குழந்தை பாக்கியம் கிட்ட செய்ய வேண்டியவை.. ஜோதிடம் சொல்வதென்ன?
Ooty: பரிகாரம் எனச் சொல்லி பக்தர் நெற்றியில் கத்திக்குத்து; சாமியார் சிறையில் அடைப்பு; என்ன நடந்தது?
நீலகிரி மாவட்டம் குன்னூர் அருகில் உள்ள தூதூர்மட்டம் மகாலிங்க நகர் பகுதியைச் சேர்ந்தவர் 54 வயதான சிவகுமார். தன்னைச் சாமியார் என அறிவித்துக் கொண்ட சிவக்குமார், வீட்டிற்குள் சாமி சிலை ஒன்றை வைத்து மக்களுக்கு அருள்வாக்குச் சொல்லி வந்திருக்கிகிறார்.
அதே பகுதியில் வசித்து வரும் நாகராஜ் என்கிற விவசாயி சிவகுமாருக்குத் தேவையான உதவிகளை அவ்வப்போது செய்து வந்திருக்கிறார்.

தனக்கு மதுபானம் வாங்கி வரச்சொல்லி நேற்று முன்தினம் நாகராஜிடம் பணம் கொடுத்து மதுபானத்தைப் பெற்றிருக்கிறார். அப்போது நாகராஜிடம் பேசிய சிவக்குமார், "உனக்கு மனநிலை சரியில்லை என வெளியில் பேசிக்கொள்கிறார்கள். பரிகாரப் பூஜை ஒன்றைச் செய்தால் எல்லாம் சரியாகிவிடும்" எனக் கூறியிருக்கிறார்.
அதை நம்பி நாகராஜ் பூஜைக்குச் சம்மத தெரிவித்த நிலையில், பூஜைக்கான ஏற்பாடுகளைச் செய்து விட்டு நாகராஜைத் தனது வீட்டிற்கு அழைத்திருக்கிறார் சிவக்குமார்.
நாகராஜ் சென்றதும் பூஜைகள் என்கிற பெயரில் நாகராஜ் மீது விபூதி, குங்குமம் போன்றவற்றைத் தூவியிருக்கிறார். திடீரென கத்தியை எடுத்து நாகராஜின் நெற்றி மற்றும் தலையில் குத்தியிருக்கிறார்.
இதைச் சற்றும் எதிர்பாராத நாகராஜ் வலியைத் தாங்க முடியாமல் ரத்தம் சொட்டச் சொட்ட அலறி துடித்துக் கொண்டு வெளியே ஓடியிருக்கிறார். இதைக் கண்டுப் பதறிய அக்கம்பக்கத்தினர், நாகராஜை மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.

காவல்துறைக்குப் புகார் தெரிவிக்கப்பட்டிருந்த நிலையில், சிவக்குமாரை விசாரணை செய்த காவல்துறையினர் அவர்மீது வழக்குப்பதிவு செய்து சிறையில் அடைத்துள்ளனர்.