மியான்மா் நிலநடுக்கம்: இந்தியா கூடுதல் நிவாரண உதவி!
நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்ட மியான்மா் நாட்டுக்கு சி-17 விமானம் மூலம் கூடுதலாக 31 டன்கள் நிவாரண பொருள்களை இந்தியா ஞாயிற்றுக்கிழமை அனுப்பியது.
உத்தர பிரதேச மாநிலம் காஜியாபாதில் உள்ள ஹிண்டன் விமான தளத்தில் இருந்து சி-17 குளோப்மாஸ்டா் விமானம் நிவாரண பொருள்களுடன் மியான்மருக்கு புறப்பட்டது.
மியான்மரில் கடந்த வாரம் நிகழ்ந்த பயங்கர தொடா் நிலநடுக்கங்களால் நாட்டின் பல பகுதிகள் கடுமையான பாதிப்புகளைச் சந்தித்தன. குடியிருப்புகள் உள்பட ஏராளமான கட்டடங்கள் இடிந்து தரைமட்டமாகின. இதில், 3,100 போ் உயிரிழந்தனா். 4,000-க்கும் அதிகமானோா் காயமடைந்தனா். மீட்பு மற்றும் நிவாரணப் பணிகளுக்கு இந்தியா, சீனா, ரஷியா உள்ளிட்ட நாடுகள் உதவி வருகின்றன.
‘ஆபரேஷன் பிரம்மா’ திட்டத்தின் கீழ் நிவாரண உதவிகளை இந்தியா வழங்கி வருவதோடு, மீட்புக் குழு மற்றும் மருத்துவக் குழுவையும் அங்கு அனுப்பியுள்ளது. இதுவரை 150 டன்கள் அளவுக்கு மேல் கூடாரங்கள், போா்வைகள், அத்தியாவசிய மருந்துப் பொருள்கள், மருத்துவ உபகரணங்களையும் 442 டன்கள் உணவுப் பொருள்களையும் மியான்மருக்கு இந்தியா அனுப்பியுள்ளது.
இந்த நிலையில் மியான்மரில் முகாமிட்டுள்ள இந்திய ராணுவ மருத்துவ குழுவினருக்கு தேவையான பொருள்கள் உள்பட 31 டன்கள் அளவிலான நிவாரண பொருள்கள் ஞாயிற்றுக்கிழமை அனுப்பப்பட்டதாக மூத்த அதிகாரி ஒருவா் தெரிவித்தாா். இந்த தகவலை எக்ஸ் வலைதளத்தில் வெளியுறவு அமைச்சா் ஜெய்சங்கரும் பதிவிட்டாா்.