Travel Contest: ஃபூஜி எரிமலையின் குளிர்ச்சி; ஹிரோஷிமாவின் அமைதி; ஜப்பான் எப்படி இருக்கிறது?
வாசகர்களை, எழுத்தாளர்களாக, பங்களிப்பாளர்களாக மாற்றும் விகடனின் ‘My Vikatan’ முன்னெடுப்பு இது. இந்தக் கட்டுரையில் இடம்பெற்றுள்ள கருத்துகள் அனைத்தும், கட்டுரையாளரின் தனிப்பட்ட கருத்துகள். விகடன் தளத்தின் கருத்துகள் அல்ல - ஆசிரியர்
தொழில் நுட்பங்கள், செய்யும் பணிகளில் ஒழுக்கம், நேரம் தவறாமை, நேர்மை, சுறுசுறுப்பு என வியக்க வைக்கும் ‘உதய சூரியனின் நாடு’ என அழைக்கப்படும் ஜப்பானுக்குச் செல்வது என் நெடுநாள் கனவாக இருந்தது.
இரண்டு ஆண்டுகளுக்கு முன் ஏப்ரல் மாதம் ஜப்பானின் புகழ் பெற்ற செர்ரி ப்ளாசம் திருவிழாவைக் காண நானும் என் கணவரும் ஒரு குழுவுடன் இணைந்து ஜப்பான் செல்லும் வாய்ப்பு கிடைத்தது. ஆஹா! என்ன ஒரு அற்புதமான அனுபவம்!.

நாங்கள் ஹைதராபாத்திலிருந்து மலேசியா சென்று அங்கிருந்து டோக்கியோ சென்றோம். ஹனேடா விமான நிலையத்திலிருந்து மிக விரைவாகக் குடி நுழைவு சோதனைகளை முடித்துவிட்டு வெளியே வந்தோம்.
நடுநிசியாகி விட்டதால் நேராக நாரிடா என்ற இடத்தில் ஏற்பாடு செய்திருந்த ஹோட்டலுக்குச் சென்று ஓய்வெடுத்துக் கொண்டோம்.
செர்ரி ப்ளாசம் திருவிழா
மறுநாள் அருகிலுள்ள பூங்காவுக்குச் சென்று செர்ரி மலர்கள் பூத்துக் குலுங்கி நம்மை வரவேற்றதைப் பார்த்து அப்படியே சொக்கி நின்றோம்.
ஜப்பான் முழுவதும் வசந்த காலத்தில் அழகாகப் பூத்துக் குலுங்கும் செர்ரி மலர்கள் நம்மை மயக்கி சொர்க்கத்திற்கே அழைத்துச் செல்வது பிரமிப்பாக இருக்கிறது.
உலகின் பல பகுதிகளிலிருந்தும் செர்ரி மலர் திருவிழாவைக் காண வந்த சுற்றுலாப் பயணிகள் கூட்டம் அலை மோதியது.

செர்ரி மலர்கள் வருடத்தில் மார்ச் மற்றும் ஏப்ரல் மாதங்களில் மட்டுமே பூக்கின்றன. பிறகு உடனே பூக்கள் உதிர்ந்து இலைகள் வந்து விடுகின்றன.
“எதுவும் எப்போதும் நிலைக்காது” இது ஜப்பானியர்களின் நம்பிக்கை.
பூத்திருக்கும் செர்ரி மலர் மரங்களின் கீழ் அமர்ந்து உணவு, பானங்கள் மற்றும் இசையுடன் செர்ரி மலர் திருவிழாவைக் கொண்டாடுகின்றனர். நாங்களும் அதை அனுபவித்தோம்.
பிறகு மிகப் பழமையான செசோஜி புத்தர் கோயிலுக்குச் சென்றோம். கோயில்களில் வழிபாடு, சிவப்பு நிற டோரி, திருவிழாக்கள் அனைத்துமே நம் நாட்டு முறையில் இருப்பது போல எனக்குத் தோன்றியது.

கோயில் முகப்பின் வாயிலில் நம் கோயில்களில் உள்ள துவாரபாலகர்கள் போல் உருவங்கள் இருபுறமும் இருக்கின்றன. நாம் அன்னபூரணியை வழிபடுவது போல இங்கும் அரிசி தேவதையை வணங்கி நன்றி செலுத்துகிறார்கள். மீனவர்களின் கடவுளுக்கென கோயில் உள்ளது.
ஜப்பானியப் பாரம்பரிய உடையான 'கிமோனோ' உடையை நாங்களும் அணிந்து மகிழ்ந்தோம். அவர்களின் பாரம்பர்ய தேநீர் ‘மாட்சா டீ’ மற்றும் அரிசி உணவான சுஷியைச் சுவைத்தோம். ஆனால் அதன் சுவை எனக்குப் பிடிக்கவில்லை.
இங்குள்ள வெந்நீர் நீரூற்றுகளில் வேக வைத்த முட்டைகள் கறுப்பு நிறமாக மாறி விடுமாம்.
அந்த ஒரு முட்டையைச் சாப்பிட்டால் வாழ்நாளின் ஏழு வருடங்கள் கூடும் என்பது ஜப்பானியர்களின் நம்பிக்கை என்று எங்கள் கைடு பிரதீப் கூறினார்.

TOKYO SKY TREE
டோக்கியோவில் உள்ள ஒளிபரப்பு மற்றும் தொலைத்தொடர்பு கோபுரத்தைப் பார்க்கச் சென்றோம். இது ஜப்பானில் உள்ள உயர்ந்த கோபுரம்.
இதன் உயரம் 634 மீட்டர். பொது மக்கள் குறிப்பிட்ட தளம் வரை செல்ல அனுமதி உண்டு. மேலிருந்து தெரிந்த டோக்கியோ நகர முழு காட்சி அற்புதமாக இருந்தது.
ஜப்பானியர் அதை 'ஃபியூஜி சான்' என்று சொல்கிறார்கள். ஜப்பானியர்களின் மூன்று புனித மலைகளுள் ஃபூஜியும் ஒன்று.

ஜப்பானின் உயரமான ஃபூஜி எரிமலையின் நான்காவது லெவல் வரை நாங்கள் செல்ல முடிந்தது. அந்த இடத்திலேயே தாங்க முடியாத குளிர் நடுக்கியது.
எரிமலைக்குச் சிறிது தூரத்தில், செல்லும் வழியிலேயே எரிமலை முழுவதையும் நன்றாகக் காண முடிந்தது. அங்கிருந்தே போட்டோ எடுத்தோம்.
கலங்க வைத்த ஹிரோஷிமா
புல்லெட் ரயிலில் ஹிரோஷிமா சென்றது மறக்க முடியாத அனுபவம். காற்றில் பறப்பது போல் உணர்ந்தேன்.
ஹிரோஷிமா ரயில் நிலையத்திலிருந்து பேருந்தின் மூலம் அணுகுண்டு விழுந்த நினைவிடத்திற்குச் சென்றோம். மனிதக்குல அழிவின் உச்சத்தைப் படம் பிடித்துக் காட்டும் அருங்காட்சியகம் ஒன்றிற்குச் சென்றோம்.

அணுகுண்டு தாக்குதல் எத்தகைய பின் விளைவுகளை ஏற்படுத்தியது. அது எவ்வாறு இன்றும் பாதித்து வருகின்றது என்பதை அங்குள்ள புகைப்படங்கள் விளக்கின. அவற்றைப் பார்த்தபோது மனம் கனத்தது.
நாரா மான் பூங்கா
நாரா ஜப்பானின் மற்றுமொரு புகழ்பெற்ற சுற்றுலா மையம். ஜப்பானின் தலைநகராய் முன்பு இருந்தது. இங்குள்ள டோட்டய்ஜி ஆலயத்திற்கும் மான் பூங்காவிற்கும் சென்றோம்.
நாராவில் சுற்றுலாப் பயணிகளைக் கவரும் முதலிடம் அங்குள்ள மான் பூங்காதான். ஆயிரக்கணக்கான மான்கள் அங்கே சுதந்திரமாகச் சுற்றித் திரிகின்றன.
சுற்றுலாப் பயணிகள் மான்களுக்கு அங்கு விற்ற பிஸ்கெட்டுகளை வாங்கிக் கொடுத்து மகிழ்கின்றனர். மான்களும் ஜப்பானிய ஒழுங்கைக் கடைப்பிடிப்பது அதிசயம் தான்.

ஜப்பான் பாரம்பர்யக் கலைகள் மற்றும் பழமையான நாகரிகத்தைக் கடைப்பிடித்தாலும் உலகின் வேறெங்கும் இல்லாத தொழில் நுட்பங்கள் கொண்ட நாடு.
வயதானவர்களுக்குக் கொடுக்கும் மரியாதை, பணிவு, செய்யும் உதவி, எங்கும் சுத்தம் எதிலும் சுத்தம் என அவர்களிடமிருந்து கற்றுக் கொள்ள நிறைய இருக்கின்றன.
ஜப்பானியர்கள் இன்று உலகமே வியக்குமளவு உயர்ந்ததற்குக் காரணம் அவர்களுடைய தேசப்பற்று, விடாமுயற்சி கடின உழைப்புமே ஆகும்.
நில நடுக்கம், புயல் என இயற்கை பேரிடர்களால் அடிக்கடி பாதிக்கப்பட்டாலும் அதிலிருந்து விரைவில் மீண்டு முன்னேறுவதை நாம் அவசியம் கற்றுக் கொள்ள வேண்டும்.

எங்கள் ஜப்பான் சுற்றுலாப் பயணம் மனதைக் கவர்ந்ததோடு மிகவும் பயனுள்ளதாகவும் இருந்தது. ஏனெனில் அந்த நாட்டு மக்கள் ஆரோக்கியமான வாழ்க்கை முறையைக் கடைப்பிடிக்கவும், ஒவ்வொரு அம்சத்திலும் முன்னேற்றத்தை நோக்கிச் செயல்பட அர்த்தமுள்ள வழிகளை வழிநடத்தவும் எங்களுக்கு ஊக்கமளித்தனர்.
எங்கள் ஜப்பானிய வழிகாட்டி குமி, எங்கள் சுற்றுலா நண்பர்கள் அனைவரும் சுற்றுலாப் பயணத்தில் திருப்தி அடைவதை உறுதி செய்வதற்கான அவரது அர்ப்பணிப்பை நாங்கள் மறக்க முடியாது.
புறப்படும் முன் 'சயோனாரா' என்று எங்கள் ஜப்பானிய கைடு குமியிடம் சொல்லி விடை பெற்றோம்.
-வி.ரத்தினா
ஹைதராபாத்
My Vikatan-க்கு உங்களது `சுற்றுலா' கட்டுரை

இனி வாசகர்கள் விகடன் அறிவிக்கும் மாதாந்திர தலைப்பை மையப்படுத்தி கட்டுரைகள் அனுப்பலாம்.
இந்த மாதத்திற்கான தலைப்பு - `சுற்றுலா'. சுற்றுலா என்கிற தலைப்பில் My Vikatanக்கு உங்களது கட்டுரை படைப்புகளை அனுப்பலாம். நீங்க சுற்றுலா போன அனுபவமாக இருக்கலாம், பார்க்க வேண்டிய தலங்களாக இருக்கலாம், சுற்றுலா போகும் போது செய்ய வேண்டிய ஏற்பாடுகள் குறித்த தகவல்களாகவும் இருக்கலாம். ஆனால், உங்களின் சொந்த படைப்பாக, இதுவரை எந்த தளத்திலும் வெளிவராத படைப்பாக இருக்க வேண்டும், புகைப்படங்களுடன் அனுப்பவேண்டும். தேர்வு செய்யப்படும் கட்டுரைகள் அனைத்தும் பிரசுரம் ஆகும்.
வாசகர்களை உற்சாகப்படுத்தும் நோக்கில், இந்த மாதம் அனுப்பப்படும் பயணக் கட்டுரைகளில் சிறந்த கட்டுரைகள் தேர்ந்தெடுக்கப்பட்டு பரிசுத் தொகை வழங்கப்பட உள்ளது.
பரிசுத்தொகை விவரம்:
முதல் பரிசு : ரூ. 2,500 (2 வெற்றியாளர்கள்)
இரண்டாம் பரிசு : ரூ. 1000 (5 வெற்றியாளர்கள்)
நினைவுப் பரிசு: ₹500 (10 வெற்றியாளர்கள்)
நினைவில் கொள்க:
நீங்க கட்டுரையை அனுப்ப வேண்டிய கடைசி நாள் ஏப்ரல் 20, 2025
ஒருவர் ஒன்றுக்கு மேற்பட்ட கட்டுரைகளை அனுப்பலாம்.
உங்கள் படைப்புகளை: my@vikatan.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பலாம்
விகடனுக்கு என்று பிரத்யேகமாக அனுப்பப்படும் கட்டுரைகள் மட்டுமே பரிசீலிக்கப்படும்
உங்கள் படைப்பை திருத்தவோ, பிரசுரிக்கவோ, நிராகரிக்கவோ முழு உரிமையும் விகடனுக்கு இருக்கிறது.
கட்டுரையின் தரத்தின் அடிப்படையில் வெற்றியாளர்கள் விகடன் நடுவர் குழுவால் தேர்ந்தெடுக்கப்படுவார்கள்.
விகடனில் உங்களுக்கென ஒரு பக்கம்...
உங்கள் படைப்புகளைச் சமர்ப்பிக்க - my@vikatan.com என்ற மின்னஞ்சலுக்கு அனுப்புங்கள்!

ஏதோ ஓர் ஊரில், எங்கோ ஒரு தெருவில் நடந்த ஒரு விஷயம்தான் உலகம் முழுக்க வைரலாகிறது. உங்களைச் சுற்றியும் அப்படியொரு வைரல் சம்பவம் நடந்திருக்கலாம்... நடந்துகொண்டிருக்கலாம்... நடக்கலாம்..! அதை உலகுக்குச் சொல்வதற்காகக் களம் அமைத்துக் கொடுக்கிறது #MyVikatan. இந்த எல்லையற்ற இணையவெளியில் நீங்கள் செய்தி, படம், காணொளி, கட்டுரை, கதை, கவிதை என என்ன வேண்டுமானாலும் எழுதலாம். ஃமீம்ஸ், ஓவியம் என எல்லாத் திறமைகளையும் வெளிப்படுத்தலாம்.