பங்கஜ் திரிபாதி மீது காதல்... மனம் திறந்த எம்.பி. மஹுவா மொய்த்ரா!
Kerala: ``பள்ளி கடைசி பெஞ்ச் மாணவர்கள் முறையை ஒழிக்க நிபுணர் குழு'' - கேரள அமைச்சர் சொல்வதென்ன?
பள்ளி வகுப்பறைகளில் கடைசி பெஞ்ச் மாணவர்களுக்கு தன்னம்பிக்கை குறைவதாக கூறி அனைத்து மாணவர்களுமே முதல் பெஞ்ச் மாணவர்களாக மாற்ற 'ப' வடிவிலான வகுப்பறை ஏற்படுத்த தமிழக அரசு ஆலோசனை மேற்கொண்டது. அதற்கு ஆதரவு கருத்துக்களும், எதிர் கருத்துக்களும் எழுந்தன.
குறிப்பாக மாணவர்கள் தொடர்ச்சியாக 45 டிகிரி கழுத்தை திருப்பி ஆசிரியரை பார்ப்பதன் மூலம் அவர்களுக்கு கழுத்துவலி போன்ற உடல் ரீதியாக பிரச்னை ஏற்படும் என்ற கருத்து எழுந்தது.
மேலும் மலையாள சினிமா ஒன்றில் வரும் காட்சி அடிப்படையில் தமிழக பள்ளிக்கல்வித்துறை இவ்வாறு ஆலோசனை செய்திருப்பதாக குற்றச்சாட்டு கூறப்பட்டது.

இந்த நிலையில், கேரள மாநிலத்தில் கடைசி பெஞ்சு மாணவர்கள் பிரச்னைக்கு தீர்வு ஏற்படுத்த குழு அமைக்கப்பட்டுள்ளதாக அம்மாநில கல்வித்துறை அமைச்சர் வி.சிவன்குட்டி தெரிவித்துள்ளார்.
இது பற்றி அமைச்சர் வி.சிவன்குட்டி இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:
நம்முடைய பள்ளி வகுப்பறைகளில் கடைசி பெஞ்ச் மாணவர்கள் என்ற முறையை முடிவுக்கு கொண்டு வர விரும்புகிறேன்.
கடைசி பெஞ்ச் முறை ஒரு மாணவனின் தன்னம்பிக்கையையும், கற்றலையும் மிகவும் பாதிக்க வாய்ப்பு உள்ளது. எந்த ஒரு மாணவரும் படிப்பிலும் சரி வாழ்க்கையில் சரி பின்னோக்கி போக கூடாது. அனைத்து மாணவர்களுக்கும் சம வாய்ப்பு உறுதிப்படுத்த வேண்டும் என்பதுதான் நம்முடைய லட்சியம் இதை எப்படி செயல்படுத்தலாம் என்பதை பற்றி நாம் சிந்தித்து வருகிறோம். கடைசி பெஞ்ச் என்ற பிரச்னையை இல்லாமல் ஆக்குவதற்காக பல நாடுகளிலும் பல வழிமுறைகளை பின்பற்றி வருகின்றனர்.

நம்முடைய கல்வி முறைக்கு ஏற்ற மிகச்சிறந்த முன்மாதிரியான திட்டத்தை கண்டுபிடிக்க நிபுணர்கள் குழுவை ஏற்படுத்த தீர்மானித்துள்ளோம்.
அந்த நிபுணர் குழுவின் வழிகாட்டுதல் படி நமது அடுத்த கட்ட செயல்பாடு அமையும். நம்முடைய மாணவர்களின் மிகச்சிறந்த எதிர்காலத்திற்காக உங்களுடைய எல்லோருடைய ஆதரவும் வேண்டும்." என்று அவர் தெரிவித்துள்ளார்.
பள்ளி மாணவர்களுக்கு தற்போதைய கோடை விடுமுறைக்குப்பதில் மழைக்கால விடுமுறை விடலாமா என கடந்த சிலதினங்களுக்கு முன்பு மக்களிடம் கருத்துக்கேட்டிருந்தார் அமைச்சர் வி.சிவன்குட்டி. இந்த நிலையில் கடைசி பெஞ்ச் மாணவர்கள் முறைக்கு தீர்வு ஏற்படுத்தும் நோக்கில் குழு அமைக்க உள்ளதாக அவர் அறிவித்துள்ளார்.