நிறைய பேர் பாலியல் தொல்லை அளித்திருக்கின்றனர்: ஜோனிடா காந்தி
பாடகி ஜோனிடா காந்தி தனக்கு நிகழ்ந்த பாலியல் தொல்லைகள் குறித்து பேசியுள்ளார்.
இந்தியளவில் பிரபலமான பாடகிகளில் ஒருவர் ஜோனிடா காந்தி. கனடாவைப் பூர்விகமாகக் கொண்ட இந்தியர் என்பதால் தமிழ், தெலுங்கு, ஹிந்தி, உருது உள்ளிட்ட பல மொழிகளில் பாடல்களைப் பாடியிருக்கிறார்.
ஒகே கண்மணி படத்தில் இடம்பெற்ற, “மெண்டல் மனதில்” பாடல் மூலம் தமிழ் சினிமாவில் கவனம் பெற்றவர், தொடர்ந்து இசையமைப்பாளர் அனிருத் படங்களில் நிறைய பாடல்களைப் பாடினார். ’செல்லம்மா’, ‘அரபிக்குத்து’ பாடல்களால் புகழடைந்தார்.
தற்போது, திரைப்பட பாடல்களுடன் இசை நிகழ்ச்சிகளையும் நடத்தி உலகளவில் பயணம் செய்கிறார்.
இந்த நிலையில், நேர்காணலில் கலந்துகொண்ட ஜோனிடா காந்தி, “இன்ஸ்டாகிராமில் என் நெருங்கிய நண்பர்களின் பதிவுகளைப் பார்ப்பேன். அப்படி ஒருமுறை ஒரு ஸ்டோரியை பார்த்தேன். அதில் ஆண் ஒருவர் தன் அந்தரங்க உறுப்பைப் பகிர்ந்து பின்னணியில் என் புகைப்படத்தை வைத்திருந்தார். அது எனக்கு அதிர்ச்சியளித்தது.

நான் இப்படிப்பட்டவர்களை உடனடியாக முடக்கிவிடுவேன் (block). இதையெல்லாம் பெரிதாக எடுத்துக்கொள்ள மாட்டேன் என்பதால் சம்பந்தப்பட்டவர்கள் மீது வழக்கு எதுவும் தொடரவில்லை. ஆனால், இதெல்லாம் பாலியல் தொல்லைகள்தான். அப்படி நிறைய பேர் எனக்கு தொல்லை அளித்திருக்கின்றனர்.” எனத் தெரிவித்துள்ளார்.
இதையும் படிக்க: குப்பை! மணிரத்னத்தைக் கடுமையாக விமர்சிக்கும் ரசிகர்கள்!