டோங்கா தீவில் 7.1 ரிக்டர் அளவில் நிலநடுக்கம்! சுனாமி எச்சரிக்கை!
Santosh: இந்தியாவில் சிக்கலில் 'சந்தோஷ்' - ஆஸ்கருக்கு பரிந்துரைக்கப்பட்ட படத்தில் என்ன பிரச்னை?
பிரிட்டிஷ்-இந்திய திரைப்பட இயக்குநர் சந்தியா சூரி இயக்கத்தில் உருவாகியிருக்கும் 'சந்தோஷ்' திரைப்படம் இங்கிலாந்து சார்பாக ஆஸ்கருக்குப் பரிந்துரை செய்யப்பட்ட திரைப்படமாகும்.
இப்படம் கடந்த ஆண்டு பல நாடுகளில் பல்வேறு சர்வதேச திரைப்பட விழாக்களில் திரையிடப்பட்டு பாராட்டுகளைப் பெற்றிருந்தது. இதை இந்தியாவில் வெளியிட இயக்குநர் சந்தியா சூரி பல்வேறு முயற்சிகளை எடுத்து வந்தார். ஆனால், இப்படத்தில் இருக்கும் பல்வேறு வசனங்களையும், காட்சிகளையும் நீக்குமாறு தணிக்கை வாரியம் (CBFC) கூறி, தடை விதித்திருக்கிறது.

தணிக்கை வாரியம் பக்கம் பக்கமாக காட்சிகளை நீக்க குறிப்புகள் கொடுத்துள்ளதால் படத்தை இந்தியாவிற்குக் கொண்டு வர முடியாமல் சிக்கலில் மாட்டிக் கொண்டு, உடைந்துபோயிருக்கிறார் சந்தியா சூரி. தணிக்கை வாரியம் சொல்லும் காட்சிகளை எல்லாம் நீக்கினால் படம் நீர்த்துப்போய், அர்த்தமற்றதாகிவிடும் என்று வேதனை தெரிவித்திருக்கிறார்.
'சந்தோஷ்' படத்தின் கதை என்ன?:
காவல்துறை பணியில் இறந்துபோன கணவனின் அரசுப் பணியை ஏற்று, கான்ஸ்டபிளாக வட இந்திய கிராமம் ஒன்றின் காவல்நிலையத்திற்குப் பணிக்குச் செல்கிறார் சந்தோஷ்(பெண்). காவல்துறையின் அதிகார அடுக்கு மூட்டைகளில், அடி மூட்டையாக இருக்கும் கான்ஸ்டபிள், அதுவும் கணவனை இழந்த பெண் கான்ஸ்டபிள் என்ன பிரச்னைகளையெல்லாம் எதிர்கொள்கிறார் என்பதாக கதைகளம் விரிகிறது.

சந்தோஷ், அப்பகுதியில் மர்மமான முறையில் கொலை செய்யப்பட்ட பட்டியலினத்தைச் சேர்ந்த பெண்ணின் கொலை வழக்கை விசாரிக்க நேரிடுகிறது. அந்த வழக்கை விசாரிப்பது மூலம் பாலியல் கொடூரங்கள், சாதிய வன்கொடுமைகள், காவல்துறையில் நடக்கும் சாதிய, அதிகார ஒடுக்குமுறைகளை கொஞ்சம் கொஞ்சமாகத் தெரிந்துகொள்கிறார். அந்தச் சிறுமியின் வழக்கு இறுதியில் என்ன ஆனது என்பது பற்றியும், இயல்பாக இந்தச் சமூகத்தில் ஊறிப்போய் கிடக்கும் சாதிய, அதிகார கொடுமைகள் பற்றியும் பேசுகிறது இப்படம்.
சாதி - அதிகாரம் இரண்டின் ஒடுக்குமுறைகளை ஒரே வசனத்தில் போகிறபோக்கில் பதிவு செய்திருக்கும் இப்படத்தின் இடம்பெற்றிருக்கும் இந்த அழுத்தமான வசனமே இப்படத்தின் அழுத்தமான கதைக் களத்தை எடுத்துரைக்கிறது. இதுபோல பல வசனங்களும், அழுத்தமான காட்சிகளும் இப்படத்தில் இடம்பெற்றிருப்பதாகக் கூறப்படுகிறது. அரசு, காவல்துறையை கேள்வியெழுப்பும் காட்சிகள். இவைதான் இப்படத்தை வெளியிடுவதற்கு சிக்கலாக இருப்பதாகக் கூறப்படுகிறது.

இதுபற்றி நேர்காணல் ஒன்றில் பேசியிருக்கும் இதன் இயக்குநர் சந்தியா சூரி, "காவல்துறையை மையமாகக் கொண்ட பல படங்கள் வன்முறையைக் கொண்டாடியிருக்கின்றன. அதுபோல எனது படம் வன்முறையைக் கொண்டாடவில்லை. அதற்கு எதிராகப் பேசுகிறது. படத்தின் உயிரோட்டமான காட்சிகளை நீக்காமல், அதன் சாராம்சம் நீர்த்துப்போகாமல் இந்திய மக்களுக்கான 'சந்தோஷ்' படத்தை, இந்திய மக்களிடமே கொண்டு சேர்ப்பேன்" என்று கூறியிருக்கிறார்.
Vikatan WhatsApp Channel
இணைந்திருங்கள் விகடனோடு வாட்ஸ்அப்பிலும்... CLICK BELOW LINK
https://bit.ly/VikatanWAChannel
