அரசியலைக் கடந்து திருப்பணிகள் செய்கிறோம்! -முதல்வர் மு.க.ஸ்டாலின்
Kalpana Nayak: தேர்வாணைய முறைகேடு, கொலை முயற்சி?! - புகாரின் பின்னணி என்ன?
சீருடைப் பணியாளர் தேர்வாணையத்தின் முறைகேடுகளை அம்பலப்படுத்தியதால், தனது உயிருக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டிருப்பதாக ஏடிஜிபி கல்பனா நாயக் குற்றம் சாட்டியது இன்று பரபரப்பான பேசுபொருளாகியிருக்கிறது. இந்தப் புகாரின் பின்னணி குறித்துப் பார்க்கலாம்.
கல்பனா நாயக் ஐஐடி சென்னையின் முன்னாள் மாணவர். அமெரிக்காவில் கிடைத்த பல கோடி ரூபாய் சம்பள வேலையை உதறிவிட்டு ஐபிஎஸ் ஆனவர். பஞ்சாப், ஆந்திரா, தெலுங்கானா மற்றும் தமிழ்நாடு ஆகிய நான்கு மாநிலங்களில் முக்கியப் பொறுப்புகளில் பணிபுரிந்துள்ளார். கடந்த ஆண்டு தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வாணையத்தின் உறுப்பினர் செயலாளராகப் பணியாற்றி வந்தவர்.
தமிழ்நாடு காவல்துறைக்கு 621 உதவி ஆய்வாளர்களைத் தேர்வு செய்வதற்காகக் கடந்த 2023-ஆம் ஆண்டு மே மாதம் வெளியிடப்பட்ட அறிவிக்கையின் அடிப்படையில் நடத்தப்பட்ட தேர்வில் இட ஒதுக்கீடு முறையாகக் கடைபிடிக்கப்படவில்லை என்று குற்றச்சாட்டுகள் எழுந்தன. அது தொடர்பான வழக்குகளை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம், இட ஒதுக்கீட்டை கடைப்பிடிப்பதில் நிகழ்ந்த குளறுபடிகளைச் சரி செய்ய வேண்டும் என்று ஆணையிட்டது. அதன்படி பழையப் பட்டியலில் இருந்து 41 பேரை நீக்கி விட்டு, புதிதாக 41 பேர் சேர்க்கப்பட்டதாக தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வாணையம் அறிவித்தது. ஆனால், அதிலும் குளறுபடிகள் இருப்பதால், புதிய பட்டியலை நவம்பர் 18-ஆம் தேதி நீதிமன்றத்தில் தாக்கல் செய்ய வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்றம் கடந்த அக்டோபர் 28-ஆம் நாள் ஆணையிட்டது. ஆனால், அதில் எந்த முன்னேற்றமும் ஏற்படவில்லை.
இந்த நிலையில்தான், காவல்துறை உதவி ஆய்வாளர் மற்றும் பிற பணிகளுக்கான நியமனங்களில் இட ஒதுக்கீட்டை பின்பற்றுவதில் நடந்த முறைகேடுகள் குறித்து விரிவான அறிக்கையை தாம் கடந்த ஆண்டு மார்ச் மாதம் தயாரித்து அளித்ததாகவும், அது கண்டுகொள்ளப்படவில்லை என்றும் காவல்துறை ஏடிஜிபி கல்பனா நாயக் குற்றம்சாட்டியுள்ளார். மேலும் சீருடை பணியாளர் தேர்வாணையத்தின் முறைகேடுகள் குறித்தும் காவல் உதவி ஆய்வாளர்கள் தேர்வில் இட ஒதுக்கீடு முறையாகக் கடைபிடிக்கப்படவில்லை என்பது குறித்தும் குற்றம் சாட்டியிருந்தார்.
இதையடுத்து சில நாட்களில் கடந்த ஆண்டு ஜூலை 29, 2024 அன்று, சென்னை எழும்பூரில் உள்ள தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வாணைய தலைமையகத்தை (USRB) கல்பனா நாயக் அடைவதற்குச் சில நிமிடங்களுக்கு முன்பு, அவரது அறையில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. இந்தச் சம்பவம் குறித்து கல்பனா நாயக், "என் அறையைச் சென்று பார்த்த போது மிகுந்த அதிர்ச்சி அடைந்தேன். சற்று விரைவாக என் அறைக்கு நான் சென்றிருந்தால், நான் உயிரிழந்திருப்பேன். முறைகேடுகள் குறித்து நான் வெளிப்படுத்திய சில நாட்களில் இந்த விபத்து அரங்கேறியுள்ளது" என்று புகார் தெரிவித்திருந்தார்.
இந்த தீ விபத்து சீருடைப் பணியாளர் தேர்வாணைய முறைகேடுகளை அம்பலப்படுத்தியதால் வந்த கொலை முயற்சியாக இருக்கலாம் என்றும் குற்றம் சாட்டியிருந்தார். மேலும், தீ விபத்து நடந்த சில நாட்களுக்குப் பிறகு, தேர்வானவர்களின் திருத்தப்பட்ட பட்டியல், தமிழ்நாடு சீருடை பணியாளர்களின் இணையதளத்தில் தனது ஆய்வு மற்றும் ஒப்புதல் இன்றி வெளியானதாகக் குற்றம் சாட்டியிருந்தார். ஆனால், ஏர் கண்டிஷனிங் சிஸ்டத்தில் ஏற்பட்ட ஷார்ட் சர்க்யூட் அல்லது மின் கசிவுக் காரணமாக தீ விபத்து ஏற்பட்டதாகக் காவல்துறை தெரிவித்திருந்தது.
இதையடுத்து இந்த தீ விபத்து குறித்து தீவிர விசாரணை நடத்த வேண்டும் என ஆகஸ்ட் 15, 2024 அன்று டி.ஜி.பி சங்கர் ஜிவால், தலைமை செயலாளர், உள்துறை செயலாளர் மற்றும் காவல் ஆணையருக்கு புகார் மனுவை கல்பனா நாயக் அனுப்பியிருந்தார்.
இப்படியான நிலையில் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் சீருடைப் பணியாளர் தேர்வாணையத்தின் ஏடிஜிபியாக இருந்த கல்பனா நாயக், சிலை கடத்தல் தடுப்புப் பிரிவிற்கு மாற்றப்பட்டிருக்கிறார். காவல்துறையின் முக்கியப் பொறுப்பில் இருக்கும் பெண் ஏடிஜிபியின் உயிருக்கே ஆபத்து ஏற்பட்டிருப்பதும், அவருக்கு நடந்த தீ விபத்து சம்பவத்தில் எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படாமல் இருப்பதும்தான் இப்போது அரசியல் சர்ச்சைகள் வெடிப்பதற்குக் காரணமாகியிருக்கிறது.
எதிர்க்கட்சித் தலைவர் அ.தி.மு.க எடப்பாடி பழனிச்சாமி, பா.ம.க நிறுவனர் ராமதாஸ், அண்ணாமலை உள்ளிட்டோர், 'பெண் ஏடிஜிபி கல்பனா நாயக்கை படுகொலை செய்ய சதி நடந்ததாக கூறப்படுவது குறித்து சிபிஐ விசாரணைக்கும் தமிழக அரசு ஆணையிட வேண்டும்' என்றும் ஆளுங்கட்சியான தி.மு.க அரசைக் குற்றம் சாட்டியும் கருத்துத் தெரிவித்து வருகின்றனர்.
இந்தச் சர்ச்சைகளுக்கு இன்று (பிப் 3) பதிலளித்திருக்கும் டிஜிபி அலுவலகம், 'ஏடிஜிபி கல்பானா நாயக் உயிருக்கு எந்தவித அச்சறுத்தலும், ஆபத்தும் இல்லை. அவரது அறையில் ஏற்பட்ட தீ விபத்து மின்கசிவால் ஏற்பட்டிருக்கிறது. அந்த தீ விபத்தை யாரேனும் ஏற்படுத்தியதற்கான முகாந்திரங்கள் ஏதுமில்லை" என்று விளக்கமளித்திருக்கிறது. சீருடைப் பணியாளர் தேர்வாணையம், "ஏடிஜிபி கல்பானா நாயக் புகாரில் உண்மையில்லை" என்று கூறியிருக்கிறது. கல்பனா நாயக், சீருடை பணியாளர் தேர்வாணைய முறைகேடுகளை அம்பலப்படுத்தியதால் தனக்குக் கொலை முயற்சி நடந்திருப்பதாகவும், தனது உயிருக்கு ஆபத்து ஏற்பட்டிருப்பதாகவும் உறுதியாகப் புகார் தெரிவித்து வருகிறார்.
திடீரென வெடித்திருக்கும் இந்த விவகாரம் தமிழகக் காவல்துறை வட்டாரத்தில் சர்ச்சைகளைக் கிளப்பி வருகிறது.