நிலையில், கோத்தகிரி அருகில் உள்ள பெட்டடி பகுதியில் காட்டுமாடு காலில் பிளாஸ்டிக் குழாய் சிக்கி கடுமையான பாதிப்பை ஏற்படுத்தியிருக்கிறது. பிளாஸ்டிக் குழாய் ஏற்படுத்திய காரணமாக நடக்க முடியாமல் தவிக்கும் போட்டோ வீடியோக்கள் சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் மூலம் இணையத்தில் பகிரப்பட்ட நிலையில், வனத்துறையின் கவனத்திற்குச் சென்றுள்ளது.

கால்நடை மருத்துவர்களுடன் சென்ற வனத்துறையினர், காயத்துடன் தவித்த காட்டு மாட்டிற்கு மயக்க ஊசி செலுத்தி காலில் சிக்கியிருந்த பிளாஸ்டிக் குழாயை அகற்றியுள்ளனர். காயத்திற்கு சிகிச்சை அளித்து விடுவித்துள்ளனர். இது குறித்து தெரிவித்த வனத்துறையினர், " கட்டபெட்டு வனச்சரகத்திற்கு உட்பட்ட பகுதியில் சுமார் 5 வயது மதிக்கத்தக்க பெண் காட்டுமாட்டின் வலது பின்னங்காலில் பி.வி.சி பைப் ஒன்று சிக்கியிருக்கிறது. ரணத்தால் ஒவ்வொரு நாளும் நகர வேதனையில் துடித்து வந்த காட்டுமாட்டின் காலில் இருந்த பைப் முழுவதுமாக அகற்றப்பட்டுள்ளது. இது அந்த காட்டுமாட்டிற்கு மறுவாழ்வு தான் " என்றனர்.