``இண்டியா, பாஜக, விஜய் அணி என 3 கூட்டணிகள் தேர்தலில் களமிறங்கும்'' - மாணிக்கம் த...
Kancha Gachibowli: காடழிப்பில் இறங்கிய தெலங்கானா அரசு; வெகுண்ட மாணவர்கள்- தடை விதித்த நீதிமன்றம்!
ஹைதராபாத்தின் நுரையீரலாக கருதப்படும் காஞ்சா கச்சிபௌலி காடானது, கடந்த சில தினங்களாக தேசிய அளவில் பெரும் கவனத்தை மக்கள் மத்தியில் ஈர்த்திருக்கிறது. காஞ்சா என்றால் 'மேய்ச்சல் நிலம்' அல்லது 'கழிவு நிலம்' எனவும்; கச்சி என்பது 'சுண்ணாம்பு சாந்து' எனவும் பௌலி என்றால் 'படிக்கிணறு' எனவும் பொருள்படுகிறது. இக்காடானது முதலில் மேய்ச்சல் நிலமாக இருந்ததாலும் சுண்ணாம்பு சாந்து பூசப்பட்ட படிக்கிணறு அப்பகுதியில் இருந்ததாலும், இவ்வாறு பெயரிடப்பட்டதாகக் கூறப்படுகிறது.
மேய்ச்சல் நிலமாக இருந்த அந்த 400 ஏக்கர் நிலப்பரப்பே இன்று தெலங்கானாவின் மாநில பறவையான இந்தியன் ரோலர் உட்பட 200க்கும் மேற்பட்ட பறவை இனங்கள், 700க்கும் மேற்பட்ட பூக்கும் தாவரங்கள், பத்து வகையான பாலூட்டிகள், 15 வகையான ஊர்வனங்கள் மற்றும் இன்னும் பல உயிரினங்களுக்கு வீடாகும். இந்தக் காடானது வெப்பநிலையை குறைத்து ஈரப்பதத்தை அதிகரித்து இயற்கை கார்பன் சின்க்காக ( carbon sink) செயல்படுவது மட்டுமின்றி உள்ளூர் காலநிலையை ஒழுங்குபடுத்துவதிலும் முக்கிய பங்காற்றி வருகின்றது.

இந்நிலையில் தெலங்கானா அரசானது இந்த 400 ஏக்கர் நிலப்பரப்பை IT தொழிற்சாலைகளுக்கு ஏலமிட திட்டமிட்டு கடந்த மார்ச் 30ஆம் தேதி பல புல்டோசர்களைக் கொண்டு இக்காட்டினை அழிக்கத் தொடங்கியது. அக்காட்டில் இருந்த 17 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மரங்களில் பத்தாயிரம் மரங்கள் போல அழிக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து அக்காட்டிற்கு அருகே அமைந்துள்ள ஹைதராபாத் பல்கலைக்கழக மாணவர்கள் அக்காட்டிற்காகவும் அக்காட்டினை இருப்பிடமாகக் கொண்டுள்ள உயிரினங்களுக்காகவும் போராட்டத்தில் இறங்கினர்.
அவ்வாறு போராட்டத்தில் இறங்கிய மாணவர்களில் 53 பேர் போலீஸாரால் கைது செய்யப்பட்டனர். இதனைத் தொடர்ந்து இப்பிரச்னையானது உயர் நீதிமன்றம் மற்றும் உச்ச நீதிமன்றத்தின் பார்வையை எட்டியது. உச்ச நீதிமன்றம் நடத்திய விசாரணையின் தீர்ப்பாக கடந்த ஏப்ரல் 3 ஆம் தேதி, தெலங்கானா அரசு இக்காட்டினை அழிப்பதற்கு இடைக்கால தடை விதிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

முன்னதாக 2004ஆம் ஆண்டு இந்த 400 ஏக்கர் நிலப்பரப்பானது IMG Academies Bharat Private Limited நிறுவனத்திற்கு விளையாட்டு வசதிகளுக்காக ஒதுக்கப்பட்டது. IMG நிறுவனமானது எந்த விதமான வேலையையும் அந்நிலத்தில் தொடராததால் 2006 ஆம் ஆண்டு அந்த ஒப்பந்தமானது ரத்து செய்யப்பட்டது. இந்நிலையில் தெலங்கானா அரசானது IT தொழில் நிறுவனம் கட்டும் திட்டத்தை கைவிட்டது மட்டுமல்லாமல் அதற்கு பதிலாக 400 ஏக்கர் நிலப்பரப்பில் உள்ள இந்த காடு மற்றும் ஹைதராபாத் பல்கலைக்கழகம் உட்பட மொத்தம் 2000 ஏக்கர் அளவிலான நிலப்பரப்பை உலக அளவில் மிகப்பெரிய சுற்றுச்சூழல் பூங்காவாக ( Eco Park )மாற்ற திட்டமிட்டுள்ளது. எனினும் இம்முடிவானது இன்னும் தெலங்கானா முதலமைச்சரால் தீர்மானம் செய்யவில்லை.
ஹைதராபாத் பல்கலைக்கழகத்திற்கு அம்மாநிலத்தின் வெளிப்புறத்தில் 100 ஏக்கர் நிலம் ஒதுக்கப்படும் எனவும் புதிய பல்கலைக்கழகம் நிறுவுவதற்கான நிதியும் ஒதுக்கப்படும் எனவும் கூறியுள்ளனர். இதற்கும் மாணவர்கள் மத்தியில் இருந்து எதிர்ப்பு எழுந்துள்ளது.