Markram : 'பவுமாவை தென்னாப்பிரிக்க மக்கள் மறக்கமாட்டார்கள்!' - எய்டன் மார்க்ரம் மகிழ்ச்சி!
'மார்க்ரம் நெகிழ்ச்சி!'
ஆஸ்திரேலிய அணியை 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்தி தென்னாப்பிரிக்க அணி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்பை வென்றிருக்கிறது. தென்னாப்பிரிக்கா நீண்ட காலமாக காத்திருந்து ஒரு பெரிய வெற்றியை பெற்றிருக்கிறது. இந்தப் போட்டியில் சிறப்பாக ஆடி சதமடித்திருந்த மார்க்ரம் போட்டிக்குப் பிறகு நெகிழ்ச்சியாகப் பேசியிருந்தார்.

மார்க்ரம் பேசியதாவது, '"சில நேரங்களில் நடக்கும் விஷயங்கள் விசித்திரமாக இருக்கும். முதல் இன்னிங்ஸில் டக் அவுட் ஆனேன். ஆனால், இப்போது என்னால் அணியின் வெற்றிக்கு பங்களிக்க முடிந்தது. லார்ட்ஸ் மைதானத்தில் ஆட வேண்டும் என்பது ஒவ்வொரு டெஸ்ட் கிரிக்கெட்டரின் கனவாகும். பல தென்னாப்பிரிக்க ரசிகர்கள் இங்கு கூடியிருக்கின்றனர். இது எங்களுக்கு மிகவும் சிறப்பான நாள்."
'ஐந்தாவது நாளுக்கு சென்றிருந்தால்...'
இரண்டாம் இன்னிங்ஸில் சற்று வேகமாக ரன்கள் குவித்தது குறித்து கேட்கப்பட்ட கேள்விக்கு, "ஆஸ்திரேலியாவின் பந்துவீச்சு எவ்வளவு சிறப்பானது என்பது தெரியும். குறிப்பிட்ட பந்துகளை மட்டுமே எதிர்கொள்ளப் போகிறோம் என்பதும் தெரியும். அதனால், அவற்றை எவ்வளவு சிறப்பாக ஸ்கோர் செய்ய முடியும் என யோசித்து ஆடினோம். நேதன் லயன் மிகச் சிறந்த பந்துவீச்சாளர். போட்டி ஐந்தாவது நாளுக்கு சென்றால், அவரை எதிர்கொள்வது மிகவும் கடினமாகிவிடும்."

பவுமாவை மறக்கமாட்டார்கள்!
காயத்துடன் பவுமா ஆடியது குறித்து பேசுகையில், "உண்மையைச் சொல்ல வேண்டுமென்றால், அந்த முடிவை முழுமையாக எடுத்தது அவரே. மூன்று ஆண்டுகளாக அணியை முன்னின்று வழிநடத்தியவர் அவர். களத்தை விட்டு வெளியேற அவருக்கு விருப்பமில்லை. காயத்துடன் முக்கியமான ரன்களைக் குவித்தார். அவரது இன்னிங்ஸை மக்கள் எளிதில் மறந்துவிட மாட்டார்கள்." என்றார்.