`StartUp' சாகசம் 28: ரூ.50 டு ரூ.10 லட்சம்; 150+ விவசாயத்துறை உபகரணங்கள்- கோவை கிளாசிக் இன்டஸ்ட்ரீஸ்
இன்றைய நவீன உலகில், விவசாயம் என்பது வெறும் உடல் உழைப்பை மட்டும் நம்பியிருக்கும் தொழில் அல்ல. அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்தை ஒருங்கிணைத்து, மகசூலை அதிகரித்து, விவசாயிகளின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்தும் ஒரு புதிய சகாப்தத்தை நோக்கி விவசாயம் பயணித்துக் கொண்டிருக்கிறது. கடுமையான உடல் உழைப்பைக் குறைத்து, இயற்கை வளங்கள், நேரம் மற்றும் செலவுகளை மிச்சப்படுத்தும் பல்வேறு நவீன விவசாய இயந்திரங்கள், இன்று விவசாயிகளின் கைகளில் வரப்பிரசாதமாக வந்து சேர்ந்துள்ளன.
ஆனால் இங்கே ஒரு கடுமையான உண்மை உள்ளது. இந்தியாவில் இன்னும் 80% விவசாயிகள் நவீன விவசாய நுட்பங்களை ஏற்றுக்கொள்ளாமல் பாரம்பரிய முறைகளையே பின்பற்றி வருகின்றனர் என்று ஆய்வுகள் தொடர்ந்து சுட்டிக்காட்டுகின்றன.
உலக அளவில் உணவுப் பாதுகாப்பை உறுதிப்படுத்துவதிலும் விவசாயிகளின் வாழ்வாதாரத்தை மேம்படுத்துவதிலும் விவசாய இயந்திரங்களின் பங்கு மிக முக்கியமானது. இந்தியா ஒரு விவசாய நாடாக இருந்தாலும், மற்ற வளர்ந்த மற்றும் வளரும் நாடுகளுடன் ஒப்பிடும்போது நம்முடைய நிலைமை கவலைக்குரியது.
.jpg)
இந்தியாவின் நிலைமை:
இந்தியாவின் ஒட்டுமொத்த பண்ணை இயந்திரமயமாக்கல் நிலை வெறும் 27% மட்டுமே.
பஞ்சாப் மற்றும் ஹரியானா போன்ற முன்னேறிய மாநிலங்களில் இது 30-40% வரை இருந்தாலும், வடகிழக்கு மாநிலங்களில் மிகவும் குறைவாக உள்ளது.
இந்தியாவில் சுமார் 86% விவசாயிகள் சிறு மற்றும் குறு விவசாயிகள் (2 ஹெக்டேருக்கும் குறைவான நிலம் வைத்திருப்பவர்கள்).
இவர்களின் சராசரி நிலம் வெறும் 1.08 ஹெக்டேர் மட்டுமே
இந்த சிறிய நிலப்பரப்பு காரணமாக பெரிய விலையுயர்ந்த இயந்திரங்களை வாங்குவது இவர்களுக்கு மிகவும் கடினமான காரியமாக உள்ளது.
சீனா மற்றும் பிரேசில் போன்ற நாடுகளில் பண்ணை இயந்திரமயமாக்கல் நிலை சுமார் 70% ஆக உள்ளது. இது இந்தியாவை விட மூன்று மடங்கு அதிகம். இந்த நாடுகள் பெரிய அளவிலான விவசாய நிலங்களைக் கொண்டிருப்பதும், அரசின் விவசாயக் கொள்கைகள் இயந்திரமயமாக்கலை வலுவாக ஊக்குவிப்பதும் இதற்கு முக்கிய காரணங்களாகும்.
இந்தியா உலகின் மிகப்பெரிய டிராக்டர் சந்தைகளில் ஒன்றாக இருந்தாலும், ஒட்டுமொத்த இயந்திரமயமாக்கல் நிலை மிகவும் குறைவாகவே உள்ளது.
இதற்கான முக்கிய காரணங்கள்:
1. நிலம் தொடர்பான சவால்கள்:
இந்தியாவின் பெரும்பான்மையான விவசாயிகள் சிறிய துண்டு துண்டான நிலங்களைக் கொண்டுள்ளனர்.
இதனால் அதிக விலை கொண்ட இயந்திரங்களை தனிப்பட்ட முறையில் வாங்குவது பொருளாதார ரீதியாக சாத்தியமற்றதாக மாறுகிறது.
2. நிதி நெருக்கடி:
சிறு மற்றும் குறு விவசாயிகளிடம் பெரிய அளவிலான முதலீட்டுத் திறன் இல்லை.
அரசு மானியங்கள் மற்றும் கடன் திட்டங்கள் இருந்தாலும், அவை போதுமானதாக இல்லை என்பது கசப்பான உண்மை.
கிராமப்புற வங்கிகளின் கடன் வழங்கும் செயல்முறை சிக்கலானது.
3. பொருத்தமான தொழில்நுட்பம் இல்லாதது:
சிறிய நிலங்களுக்கு ஏற்ற, செலவு குறைந்த மற்றும் பலதரப்பட்ட பணிகளைச் செய்யக்கூடிய இயந்திரங்களின் தேவை இந்தியாவில் அதிகமாக உள்ளது.
ஆனால் இத்தகைய இயந்திரங்கள் சந்தையில் போதிய அளவில் கிடைக்கவில்லை
4. அறிவு மற்றும் திறன் இடைவெளி:
நவீன இயந்திரங்களை சரியாக இயக்குவதற்கும், பராமரிப்பதற்கும் தேவையான பயிற்சி மற்றும் விழிப்புணர்வு பல விவசாயிகளிடம் இல்லை.
தொழில்நுட்ப ஆதரவு கிராமப்புறங்களில் போதுமானதாக இல்லை
5. உள்கட்டமைப்பு பற்றாக்குறை:
பழுதுபார்ப்பு மற்றும் பராமரிப்பு வசதிகள், உதிரி பாகங்கள் எளிதாகக் கிடைப்பது, தொடர்ச்சியான மின்சார வசதி போன்ற அடிப்படை உள்கட்டமைப்பு சவால்கள் கிராமப்புறங்களில் நீடிக்கின்றன.

விவசாயப் பணிகளுக்கு இயந்திரங்களைப் பயன்படுத்தும்போது ஒரு ஏக்கருக்கான செலவு மற்றும் நேரம் பல காரணிகளைப் பொறுத்து மாறுபடுகிறது - இயந்திரத்தின் வகை, பயிரின் இனம், நிலத்தின் தன்மை மற்றும் வாடகை மையங்களின் கட்டணங்கள். இந்தியாவில் பல விவசாயிகள் தனிப்பட்ட முறையில் இயந்திரங்களை வாங்க முடியாமல், வாடகைக்கு எடுத்து (Custom Hiring Centers - CHCs) பயன்படுத்துகின்றனர். இருப்பினும், இந்த வாடகை சேவைகளும் எல்லா பகுதிகளிலும் போதுமானதாக இல்லை.
1. ஆராய்ச்சி மற்றும் மேம்பாடு:
சிறிய நிலங்களுக்கு ஏற்ற, குறைந்த விலையிலான மற்றும் பல்நோக்கு இயந்திரங்களை உருவாக்க ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டில் அதிக கவனம் செலுத்த வேண்டும்.
2. வாடகை சேவைகளை மேம்படுத்துதல்:
விவசாயிகளுக்கு இயந்திரங்களை வாடகைக்கு எடுக்கும் வசதியை கணிசமாக மேம்படுத்த வேண்டும்.
கூட்டுறவு சங்கங்கள் மற்றும் கிராமப்புற அளவில் Custom Hiring Centers (CHCs) ஐ பெருமளவில் ஊக்குவிக்க வேண்டும்.
3. திறன் மேம்பாடு:
விவசாயிகளுக்கு நவீன இயந்திரங்களை திறமையாக இயக்குவதற்கும், பழுதுபார்ப்பதற்கும் விரிவான மற்றும் நடைமுறை சார்ந்த பயிற்சி அளிக்க வேண்டும்.
4. உள்கட்டமைப்பு வலுப்படுத்தல்:
கிராமப்புறங்களில் பழுதுபார்ப்பு வசதிகள், உதிரி பாகங்கள் கிடைக்கும் கடைகள் மற்றும் நம்பகமான மின்சார விநியோகம் போன்ற அத்தியாவசிய உள்கட்டமைப்பை பலப்படுத்த வேண்டும்
5. அதிநவீன தொழில்நுட்பம்:
ட்ரோன்கள், சென்சார்கள், செயற்கை நுண்ணறிவு (AI) போன்ற அதிநவீன தொழில்நுட்பங்களை விவசாயத்தில் படிப்படியாக அறிமுகப்படுத்தி, துல்லியமான விவசாய முறைகளை (Precision Agriculture) ஊக்குவிக்க வேண்டும்
இந்தியா விவசாய உற்பத்தியில் உலக அளவில் ஒரு முக்கிய இடத்தைப் பிடித்துள்ள நிலையில், இயந்திரமயமாக்கலில் இன்னும் கணிசமான வளர்ச்சி பெற வேண்டிய அவசியம் உள்ளது. மற்ற வளர்ச்சி அடைந்த நாடுககளுடன் ஒப்பிடும்போது இந்தியாவின் இயந்திரமயமாக்கல் நிலை குறைவாக இருந்தாலும், அரசின் திட்டமிட்ட முயற்சிகள், விவசாயிகளின் அதிகரித்து வரும் விழிப்புணர்வு மற்றும் தொழில்நுட்ப மேம்பாடு ஆகியவை ஒருங்கிணைந்து செயல்படும்போது, இந்திய விவசாயத்தை ஒரு புதிய உயரத்திற்கு கொண்டு செல்லும் சக்தி பெறும்.
தமிழ்நாட்டின் ஆச்சர்யகரமான பங்களிப்பு
இப்படிப்பட்ட சவாலான சூழ்நிலையில், தமிழ்நாட்டில் இருந்து ஒரு நிறுவனம் இந்தியாவின் 12 மாநிலங்களுக்கும், உலக அளவில் 30 நாடுகளுக்கும் விவசாய உபகரணங்களை வெற்றிகரமாக ஏற்றுமதி செய்து வருகிறது என்பது மிகவும் ஆச்சர்யமளிக்கிறது. இது தமிழ்நாட்டின் தொழில்நுட்ப திறமையையும், கண்டுபிடிப்பு சக்தியையும் நிரூபித்துவருகிறது, கோவையைச் சேர்ந்த கோவை கிளாசிக் இன்டஸ்ட்ரீஸ் நிறுவனம் சுமார் 150 விவசாயத்துறை சார்ந்த உபகரணங்களை உருவாக்கி விவசாயிகளுக்கு உபகரணங்களை வழங்கி வருகிறது. இந்த நிறுவனத்தின் சாகசத்தை இதன் இயக்குநர் ரிஷி வசந்தகுமார் அவர்களிடம் கேட்போம்.

``நிறுவனம் வழங்கும் முக்கியமான வேளாண் இயந்திரங்கள் மற்றும் உபகரண வகைகள் என்னென்ன? அந்த இயந்திரங்களை உருவாக்கும் எண்ணம் எவ்வாறு உருவானது?”
``எப்படி இந்த எண்ணம் வந்ததென்றால், இதை என் அப்பா வசந்தகுமார் ஆரம்பித்தார். 1990-களில் முதன் முதலில் நெல் அடிக்கும் இயந்திரம் வைத்து ஆரம்பித்த வணிகம் , அதன் பின் 2010ல்தான் கோவை கிளாசிக் இன்டஸ்ட்ரீஸ் உருவானது. என் அப்பாவைப் பொறுத்தவரை அவர் இப்போதும் விவசாயம் செய்கிறார். அவர் தொடர்ந்து விவசாயம் செய்யும்போது அவருக்கு அதில் உள்ள சிக்கல்கள், பிரச்னைகள் எல்லாமே தெரியும். அவர் அங்கே சந்திக்கும் சிக்கல்கள், தீர்வுகளை எல்லாம் நாங்கள் இங்கே அதற்கு தீர்வாக ஒரு இயந்திரத்தை உருவாக்கிவிடுவோம். அப்படித்தான் கோவை கிளாசிக் இன்டஸ்ட்ரீஸ் உருவானது. இன்று 150 வகையான விவசாயக் கருவிகளை உருவாக்கியிருக்கின்றோம்.
இன்னொரு புறம் விவசாயிகளிடம் இருந்து வரும் கோரிக்கைகள், எங்களுக்கு இப்படியெல்லாம் பிரச்னை இருக்கு. இதைத் தீர்த்தால் நல்லாக இருக்கும் என்று அவர்கள் கூறும்போதும் அதற்கான சந்தை வாய்ப்புகளைக் கண்டறிந்து அதையும் ஒரு தயாரிப்பாக மாற்றிவிடுகின்றோம்.
தேங்காய்க்கான மட்டை உரிக்கும் இயந்திரம் 2010ல் நாங்கள்தான் முதல் முதலில் உருவாக்கினோம். அதை 2010ஆம் ஆண்டிலிருந்து, அந்த மெசினுக்கு இந்தியா மட்டும் இல்லாமல் உலகம் முழுக்க 30 நாட்டுக்கு ஏற்றுமதி செய்திருக்கிறோம். அதுமட்டுமல்லாமல் தேங்காய் மட்டை எல்லாம் வைத்து அதைத் தூள் பண்ணி உரமாக்கும் மெசினை 13 வருடங்களாக நாம்தான் செய்துகொண்டிருக்கிறோம்.
50 ரூபாயில் இருந்து 10 லட்சம் ரூபாய் மதிப்புள்ள சைலேஜ் பேக்கிங் மெசின் பிறகு ட்ரோன் வரைக்கும் எல்லாமே பண்ணிக்கொண்டிருக்கிறோம். இதன் வழியே விவசாயிகளுக்கான பிரச்சினைகளைத் தீர்க்க வேண்டும், அவர்களும் சம்பாதிக்க வேண்டும் என்பதே நோக்கம்.”

``பலவிதமான உபகரணங்களை உருவாக்கியுள்ளீர்கள். எந்த அடிப்படையில் உபகரணங்களை உருவாக்கி வெளியிடுகிறீர்கள்? அதற்கான ஆய்வுகள் மற்றும் ஆராய்ச்சிகள் என்ன?”
``சந்தையின் தேவைகளை உடனுக்குடன் நாங்கள் தெரிந்துகொள்கின்றோம். உதாரணத்திற்கு என் அப்பா இன்றும் விவசாயம் செய்கிறார் என்று சொல்லியிருந்தேன். அதேபோல் ஒரு பொருளை நாங்கள் விவசாயிகளிடம் விற்கும்போது அவர் எனக்கு இன்னும் இப்படி இருந்தால் நல்லாயிருக்கும் என்பதுபோலவும், சில விஷயங்களுக்கு உபகரணம் இருந்தாலே நல்லாயிருக்கும் என்பதுபோலவும் சொல்லும்போது உண்மையில் தேவை இருக்கிறதா என்று ஆராய்வோம். பொருளாதார ரீதியாக பலனளிக்குமா?, அதன் விற்பனைக்கான வாய்ப்பு என ஆராய்வோம். எல்லாப் பிரச்னைக்கும் 100% தீர்வுகள் கொடுக்க முடியாது, அதே சமயம் புளூ ஓசன் ஸ்ட்ராடஜியும் நாங்கள் ஆராய்ந்து வாய்ப்பு இருந்தால் அதற்கான சந்தையையும் நாங்களே உருவாக்குவோம்.
``விவசாய உபகரணங்கள் சந்தையில் பலதரப்பட்ட உபகரணங்களுக்கான விலை நிர்ணய உத்தியை முதன்மையாக பாதிக்கும் காரணிகள் யாவை? போட்டியாளர்களின் விலையையும், உங்கள் தரத்திற்கான உறுதிப்பாட்டையும் எவ்வாறு சமநிலைப்படுத்துகிறீர்கள்?”
``இதில் மிகப்பெரிய சவாலே விற்பனைக்குப் பிறகான சேவை வழங்குவதுதான். ஒரு புறம் உபகரணங்கள் தேவைப்படும், இன்னொரு புறம் தொழில்நுட்பச் சேவை மிக முக்கியம். விவசாய உபகரணங்கள் துறையில் நேரடியாக சேவை வழங்குவது டிராக்டர் நிறுவனங்கள்தான். அங்கங்கே கிளைகளை நிறுவி டிராக்டர் சேல்ஸ் சர்வீஸ் செய்துவிடுகிறார்கள். அதற்கான தொழில்நுட்ப பொறியாளர்களும் இருக்கிறார்கள். ஆனால் அவர்கள் ஆட்டோமொபைல் நிறுவனம்தான், விவசாயத்துறையே இன்னும் ஒரு ஒழுங்கமைவு இல்லாத நிறுவனம், அதில் விவசாய உபகரணங்கள் நிறுவனமும் அப்படித்தான். இன்னொரு புறம் இந்தத்துறையில் உள்ள பலரும் வியாபாரியாகத்தான் உள்ளனர்.
ஆனால் நாங்கள் அப்படியல்ல. ஏறக்குறைய 42,000 சதுர அடியில் உதிரி பாகங்களை உருவாக்கி மேலாண்மை செய்துவருகின்றோம். 25 பொறியாளர்கள் அடங்கிய குழுவைப் பராமரித்துவருகின்றோம். அதுமட்டுமல்லாமல் எங்கள் உபகரணங்கள் மத்திய அரசின் சான்றிதழ் பெற்றவை, அதற்கான சோதனை அறிக்கைகளையும் நாங்கள் பெற்றிருக்கின்றோம். இதனால் மற்றவர்களைவிட தரத்திற்கான உறுதியை நாங்கள் பின்பற்றுகின்றோம்.

``இந்தியா முழுவதும் பெரிய விவசாய இயந்திரங்களைத் திறமையாகவும் பாதுகாப்பாகவும் விநியோகிக்க கோவை கிளாசிக் இன்டஸ்ட்ரீஸ் என்ன உள்கட்டமைப்பு மற்றும் செயல்முறைகளைக் கொண்டுள்ளது?”
``தமிழ்நாட்டில் மட்டும் பி2சி முறையில் இயங்குகின்றோம். வாடிக்கையாளர்கள் ஆர்டர் கொடுத்தால் நாங்களே நேரடியாக அவர்கள் வீட்டிற்கு/தோட்டத்திற்குச் சென்று நிறுவிவிடுகின்றோம். இதர மாநிலங்களில் நாங்கள் நேரடியாக சென்று சேவை கொடுக்க முடியாது என்பதால் 12 மாநிலங்களில் 200 விநியோகஸ்தர்கள் வழியே விற்பனை மற்றும் விற்பனைக்கு பின்னான சேவைகளை அளித்து வருகின்றோம். இந்த அடிப்படையில்தான் நாங்கள் செயல்பட்டு வருகின்றோம்.”
``உங்கள் தயாரிப்பு பட்டியலில் விவசாய ட்ரோன் சேர்க்கப்பட்டிருப்பதைக் கருத்தில் கொண்டு, ட்ரோன்கள் வழியே மருந்து தெளிப்பதில் நீங்கள் எதிர்பார்க்கும் சவால்கள் மற்றும் வாய்ப்புகள் என்ன? இந்த முறையில் மருந்து தெளிப்பது பாதுகாப்பானதா?”
``ட்ரோன் அட்வான்டேஜ் மிக அதிகம். ஒரு ஏக்கரில் மருந்து அடிக்க 5 நிமிடத்திற்கு உள்ளாக மருந்து அடித்துவிடுவார்கள். ஆனால் மனிதர்கள் அடிக்கும்போது 30 முதல் 40 டேங்க் மாத்தி மாத்தி அடிக்க வேண்டும். அதும் இல்லாமல் மருந்து அவர்கள் மேல் பட்டுக்கொண்டே இருக்கும், அதனால் அவர்களுக்கு நாளடைவில் நிறைய நோய்கள் வரலாம். ஆனால் ட்ரோன் என்பது அப்படியல்ல, அதை எங்கிருந்து வேண்டுமானாலும் இயக்கலாம். எதிர்காலத்தில் எல்லோர் வீட்டிலும் பல தரப்பட்ட பணிகளைச் செய்ய ட்ரோன் இருக்கும், அதில் மருந்துத் தெளிக்கவும் ஒரு ட்ரோன் நிச்சயம் இருக்கும்.
ட்ரோன் இயக்குவதற்கான ட்ரோன் ஓட்டுநர்கள் மிகக்குறைவாக உள்ளனர். குறிப்பாக விவசாயத்துறையில் மருந்துத் தெளிக்க. அதேபோல் ட்ரோனுக்கான தொழில்நுட்ப பொறியாளர்களும் மிகக் குறைவாக உள்ளனர். உணவு விநியோகிக்க, மருந்து தெளிக்க என ட்ரோன் தேவைப்படும்போது அதற்கான ட்ரோன் ஓட்டுநர்கள், பொறியாளர்கள் இன்னும் அதிக அளவில் தேவை."
``இந்தியாவின் எந்தெந்த பகுதிகளில் கோவை கிளாசிக் இன்டஸ்ட்ரீஸ் தனது பொருட்களை முதன்மையாக வழங்குகிறது? அவர்கள் வெளிநாடுகளுக்கும் ஏற்றுமதி செய்கிறார்களா?"
``இந்தியாவில் கோவை கிளாசிக் இன்டஸ்ட்ரீஸ் விற்பனையில் தமிழ்நாடு முதலிடம், அதன்பின் ஆந்திரா மற்றும் தெலங்கானா, அதற்குப்பிறகு மகாராஷ்டிரா, ஒடிசா, பஞ்சாப், காஷ்மீர் ஆகிய மாநிலங்களில் விற்பனை செய்து வருகின்றோம். இது மட்டுமல்ல ஆசியாவில் முக்கிய நாடுகளுக்கும் கோவை கிளாசிக் இன்டஸ்ட்ரீஸ் உபகரணங்களை ஏற்றுமதி செய்து வருகின்றோம். மிக முக்கியமாக தேங்காய் சார்ந்த உபகரணங்கள் இலங்கை, மலேசியா, தாய்லாந்து, இந்தோனேசியா போன்ற நாடுகளுக்கு ஏற்றுமதி செய்து வருகின்றோம்.

``கோவை கிளாசிக் இன்டஸ்ட்ரீஸின் சிறந்த விற்பனை இயந்திரங்களில் உள்ள புதுமையான அம்சங்கள் மற்றும் தொழில்நுட்பங்கள் என்ன?"
``பவர் வீடர்ஸ், கியர் டிரைவ் வழியே கொடுத்திருப்பதால் எங்களது நிறுவனத்திற்கு நல்ல வரவேற்பு இருக்கின்றது. வெகு குறைவான இடத்தில் உள்ள களைகளைக் களையவும் எங்களது உபகரணங்களால் முடியும் என்பதால் நிச்சயம் இதற்கு நல்ல வரவேற்பு இருக்கிறது. பவர் வீடர்கள் விரைவில் மின் பவர் வீடர்களைக் கொண்டுவர உள்ளோம். இப்போது ரிமோட் வழியே இயங்கும் பவர் வீடர்களையும் சந்தையில் அறிமுகப்படுத்தியுள்ளோம்.
``நிறுவனம் ஆரம்பித்தது முதல் இப்போது வரை சந்தித்த சவால்கள் என்ன? அது முதலீடு, ஆராய்ச்சி, பொருளின் தரம், விற்பனை அல்லது சேவை தொடர்பானதா?"
``பெரும் சவால் என்பது விவசாயிகளிடையே நமது உபகரணங்களைக் கொண்டுபோய்ச் சேர்ப்பதுதான். எடுத்த உடனேயே யாரும் ஏற்றுக்கொள்வதில்லை. இதை ஏற்றுக்கொள்ளவே சில பல வருடங்கள் ஆகும். 2010ல் ஆரம்பித்த தேங்காய் டிஹஸ்கிங் (தோலுரிக்கும் இயந்திரம்) 10 வருடமாகத் தொடர்ந்து விழிப்புணர்வு ஏற்படுத்திக்கொண்டு வந்தோம். ஆனால் அது எப்போது நல்ல விற்பனை நடந்தது என்றால் கோவிட் பெருந்தொற்றுக் காலத்தில்தான். 10 வருடமாக நாங்கள் விற்ற தேங்காய் தோலுரிக்கும் இயந்திரங்களைவிட கோவிட் பின் 3 வருடங்களில் அதிகமாக இருந்தது. அது வரை நாங்கள் செய்த முதலீடு, ஆராய்ச்சி, பொருளின் தரத்தை நாங்கள் மாற்றவில்லை. ஏனெனில் எங்களுக்குத் தெரியும் இது நிச்சயம் தேவை. எனவே மிகப்பெரிய சவால் என்பது விவசாயிகளை வாங்கவைப்பதுதான்"
`கோவை கிளாசிக் இன்டஸ்ட்ரீஸ் எதிர்கால திட்டம் என்ன?'
``எங்களுடைய கனவுத் திட்டம் ஒரு ஆள், ஒரே கருவி, பல விதமான பயன்பாடு.
அமெரிக்கா போன்ற நாடுகளில் 500 ஏக்கர், 1000 ஏக்கர் வைத்திருப்பார்கள், அவர்களுக்கு இந்த உபகரணங்கள் உபயோகமாக இருக்கும். ஆனால் இந்தியாவில் அப்படியில்லை, வெகு குறைவான இடத்தில் நாம் எந்த ஆட்டோமேஷனும் செய்ய முடியாது. குடும்ப பாத்தியத்திற்கு உட்பட்டது, அப்படியே வாரிசுகளுக்குச் செல்லச் செல்லக் குறைந்துகொண்டே வரும். இங்கே நுட்பங்களை அறிமுகப்படுத்தினால் செலவு அதிகமாகும். ஆனால் உலகத்தில் அறிமுகமாகும் எந்தத் தொழில்நுட்பமும் எங்களது கருவியில் குறைவான செலவில், ஒரே கருவியில், ஒரே ஆள் மட்டும் பல விதமான கருவிகளைப் பயன்படுத்தி லாபமடைய வேண்டும். அது போன்ற கருவிகளை நாங்கள் உருவாக்க வேண்டும் என்பதே எங்கள் இலக்கு. எங்கள் கனவு!"
கனவு மெய்ப்பட வாழ்த்துக்கள்!