Bison: ``நீங்க ஏன் இந்த மாதிரி படம் எடுக்குறீங்க? - இது அபத்தமான கேள்வி" - மேடைய...
`Start-UP Business-ல் ஜெயிக்க என்ன பண்ணனும்?' - TVS Gopal Srinivasan-ன் பளிச் பதில்கள்! | Exclusive
அண்மையில், சென்னையிலுள்ள பிரபல நட்சத்திர ஹோட்டல் ஒன்றில் 'Startup சிங்கம் Season-2' அறிமுக விழா கோலாகலமாக நடந்து முடிந்தது. இந்த நிகழ்ச்சிக்கு வந்திருந்த TVS Capital Funds நிறுவனத்தின் Chairman & Managing Director கோபால் ஶ்ரீனிவாசனிடம் தமிழ்நாட்டில் Start-up நிறுவனங்கள் அதிகரிக்க என்ன காரணம், ஸ்டார்ட்-அப் நிறுவனங்கள் செய்ய வேண்டிய, செய்யக் கூடாத விஷயங்கள் என்னென்ன, ஒரு ஸ்டார்ட்-அப் நிறுவனம் ஜெயிக்க வேண்டுமெனில், அந்த நிறுவனம் கடைபிடிக்க வேண்டிய முக்கியமான விஷயங்கள் குறித்து கேள்விகளை கேட்டோம். அவர் சொன்ன பதில்கள் இங்கே...

தமிழ்நாட்டில் ஸ்டார்ட்-அப் நிறுவனங்கள் அதிகரிக்க என்ன காரணம்? என்கிற கேள்வியைமுதலில் கேட்டதற்கு, மிக மெல்லிய புன்னகையுடன் பேச ஆரம்பித்த அவர்,
"ஸ்டார்ட்-அப் என்கிற இந்த வார்த்தை பிரயோகம் வெகு சமீபத்தில் ஆரம்பித்த ஒன்று. ஏனெனில் பல ஆண்டுகளுக்கு முன்பு, 'உங்க பையன் என்ன பண்றான்' என ஒரு பெற்றோரிடம் கேட்கும்போது அவர்கள் சொல்லும் பதில், 'கம்பெனி வச்சு இருக்கான். பிசினஸ் பண்ணி பிழைக்கிறான்' என்பதாகத்தான் இருக்கும். ஆனால் இப்போது அதே கேள்வியை கேட்கும்போது, 'ஸ்டார்ட்-அப் கம்பெனி ஆரம்பிச்சு இருக்கான்' என பதில் வருகிறது. அவ்வளவுதானே தவிர, பிசினஸ் ஆரம்பிப்பதற்கும், ஸ்டார்ட்-அப் கம்பெனி ஆரம்பிப்பதற்கும் ஒன்றும் பெரிய வித்தியாசம் இல்லை.
இன்றைய நிலையில் 'Artificial Intelligence' வெகுவாக கோலோச்சி வருகிறது. இப்போது நமக்கு எது வேண்டும் என்றாலும் ChatGPT-யிடம் கேட்டு தெரிந்துகொள்கிறோம். அது போல, ஜெமினி, க்ராக் போன்ற பல ஏ.ஐ. ஆப்ளிகேஷன்கள் வந்துவிட்டன. நம்முடைய அன்றாட பயன்பாடுகளில் ஒன்றாக இந்த ஏ.ஐ தொழில்நுட்பம் மாறிவிட்டது. இந்த தொழில்நுட்பம் மக்களுக்கு அறிமுகம் ஆகி ஒரு வருடம்தான் ஆகிறது என்றாலும், இந்த தொழில்நுட்பம் எப்படி வந்தது என ஆராய்ந்து பார்க்கும்போது, முதலில் 'Microprocessor' வந்தது, அதற்கு பிறகான காலகட்டங்களில் Window's, Mac வெளியானது, பின்னர், client server architecture என்கிற தொழில்நுட்பம் பிரபலமானது, அதற்குப் பிறகு world wide web வந்தது. அதற்கு பிறகு நாம் இப்போது பரவலாக பயன்படுத்தபப்டும் Social Media-க்கள் வந்தன. அண்மை காலமாக, நம் அனைவரையும் ஏ.ஐ இயக்க ஆரம்பித்திருக்கிறது. அதுபோலத்தான், இந்த ஸ்டார்ட்-அப் நிறுவனங்களின் பரிணாமமும்.

இந்தியாவில் உள்ள சுமார் 5 லட்சம் சிறு தொழில்கள், இந்தியாவின் குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் துறையின் 50% வருமானத்தை சம்பாதித்து கொடுக்கின்றன. இன்றைய நிலையில் ஸ்டார்ட்-அப் என்று சொல்கிற அனைத்து தொழில்களுமே சிறு தொழில்கள்தான். ஒரு இடத்தில் ஒரு பிரச்னை இருக்கிறது. அந்த பிரச்னைக்கு தீர்வு தரும் வகையில் ஒரு ஐடியாவை உருவாக்கி அதை ஒரு தொழிலாக மாற்றும் போது அந்த ஐடியா நிச்சயமாக வெற்றி பெறுகிறது என்பதைத்தான் இன்று உருவாகும் ஸ்டார்ட்-அப் நிறுவனங்கள் நமக்கு உணர்த்துகின்றன.
எனக்கு தெரிந்த ஒருவர் பனை சர்க்கரையை (Palm Sugar) சிறிய சிறிய பாக்கெட்களில் அடைத்து விற்பனை செய்கிறார். பெரும்பாலானவர்கள் அஸ்கா சர்க்கரைக்கு (White Sugar) மாற்றாக வேறு ஏதாவது ஆரோக்கியத்து தீங்கு விளைவிக்காத வகையில் சர்க்கரை கிடைக்குமா என தேடிக்கொண்டிருந்த நேரத்தில் என் நண்பரின் பனை சர்க்கரை அதற்கு தீர்வாக அமைந்திருக்கிறது. அவருடைய ஸ்டார்ட்-அப் நிறுவனத்தின் பிசினஸ் ஐடியா எடுத்த எடுப்பிலேயே நல்ல வருமானத்தை வழங்க ஆரம்பித்திருக்கிறது. இப்படி பல புதுமையான ஐடியாக்களை இன்றைய ஸ்டார்ட்-அப் நிறுவனங்கள் உருவாக்கி அதில் வெற்றி காண்பது பாராட்டத்தக்க விஷயம்" என்றவரிடம், `ஸ்டார்ட்-அப் நிறுவனங்கள் புதுமையான (INNOVATIVE) ஐடியாக்களை உருவாக்கினால்தான் பிசினஸில் ஜெயிக்கமுடியும் எனச் சொல்கிறீர்களே?' என்று கேட்டதற்கு...
"எந்தவொரு ஸ்டார்ட்-அப் நிறுவனமும் பிசினஸ் ஆரம்பிக்கும்போது உற்சாகத்துடன் ஆரம்பிக்க வேண்டும் என்பதுதான் அடிப்படை விஷயம். அதுமட்டுமில்லாமல் பிசினஸ் ஐடியாவில் கிரியேட்டிவிட்டியும் புதுமையும் மிக மிக முக்கியம். பல வீடியோ இன்டர்வியூக்களில் நான் இதற்கு முன்பு பேசியிருக்கிறேன். முன்பெல்லாம் வயருடன் (wire) கையில் மைக்கை வைத்து கேள்வி கேட்பார்கள். பிறகு வயர் இல்லாத மைக்குகள் வந்தன. 'Rode' என்கிற நிறுவனம் சதுர வடிவில் காலர் மைக்குகளை அறிமுகப்படுத்தின.
இப்போது ஷர்ட் பட்டன் அளவு கொண்ட மைக்குகளை மாட்டிக் கொண்டு வீடியோவில் பேசும் அளவுக்கு அதன் தொழில்நுட்பம் மாறியிருக்கிறது. இந்த மாதிரியான புதுமை மற்றும் கிரியேட்டிவிட்டி ஸ்டார்ட்-அப் நிறுவனங்களுக்கு மிகவும் தேவை. அப்போதுதான் பிசினஸ் உலகில் நீடித்து நிலைக்க முடியும்" என்றார்.
பல வகையான INNOVATION-கள்?!

மேலும் பேசிய அவர், "பிசினஸில் புதுமை என்பது இந்த காலத்தில் மட்டுமில்லை. அந்த காலத்து பிசினஸ்களில் இருந்திருக்கிறது. அதனால்தான் இன்று பெரிய பெரிய பிசினஸ்கள் நீடித்து நிலைத்திருக்கின்றன. இந்தியா தொழில்நுட்பத்தில், செயல்பாட்டில், பொருட்களை தயாரிப்பதில், கொள்களை உருவாக்குவதில் என புதுமைகளை படைக்கும் நாடாக இருந்துவருகிறது. சீனாவை விடமும் நாம் சிறந்து விளங்குகிறோம் என்பதற்கு மிக முக்கியமான உதாரணம் டிஜிட்டல் இந்தியாவாக மாறியிருப்பதுதான். ஒரு நொடியில் யு.பி.ஐ மூலம் நாம் இப்போது பணத்தை அனுப்புகிறோம். 'Digi Yatra' என்கிற அரசின் புதுமையான ஐடியாவின் மூலம் விமானத்தில் பயணிக்கிறோம். இப்படி அரசு தரப்பில் இருக்கும் innovative Idea-க்களை சொல்லிக்கொண்டே போகலாம்.
இப்படித்தான் இந்தியாவின் தொழில்நிறுவனங்கள் தங்களுக்கு தேவையான விஷயங்களில் வழக்கமாக யோசிக்காமல் புதுமையாக யோசித்து செயல்படும்பட்சத்தில் தொழிலில் வெற்றி காண முடியும்" என்றவர் ஒரு ஸ்டார்ட்-அப் நிறுவனம் ஆரம்பிப்பவர்கள் செய்ய வேண்டிய செய்யக் கூடாத விஷயங்களை குறிப்பிட்டார்.
செய்ய வேண்டிய, செய்யக் கூடாத விஷயங்கள்!

"ஸ்டார்ட்-அப் நிறுவனத்தை ஆரம்பிக்கும் ஒருவருக்கு பயம் என்பது இருக்கவே கூடாது. பிசினஸ் ஆரம்பிப்பதற்கு முன்பு, மென்டர்களை அணுகி பிசினஸ் ஐடியாக்களை பகிர்ந்துகொண்டு, அதற்கான அட்வைஸ்களை பெற்றுக் கொண்டு ஆரம்பிப்பது நல்லது. நீங்கள் ஆரம்பித்திருக்கும் பிசினஸ் குறித்த சந்தையை தெரிந்துகொள்வது அல்லது சந்தையை புதிதாக உருவாக்குவது இந்த இரண்டு விஷயத்தில் கவனமாக இருங்கள். நீங்கள் நீங்களாக இருங்கள். இன்னொருவரை பார்த்து அவரைப் போல ஆக வேண்டும் என நினைத்து அவருடைய பாதையில் உங்களுடைய பயணத்தை அமைத்துக் கொள்ள வேண்டாம். இன்னொரு முக்கியமாக விஷயம் உங்களையும், உங்களுடைய நிறுவனத்தையும் நீங்கள் எடை போடக் கற்றுக்கொள்ளுங்கள். இறுதியாக எந்த ஒரு தொழிலாக இருந்தாலும் நேர்மை மிக மிக முக்கியம். ஸ்டார்ட்-அப் நிறுவனம் ஆரம்பிப்பவர்கள் நேர்மையுடன் தொழிலை அணுகுங்கள் நிச்சயமாக பிசினஸ் சிறக்கும்" என்றார் தெளிவாக.





















