இஸ்ரேல் பிரதமருடன் இந்தியத் தூதர், பத்திரிகையாளர்கள் சந்திப்பு!
ISL : 'இந்தியன் சூப்பர் லீக் நடக்குமா நடக்காதா? - என்னதான் பிரச்னை?
'சிக்கலில் ஐ.எஸ்.எல்!'
இந்தியன் சூப்பர் லீக் கால்பந்து தொடரின் 12 வது சீசன் நடக்குமா நடக்காதா என்பதில் இன்னும் தெளிவான பதில் கிடைக்கவில்லை. அதனால் அணிகள் தங்களுடைய பயிற்சி முகாம்களை ஒத்தி வைத்திருக்கின்றன. வீரர்களுக்கு வழங்க வேண்டிய சம்பளங்களை நிறுத்தியிருக்கின்றன. வெளிநாட்டு வீரர்களுடனான ஒப்பந்தத்தை முறித்திருக்கின்றன.

ஒட்டுமொத்தமாக சொல்லப்போனால் தங்களின் செயல்பாட்டையே தற்காலிகமாக நிறுத்தியிருக்கின்றன. ISL சீசன் திட்டமிட்டபடி செப்டம்பர் - அக்டோபரில் தொடங்குமா என இன்னும் தெரியாததே இதற்கு காரணம். சரி, சீசனை நடத்துவதில் என்னதான் சிக்கல்?
AIFF அகில இந்திய கால்பந்து சம்மேளனம். இதுதான் இந்தியாவில் கால்பந்து நிர்வகிக்கும் அமைப்பு. மற்ற விளையாட்டு அசோசியேஷன்களைப் போலவே இந்த அசோசியேஷனிலும் எக்கச்சக்க குளறுபடிகளும் முறைகேடுகளும் உண்டு. அதனால் அசோசியேஷன் ஆரோக்கியமற்ற நிலையில் இருந்தது. இந்தியாவில் கால்பந்தை வளராமல் பார்த்துக் கொள்வதிலும் கால்பந்து சம்மேளனத்தின் மோசமான நிர்வாகத்துக்கு பெரிய பங்குண்டு.

'AIFF - FSDL ஒப்பந்தம்!'
இப்படியொரு நிலையில்தான் 2010 இல் AIFF ரிலையன்ஸ் நிறுவனத்துடன் ஒரு ஒப்பந்தத்தில் கையெழுத்திடுகிறது. அதன்படி, ரிலையன்ஸ் நிறுவனத்தின் FSDL (Football Sports Development Limited) நிறுவனம் இந்தியாவில் கால்பந்து சார்ந்த அத்தனை விஷயங்களின் வணிகத்தையும் பார்த்துக் கொள்ளும். இந்திய கால்பந்து அணி சார்ந்த விஷயங்களையும் சேர்த்துதான். அந்த உரிமைக்காக ஆண்டுக்கு 50 கோடி ரூபாயை AIFF க்கு வழங்கிவிடும். இது 15 வருட ஒப்பந்தம். இந்த ஒப்பந்தத்தின் கீழ்தான் 2014 இல் ரிலையன்ஸின் FSDL இந்தியன் சூப்பர் லீக் என ஐ.பி.எல் பாணியிலேயே ஒரு லீகை தொடங்கியது.
'நஷ்டமடைந்த ஐ.எஸ்.எல்!'
ஐ.பி.எல் யைப் போன்றே ஐ.எஸ்.எல் மூலம் கால்பந்தை பிரபலப்படுத்தி ஒரு பெரிய பொழுதுபோக்கு ஆட்டமாக மாற்ற வேண்டும் என்பதே இதன் நோக்கம். தோனி, சச்சின், அபிஷேக் பச்சன் போன்ற பிரபலங்களை அணியின் உரிமையாளர்களாகவும் விளம்பரத் தூதர்களாகவும் இறக்கி படோபடமாக 2014 இல் முதல் சீசனை நடத்தியிருந்தனர். முதல் 2-3 சீசன்களுக்கு நல்ல வரவேற்பு கிடைத்தது. அதன்பிறகு, ஐ.எஸ்.எல் க்கான வரவேற்பு குறையத் தொடங்கியது. முதல் சீசனை தொலைக்காட்சியில் கண்டுகளித்தவர்களின் எண்ணிக்கையோடு ஒப்பிடுகையில் கடைசி சீசனின் பார்வையாளர் எண்ணிக்கை நான்கில் ஒரு பங்குதான் இருக்கிறது.

தொலைக்காட்சி நிறுவனங்களுக்கு லாபகரமான தொடராக இந்தத் தொடர் அமையவில்லை. அணிகளாலுமே தங்களால் முதலீடு செய்த பணத்தை எடுக்க முடியவில்லை. ஒவ்வொரு அணியும் ஒரு சீசனுக்கே 30-50 கோடி ரூபாயை இழந்து வருவதாக கூறுகின்றனர். FSDL க்கு ஐ.எஸ்.எல் யை நடத்துவதன் மூலம் வணிகரீதியாக இழப்பு மட்டுமே ஏற்படுகிறது என்கின்றனர். இதை ஒருபுறம் வைத்துக் கொள்வோம். 2010 AIFF க்கும் FSDL க்கும் ஒரு ஒப்பந்தம் கையெழுத்தானது அல்லவா? அதை Master Rights Agreement என்பார்கள். அந்த MRA டிசம்பர் 8, 2025 உடன் காலாவதியாகிறது. ஆக, AIFF க்கும் FSDL க்கும் புதிய ஒப்பந்தம் கையெழுத்தானால் மட்டுமே 12 வது சீசனை தொடங்க முடியும்.
புதிய ஒப்பந்தத்தை முடிவு செய்து கையெழுத்திடுவதில்தான் இருதரப்பும் இழுத்தடிக்கின்றன. AIFF கடந்த 15 ஆண்டுகளைப் போலவே ஆண்டுக்கு இவ்வளவு தொகையை எங்களிடம் கொடுத்துவிடுங்கள் என்கிற நிலைப்பாட்டில் இருக்கிறது. ஆனால், ஒவ்வொரு சீசனிலும் பல கோடிகளை இழந்து நஷ்டமடைந்துவிட்டு AIFF க்கும் ஒரு பெரிய தொகையை கொடுக்க FSDL தயாராக இல்லை. இதற்கு மாற்றாக FSDL ஒரு விஷயத்தை முன்வைக்கிறது.
அதாவது, AIFF, FSDL, ஐ.எஸ்.எல் இல் ஆடும் அணிகள் இந்த மூன்று தரப்பும் இணைந்து பங்குதாரர்களாக ஒரு நிறுவனத்தை தொடங்குவோம். அதன்மூலம் ஐ.எஸ்.எல் யை நடத்துவோம். வருகிற லாபத்தில் அணிகளுக்கு 60% FSDL க்கு 26% AIFF க்கு 14 சதவீதத்தை எடுத்துக் கொள்ளலாம் என FSDL ஒரு மாடலை முன்வைக்கிறது. AIFF க்கு இதில் உடன்பாடில்லை.

இது மட்டும் சிக்கலில்லை. உச்சநீதிமன்றத்தில் AIFF இன் மீதான ஒரு வழக்கும் நிலுவையில் இருக்கிறது. தேசிய விளையாட்டு விதிகளுக்குட்பட்டு கால்பந்து சம்மேளனத்தின் சட்ட விதிகளை மாற்றி அமைப்பது தொடர்பான வழக்கில் இன்னும் தீர்ப்பு வரவில்லை. தீர்ப்பு வரும் வரை உச்ச நீதிமன்ற அனுமதியின்றி AIFF எந்த ஒப்பந்தத்திலும் கையெழுத்திடக் கூடாது எனவும் கூறப்பட்டிருக்கிறது. இதெல்லாம் சேர்ந்துதான் ஐ.எஸ்.எல் இன் நிலையை கேள்விக்குறியாக்கியிருக்கிறது.
இதுதொடர்பாக மூத்தப் பத்திரிகையாளர் மற்றும் விளையாட்டு வர்ணனையாளர் டி.என்.ரகு அவர்களிடம் பேசினேன். 'AIFF ஒரு திடமான ஆரோக்கியமான அமைப்பு கிடையாது. எக்கச்சக்க முறைகேடுகள் நிர்வாகக் கோளாறுகளில் சிக்கித் தவிக்கிறது. ஐ.எஸ்.எல் தொடங்கப்பட்ட காலத்தில் அதற்கான வரவேற்பு நன்றாகவே இருந்தது. ஆரம்பத்தில் 2 மாதங்கள் மட்டுமே நடக்கக்கூடிய தொடராக இருந்தது. வெளிநாட்டைச் சேர்ந்த நட்சத்திர வீரர்கள் நிறைய பேர் ஆடினர். ஆனால், போகப் போக போட்டிகளின் எண்ணிக்கையை அதிகரித்தனர்.

கிட்டத்தட்ட 8 மாதங்களுக்கு நடக்கும் தொடராக மாற்றினர். இது ரசிகர்களுக்கு ஒருவித அயர்ச்சியை கொடுத்தது. வெளிநாட்டு வீரர்கள் நிறைய பேர் தொடரிலிருந்து வெளியேறினர். அதே சமயத்தில் நம்முடைய ரசிகர்களுக்கு இதைவிட சிறப்பான வெளிநாட்டு லீகுகளை எளிதில் பார்க்கும் வசதியும் உருவாகிவிட்டது. அவற்றின் தரத்தோடு ஒப்பிடுகையில் ஐ.எஸ்.எல் அவ்வளவு சுவாரஸ்யமான தொடராக இல்லை.
இதெல்லாம்தான் ஐ.எஸ்.எல் இன் மீதான ஆர்வம் குறைய காரணம். அதேநேரத்தில் நிறைய இளம் திறமையாளர்களுக்கும் உள்ளூர் வீரர்களுக்கும் ஐ.எஸ்.எல் மூலம் வாய்ப்பு கிடைத்தது. நல்ல ஊதியமும் வாழ்வாதரமும் கிடைத்தது. அதெல்லாம் இப்போது கேள்விக்குறியான நிலையில் இருக்கிறது. இருதரப்பும் எதாவது சமரசங்களை செய்துகொண்டு தாமதமானாலும் போட்டிகளின் எண்ணிக்கையை குறைத்துக் கொண்டு சீசனை தொடங்கிவிட வேண்டும். அதுதான் இந்த விளையாட்டுக்கு நல்லது.' என்றார்.
சினிமா விகடனின் பிரத்யேக Whatsapp க்ரூப்
https://chat.whatsapp.com/JSk78H7siYK4aL2qO1RglR
சினிமா தொடர்பான எக்ஸ்க்ளூசிவ் அப்டேட், அசத்தல் பேட்டிகள், டி.வி அப்டேட்கள் என எதையும் மிஸ் செய்யாமல் தெரிந்து கொள்ள...
உங்கள் வாட்ஸ் அப் மூலமே இணைந்திருங்கள் சினிமா விகடனுடன்...